இன்போசிஸ் நிறுவனம் முன்னாள் தலைமை நிதி அதிகாரியான ராஜிவ் பன்சாலுக்கு அளிக்க வேண்டிய பணி நீக்க கொடை நிலுவை தொகை குறித்து அமைக்கப்பட்ட தீர்ப்பாயம் ராஜிவ் பன்சாலுக்குச் சாதமான முடிவை எடுத்துள்ளதாகப் புலம்பி வருகிறது.
இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி பதவியில் இருந்து ராஜிவ் பன்சால் 2015ஆம் ஆண்டு வெளியேறும் போது, நிர்வாகம் இவருக்கு 17.38 கோடி ரூபாயைப் பணிநீக்க கொடை (severance pay)அளிக்க ஒப்புதல் அளித்தது.
மறுப்பு
பன்சால் நிறுவனத்தை விட்டு வெளியேறி சுமார் 2 வருடங்கள் ஆன நிலையில் இன்போசிஸ் இவருக்கு வெறும் 5 கோடி ரூபாய் மட்டுமே அளித்தது. மேலும் மீத தொகையினை அளிக்க மறுப்புத் தெரிவித்தது.
வழக்கு
இந்நிலையில் மீதமுள்ள 12 கோடி ரூபாயை இன்போசிஸ் அளிக்காத நிலையில் சட்ட ரீதியில் இன்போசிஸை எதிர்கொள்ள ராஜீவ் பன்சால் முடிவு செய்தார்.
விளக்கம்
இதுகுறித்து இன்போசிஸ் கூறுகையில், ராஜீவ் பன்சாலுக்கு அளிக்க வேண்டிய தொகையில் 12 கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளது. அவரிடம் இருந்து உரிமை மற்றும் கடமைகள் சார்ந்த சில விளக்கங்கள் தேவைப்படுகிறது. இதன் காரணமாகத் தான் இதுவரை அவருக்கு நிலுவையில் உள்ள 12 கோடி ரூபாய் அளிக்கப்படவில்லை என இன்போசிஸ் நிர்வாகம் தெரிவித்து வந்தது.
பிரச்சனை
விஷால் ஷிக்கா தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த போது ஏற்கனவே ஊழியர்களுக்கு அளிக்கப்பட்ட அதிகப்படியான பணி நீக்க கொடை குறித்து இன்போசிஸ் தலைமை அலுவலகத்தில் நிர்வாகக் குழுவிற்கும் நாராயணமூர்த்தித் தலைமையிலான நிறுவனர் குழுவிற்கும் மிகப்பெரிய பிரச்சனைகள் வெடித்து இருந்தது. இந்நிலையில் தற்போது இந்த வழக்கு இன்போசிஸ் நிறுவனத்திற்குப் புதிய தலைவலியாக உருவெடுத்துள்ளது.
முடிவு
இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதிகள் உத்தரவு மற்றும் இன்போசிஸ் நிறுவன அதிகாரிகள் குழு ஆலோசனையுடன் ராஜிவ் பன்சாலுக்கு வழங்க வேண்டிய 12.17 கோடி ரூபாயினை வட்டியுடன் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
விஷால் ஷிக்கா
ராஜிவ் பன்சாலுக்கு அளிக்கப்பட வேண்டிய பணி நீக்க கொடை மற்றும் பனாயா நிறுவனத்தினைக் கையகப்படுத்தியதால் ஏற்பட்ட நட்டம் போன்ற காரணங்களுக்காக விஷால் ஷிக்கா இன்போசிஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து 2017 ஆகஸ்ட் மாதம் விலகினார்.
தலைமை நிர்வாக அதிகாரி
பின்னர் நிறுவனத்தின் தலைமை நிர்வாகப் பொறுப்பினை இடக்காலத் தலைவராக இன்போசிஸ் இணை நிறுவனரான நந்தன் நீலகேணி பொறுப்பேற்றார். பின்னர் அந்தப் பதவில் கேப்ஜெமினி நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகியான சலில் பரேக் 2018 ஜனவரி மாதம் இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பெறுப்பேற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.