நாடாளுமன்றத்தில் ஒருநாள் உணர்ச்சிகரமான பேச்சை தொடங்கி முடித்த போது, இந்த இளைஞர் ஒருநாள் பிரதமர் ஆவார் என்று அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு சொன்னார். அவர் கைநீட்டிய இடத்தில் அடல் பிகாரி வாஜ்பாய் நின்று கொண்டிருந்தார். கவிஞர், பேச்சாளர், அரசியல்வாதி என அத்தனை குணாம்சங்களையும் கொண்டிருந்த அவருக்கு மோதிரக் கையால் விழுந்த முதல் குட்டு அது.
கவுரவ் கான் கான் பாண்டவ் ஹெயின் என்ற இந்தி கவிதையில் ஏழை அழுத கண்ணீரை விவரித்த வாஜ்பாய், பின்னாளில் வேதாந்தங்கள் மூலம் சித்தாத்தங்களைக் கட்டி போடும் வித்தையைச் செய்து காட்டினார். கருத்து முதல் வாதத்தால் பொருள் முதல்வாதத்தை முறியடித்தார். பொக்ரான் அணுகுண்டு சோதனையையும், கார்கில் போரையும் வெற்றிகரமாக முடித்த அவர், சின்னப்பிள்ளை என்ற ஏழைத்தாயின் காலில் விழவும் தயங்கியதில்லை
வாஜ்பாய் ஒரு மனிதர்
ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தில் மூழ்கிப்போன வாஜ்பாயால் ஒரு மனிதராகவும் இருக்க முடிந்தது என மதச்சார்பற்ற தலைவர்கள் அவரைப் புகழ்ந்தார்கள். அதையும் கடந்த கவிஞராகவும், பேச்சாளராகவும், அரசியல்வாதியாகவும் பல்வேறு சாதனைகளை வென்றெடுப்பவராக இருந்தார்.
நேருவை மீட்டவர்
1977 ஆம் ஆண்டு வெளியுறவுத்துறை அமைச்சராகப் பதவியேற்ற வாஜ்பாய் செனத் பிளாக்கில் நுழைகிறார். அப்போது அங்கிருந்த நேருவின் படம் மாயமாகி இருப்பதைக் கண்டு மனம் புளுங்கிப் போகிறார். உடனே அதிகாரிகளை அழைத்து நேருஜியின் படத்தை அதே இடத்தில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கிறார் வாஜ்பாய்.
நேருவின் வாய் முகூர்த்தம்
1957 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் அருவியாய் கொட்டிய வாஜ்பாயின் உரையில் பிரதமர் ஜவஹர்லால் நேரு மூழ்கிப்போனார். அப்போது அவர் சொன்னார் இந்த இளைஞர் ஒரு நாள் இந்திய நாட்டை ஆளப் போகிறார் என்று. அவரது தீர்க்க தரிசனம் 40 ஆண்டுகளுக்குப் பிறகு நனவானது. நேருவை மானசீக தலைவராக ஏற்றுக்கொண்ட அவர், தாராளவாத பன்முகத் தன்மையைப் பின்பற்றினார். அதனால் வாஜ்பாய் நேருவின் வலதுசாரி என அழைக்கப்பட்டார்.
வாஜ்பாய் தோற்றம்
1924 டிசம்பர் 25 ஆம் தேதி கிருஷ்ணாதேவி- கிருஷ்ணபிகாரி வாஜ்பேயி தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். அவரது அப்பா குவாலியரில் பள்ளி தலைமை ஆசிரியராக இருந்தார்.
கல்வித் தகுதி
இளநிலை பட்டப்படிப்பை குவாலியரில் உள்ள விக்டோரியா கல்லூரியிலும், முதுகலைப் பட்டப்படிப்பை கான்பூர் டி.ஏ.வி கல்லூரியிலும் பயின்றார். கல்லூரியில் முதல் வகுப்பில் தேர்ச்சி அடைந்தார்.
அரசியல் பிரவேசம்
1940 களில் குவாலியரில் ஆரிய சமாஜ் இயக்கத்தின் யூத் விங்கில் இணைந்தார். அப்போதுதான் அவரது சகோதரர் பிரேம் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறைசென்றார். 1939 இல் ஆர்.எஸ். எஸ் இயக்கத்தில் இணைந்த அவர் 1947 ஆம் ஆண்டு முழுநேர உறுப்பினராக அங்கீகரிக்கப்பட்டார். 1951 ஜன சங்கத்தின் தேசிய செயலாளராகவும், 1968 இல் ஜன சங்கத்தின் தேசிய தலைவராக உயர்ந்தார்.
பேச்சில் கவர்ந்தவர்
1977 இந்திராகாந்தியின் அவசரநிலைப் பிரகடனத்துக்கு எதிராக ராம்லீலா மைதனாத்தில் கண்டனக் கூட்டம் நடைபெற்றது. இதில் மொரார்ஜி தேசாய், ஜெகஜீவன்ராம், சரண்சிங் கலந்து கொண்ட அந்த மேடையில், வாஜ்பாயின பேச்சு அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது. இந்திராகாந்தி முர்டாபாத், அடல் பிகாரி சிந்தாபாத் என்ற முழக்கம் வானதிர எழுந்தது.
ஆட்சி நிர்வாகம்
ஆட்சி நிர்வாகத்தில் இந்திராகாந்திக்கு சளைத்தவராக வாஜ்பாய் இல்லை. நதிநீர் இணைப்புத் திட்டம், தொழில்துறை மற்றும் வேளாண் வளர்ச்சிக்காகத் தங்க நாற்கரச்சாலை திட்டங்களைத் தீட்டினார். பொக்ரான் அணுகுண்டு ஆய்வு, கார்க்கில் போர் என அவர் எடுத்த முயற்சிகள் வெற்றிகரமாக அமைந்தது.
இணக்க உறவு
வாஜ்பாய் ஒரு சமத்துவத் தூதராக அறியப்பட்டார். பாகிஸ்தானுடன் இணக்கமான உறவுக்குப் பல்வேறு முயற்சிகளை எடுத்தார். 1999 பிப்ரவரி 19 அன்று இரு நாடுகளுக்கிடையே பேருந்து போக்குவரத்தை தொடங்கி வைத்தார். நண்பர்களை மாற்றலாமே தவிர, அண்டை நாடுகளை மாற்ற முடியாது என விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தார்.
வசைமாரிகள்
உட்கட்சிக்குள் பல்வேறு வசைமாறிகள் வாஜ்பாய் மீது விழுந்தன. பா.ஜ.க மூத்த தலைவர் கோவிந்தாச்சார்யா, வாஜ்பாய் ஒரு முகமூடி என்றார். கட்சிக்குள் அவருக்குச் செல்வாக்கு இல்லை என்று பகிரங்கமாகக் கருத்துத் தெரிவித்தார்.
பாரத ரத்னா விருது
2015 ஆம் ஆண்டு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. உயிரோடு இருக்கும்போதே மிகப்பெரிய விருதை பெற்றவர் வாஜ்பாய்.
வாஜ்பாய் மறைவு
வாஜ்பாய் பா.ஜ.கவின் மிகப்பெரிய தலைவர்களில் ஒருவர் என்பதை விட, ராஜதர்மத்தை நம்பும் ஆட்சியாளர் என்று ஊடகவியலாளர் உல்லக் வர்ணிக்கிறார். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லாத மனிதராகத் திகழ்ந்த வாஜ்பாய் நேற்று இயற்கை எய்தினார்.