உலகிலேயே நம்பகமான தொழில்நுட்பங்களைக் கொண்ட ஆப்பிள் நிறுவனத்தின் பிரதான கணினியை ஹேக் செய்துள்ள சிறுவன் ஒருவன், அதில் சேமிக்கப்பட்டிருந்த பாதுகாப்பான கோப்புகளையும் பதிவிறக்கம் செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளான்.
ஆப்பிள் நிறுவனம் கொடுத்த புகாரின் பேரில் அமெரிக்கக் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளதால் டெக் உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளான்.
ஹேக் செய்யப்பட்ட ஆப்பிள்
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் படித்து வரும் 16 வயது பள்ளி மாணவனுக்கு, ஆப்பிள் நிறுவனத்தில் சேர வேண்டும் என்பது ஆசையாக இருந்துள்ளது. அந்தத் தணியாத ஆசையால் ஆப்பிள் நிறுவனத்தின் கணினிகளில் புகுந்து விளையாடத் தொடங்கினான். ஒருநாள் அவனது தொழில்நுட்ப அறிவால், ஆப்பிள் நிறுவனத்தின் பிரதான கணினி ஹேக் செய்யப்பட்டது. அதிலிருந்த பாதுகாப்பான கோப்புகளும் பதிவிறக்கம் செய்யப்பட்டன.
வழக்குப்பதிவு
டன்னல் மற்றும் வி.பி.என் என்ற மென்பொருள் உதவியுடன் அனாமதேயமாகப் பதிவிறக்கம் செய்யப்பட்டதாகக் கூறியுள்ள ஆப்பிள் நிறுவனம், அந்தச் சிறுவன் மீது அமெரிக்கக் காவல்துறையில் புகார் அளித்துள்ளது.
16 வயது பில்கேட்ஸ்
இது தொடர்பாகப் பேசிய சட்ட வல்லுநர் ஒருவர், வளர்ந்து வரும் மென்பொருள் வல்லுநர்களிடையே ஹேக்கிங் ஒரு பகுதியாக இருக்கிறது என்று கூறினார். இந்தச் சிறுவன் இன்னொரு பில்கேட்ஸ் என்று தெரிவித்துள்ள அவர், ஒரு கார்ப்பரேஷன் கணினியை பில்கேட்ஸ் ஹேக் செய்ததாக நினைவு கூர்ந்துள்ளார். ஆதனால் மேதைகள் உருவாவதை தடை செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
கவனத்தை ஈர்த்த சிறுவன்
உலகின் மிகப்பெரிய வர்த்தகர்கள் முதல் அரசியல்வாதிகள் வரை ஆப்பிள் நிறுவனத்தின் மொபைல் போன்களைப் பயன்படுத்தி வருகிறார்கள். ஏனென்றால் தகவல்களை ஹேக் செய்ய முடியாது என்ற நம்பிக்கைதான் அது. அதற்கு 16 வயது சிறுவன் விடுத்த சவால் சிலிக்கன் வெல்லியின் கவனத்தை ஈர்த்துள்ளது.