உலகப் பொருளாதாரத்தின் தரவரிசையில் பிரான்ஸ் நாட்டைக் கடந்த ஆண்டுப் பின்னுக்குத் தள்ளிய இந்தியா, அடுத்த ஆண்டுப் பிரிட்டனை புறம் தள்ளி 5 வது இடத்தை நோக்கி முன்னேறும் என்று நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மற்ற நாடுகளில் பொருளாதார வளர்ச்சி விகிதங்கள் குறைவாக உள்ளதாகக் கூறியுள்ள அவர், அடுத்த 10, 20 ஆண்டுகளில் உலகப் பொருளாதார நாடுகளின் முதல் 3 இடங்களுக்குள் இந்தியா வரும் என்றார்.
உலக வங்கி அறிக்கை
உலகப் பொருளாதாரத்தில் 6 வது இடம் வகித்த பிரான்சை இந்தியா முந்தி விட்டதாக உலக வங்கி அறிவித்தது. முதல் இடத்தை அமெரிக்காவும், அடுத்தடுத்த இடங்களைச் சீனா, ஜப்பான், ஜெர்மனி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும் கைப்பற்றியுள்ளன. 2017 ஆம் ஆண்டில் புதிய செயல்திறனை பெற்றுள்ள இந்தியா, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2,597 டிரில்லியன் டாலர்களை ஈட்டி பிரான்சை பின் தள்ளியது.
வர்த்தகப் போர் சவால்
சர்வதேச கச்சா எண்ணெய் விலையாலும், வர்த்தக யுத்தத்தாலும் அறைகூவல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று ஜேட்லி ஏற்கனவே கூறியிருந்தார். முதலீடுகளுக்கு எளிதான வழிமுறைகள் கையாளப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
கிராமப்புற பொருளாதாரம்
ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு நிதி அமைச்சராகப் பொறுப்பேற்ற ஜேட்லி, கிராமப்புற பொருளாதாரத்தை மோடி அரசு உறுதி செய்துள்ளதாகக் கூறினார். அதேநேரம் குறைந்த வட்டி விகிதங்கள் கூடுதலான செலவினங்களை ஏற்படுத்தினால், அடுத்த 10 ஆண்டுகளில் கிராமப்புறங்களில் கணிசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தெரிவித்திருந்தார்,
விரட்டப்பட்ட வறுமை
காங்கிரஸ் ஆட்சியில் ஏழைகள், மதங்கள், சாதிகள், சமூகங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் புறக்கணிக்கப்பட்டிருந்தனர். ஆனால் அனைத்து வளங்களையும் வழங்கியுள்ள மோடி, வறுமையை விரட்டி விரைவான வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளதாக அருண ஜேட்லி தெரிவித்தார்
வளர்ச்சிக்கு உதவி
1970 மற்றும் 80 களில் நடைபெற்ற காங்கிரஸ் ஆட்சியில் ஏழைகளின் நலனுக்கான எந்தத் திட்டமும் எடுக்கவில்லை. ஆனால் மோடி ஆட்சியில் நடுத்தர வர்க்கத்தின் வளர்ச்சிக்கு நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறினார்.
பொருளாதார இலக்கு
2017- 18 ஆம் ஆண்டு நிதி ஆண்டில் 6.7 விழுக்காடு பொருளாதார வளர்ச்சி பெற்றிருந்தது. 18.19 ஆம் நிதி ஆண்டில் 7 லிருந்து 7.5 சதவீத வளர்ச்சியை எட்ட திட்டமிடப்பட்டுள்ளது.