ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கியின் வாடிக்கையாளர்கள் இந்தியாவில் உள்ள ஏடிஎம்களில் கார்டை பயன்படுத்தாமலேயே பணம் எடுக்க அனுமதிக்கப்படுவர் எனக் கடந்த வியாழனன்று ஏர்டெல் அறிவித்துள்ளது.
இந்த வசதியை அனுமதிக்கும் பொருட்டு, கிளவுட் அடிப்படையில் பணபரிவர்த்தனை சேவை வழங்கும் நிறுவனமான எம்பசிஸ் உடன் இணைந்து ஏர்டெல் நிறுவனம், உடனடி பணப்பரிமாற்றம் (Instant Money Transfer -IMT) என அழைக்கப்படும் வசதியை வழங்குகிறது.
துவக்கத்தில் 20,000 ஏடிஎம்களில் கிடைக்கும் இந்த வசதியானது, படிப்படியாக 100,000 ஏடிஎம்களுக்கு விரிவுபடுத்தப்படும்.
ஸ்மார்ட்போன், ப்யூச்சர்போன் பயனர்களுக்கும் கிடைக்கும் இந்த வசதி
இந்தப் புதிய சேவையானது மைஏர்டெல் செயலி வாயிலாக யூ.எஸ்.எஸ்.டி எண்ணைப் பயன்படுத்தி ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கியின் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும். எனவே பயனர்கள் ஸ்மார்ட்போன் அல்லது ப்யூச்சர்போன் பயன்படுத்தினாலும், அதைக் கருத்தில்கொள்ளாமல் இச்சேவையைப் பயன்படுத்த முடியும்.
முதல் இரு 'உடனடி பணப்பரிமாற்ற' பரிவர்த்தனைகளை இலவசமாக வழங்கும் ஏர்டெல், அதன் பிறகு ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ25ஐ கட்டணமாக வசூலிக்கவுள்ளது.
டிஜிட்டல் இந்தியாவை நம்புகிறோம் : ஏர்டெல்
"நாங்கள் டிஜிட்டல் இந்தியாவை நம்புகிறோம். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் சேவையை உணரச்செய்ய எம்பசிஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தம் முக்கியப் பங்குவகிக்கிறது. அதன் மூலம் மைஏர்டெல் செயலி அல்லது யூ.எஸ்.எஸ்.டி-யை பயன்படுத்தி, 1,00,000க்கும் அதிகமான ஏடிஎம்களில் போன் மூலம் பணம் எடுக்கமுடியும்" என்கிறார் ஏர்டெல் சி.ஈ.ஓ அனுப்ரதா பிஸ்வாஸ்.
கார்டு இல்லாமல் பணம் எடுப்பதற்கான இரு வழிகள்
இந்த வசதியை உடனடி பணப்பரிமாற்ற வசதி செயல்பாட்டில் உள்ள ஏடிஎம்களில் மட்டுமே பயன்படுத்த முடியும்.
மைஏர்டெல் செயலி வாயிலாக இவ்வசதியைப் பயன்படுத்த, மொபைல் எண்ணை உள்ளீடு செய்து,குறுஞ்செய்தியில் வரும் பணம் அனுப்புநரின் கடவு எண்ணை உள்ளீடு செய்து, ஓ.டி.பி எனப்படும் ஒருமுறை கடவு எண்ணை உள்ளீடு செய்து, 'ஏடிஎம் சுய-பணம் எடுத்தல்' என்பதைத் தேர்வு செய்து, எவ்வளவு பணம் வேண்டும் என்பதையும் உள்ளீடு செய்தால் பணம் உடனடியாக ஏடிஎம் இயந்திரத்தால் வழங்கப்படும்.
யூ.எஸ்.எஸ்.டி முறையைப் பயன்படுத்தினால் , பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து *400*2#க்கு அழைப்பு மேற்கொண்டு,ஏடிஎம்-ல் கார்டு இல்லா பரிவர்த்தனையைத் தேர்வு செய்து, 'ஏடிஎம் சுய-பணம் எடுத்தல்'ஐ தேர்வு செய்து, எவ்வளவு பணம் வேண்டும் என்பதையும் உள்ளீடு செய்து, எம்-பின்னை உள்ளிட்டால் பணம் உடனடியாக ஏடிஎம் இயந்திரத்தால் வழங்கப்படும்.