தொழிலாளர் அரசு ஈட்டுறுதி கழகத்தின் (ESIC) 175-வது கூட்டம், மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத்துறை இணையமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் தலைமையில் டெல்லியில் நேற்று (18.09.2018) நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், அரசு ஈட்டுறுதி கழகத்தில் சேவைகள் மற்றும் ஈட்டுறுதி செய்யத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கப்படும் சலுகைகள் தொடர்பாகச் சிலமுக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
அடல் பிமித் வியாக்தி கல்யாண் யோஜனா
தற்போதைய மாறி வரும் வேலைவாய்ப்பு சூழலைக் கருத்தில் கொண்டு, நீண்ட காலப் பணி நிலையிலிருந்து குறுகிய கால ஒப்பந்தப் பணி நடைமுறைகள் அதிகரித்து வருவதால், 1948 ஆம் ஆண்டுத் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி சட்டத்தின் கீழ் பதிவு செய்த தொழிலாளர்களுக்காக, "அடல் பிமித் வியாக்தி கல்யாண் யோஜனா" (காப்பீடு செய்த நபரின் நல்வாழ்விற்கான அடல் திட்டம்) என்ற புதிய திட்டத்தைச் செயல்படுத்த, தொழிலாளர் அரசு ஈட்டுறுதி கழகம் ஒப்புதல் அளித்துள்ளது.
நேரடியாக நிவாரண உதவி
இத்திட்டத்தின் கீழ், அரசு ஈட்டுறுதி கழகத்தில் உறுப்பினராக உள்ள தொழிலாளர்கள் திடீரென வேலை இழக்க நேரிட்டால், அவர்கள் புதிய வேலையைத் தேடிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக நிவாரண உதவித் தொகை செலுத்தப்படும்.
ஆதார்
தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் ஆதார் எண்ணை ஈ.எஸ்.ஐ. நிறுவனத்தில் இணைப்பதை ஊக்குவிக்கும் வகையில், தொழிலாளர்கள் பணிபுரியும் நிறுவனத்திற்கு நபருக்கு ரூ.10 வீதம் வழங்கவும் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மருத்துவச் செலவுகள்
இது தவிர உயர் சிறப்பு மருத்துவச் சிகிச்சை வசதியை பெறுவதற்கு, குறைந்தது 2 ஆண்டுகள் பணியாற்ற வேண்டுமென்ற நிபந்தனை 6 மாதங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் ஈ.எஸ்.ஐ. திட்டத்தில் உறுப்பினராக உள்ள தொழிலாளர்கள் உயிரிழக்க நேரிட்டால், அவர்களது ஈமச்சடங்கிற்காக வழங்கப்படும் நிதி உதவியையும், ரூ.10,000-லிருந்து ரூ.15,000-மாக உயர்த்தவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.