மத்திய ரிசர்வ் வங்கி எனப்படுகிற ரிசர் பேங்க் ஆஃப் இந்தியா சமீபத்தில் வங்கிக் கடன்கள் (Loan) பற்றி, ஒரு திடுக்கிடும் தகவலை வெளியிட்டு இருக்கிறது. அதைக் கேட்டால் இந்திய வங்கிகள் மீதான நம்பிக்கை மேலும் மேலும் தவிடு பொடியாகி விடும். இந்தியாவின் 21 அரசு வங்கிகளின் நிதி நிலைகளை கணக்கில் எடுத்துக் கொண்டு இதைச் சொல்லி இருக்கிறது ஆர்பிஐ.
வசூல் செய்த கடன் 100 ரூபாய்
ஒரு அப்பிராணி வாங்கிய வீட்டுக் கடன், நடுத்தர மக்கள் வாங்கிய சொந்தக் கடன், விவசாயிகள் வாங்கிய விவசாயக் கடன்கள் என்று யாரை எல்லாம் வங்கிகள் மிரட்டி உருட்டி வாங்க முடியுமோ அதை எல்லாம் மிரட்டி வாங்கிவிடுகிறார்கள். ஒரு சில நேர்மையான கார்ப்பரேட் நிறுவனங்களும் தாங்கள் வாங்கிய வங்கிக் கடன்களை ஒழுங்காக திருப்பியும் செலுத்தி விடுகிறார்கள். அப்படி கடந்த ஏப்ரல் 2014 தொடங்கி மார்ச் 2018 வரையான நான்கு நிதி ஆண்டுகளில் வசூலித்த மொத்த தொகை 44,900 கோடி ரூபாய்.
வசூல் செய்யாத கடன் 600 ரூபாய்
அம்பானி, அதானி, வாடியா, டாடா போன்ற பெருந்தலைகள் வாங்கி இருக்கும் கடன்களை வசூல் செய்ய முடியவில்லை. அந்த பெரிய நிறுவனங்களுக்கு, இருக்கும் சந்து பொந்து எல்லாம் அத்துப்படியாக இருக்கிறது. அவைகளை எல்லாம் பயன்படுத்தி கார்ப்பரேட் நிறுவனங்கள் அசால்டாக கட்ட முடியாது என்று வங்கியின் நெத்தியில் அடித்துவிட்டுச் சென்ற கடன் தொகை மட்டும் எவ்வளவு தெரியுமா. 3,16,500 கோடி ரூபாய். இந்த தொகை இந்தியாவின் 23 லட்சம் கோடி பட்ஜெட் வருவாயில் 13 சதவிகிதம்.
கடந்த 10 ஆண்டுகளில்
2004 - 2014 வரையிலான காலகட்டத்தில் இப்படி கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து வசூலிக்க முடியாமல் போன தொகை1,90,662 கோடி ரூபாய். இந்தப் பத்து ஆண்டு காலத்தில் வசூலிக்க முடியாமல் போன தொகையை விட 2014 - 2018-ல் மோடி ஆட்சிக் காலத்தில் வசூலிக்க முடியாமல் போன தொகை 66 சதவிகிதம் அதிகம்
அந்த 12 பேர்
இந்த 3.16 லட்சம் கோடி தொகையில் ஒரு 12 பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன் தொகை மட்டும் 1.75 லட்சம் கோடி. இந்த பெரியவர்கள் தங்கள் கடன் பிரச்னைக்காக தேசிய நிறுவன சட்ட தீர்பாயத்திடம் (National Company Law Tribunal) முறையிட்டு இருக்கிறார்கள். இந்த தீர்ப்பாயம் கொடுக்கும் தீர்ப்பில் தான் வங்கிகளூக்கு கொடுத்த காசு திரும்ப கிடைக்குமா...? கிடைக்காதா என்பதை முடிவு செய்ய முடியும்.
அடுத்த 28 பேர்
இந்த பெரியவர்களைத் தொடர்ந்து அடுத்த 28 நடுத்தர பணக்கார கார்பப்ரேட்டுக்களின் வசூலிக்க முடியாத கடன் தொகை மட்டும் 90,000 கோடி ரூபாய். இவர்கள் "இதோ இப்ப தர்றேன். அப்ப தர்றேன்" என்று வங்கிகளை அலைக்கழித்துக் கொண்டிருக்கிறார்கள். வங்கிகளும் எப்படியாவது இவர்களிடம் இருந்து பணம் கிடைத்துவிடாதா என்று காத்துக் கிடக்கிறது.
வங்கிகள் நடவடிக்கை
"இவர்கள் கடன்களை நிதி நிலை அறிக்கைகளில் இருந்து நீக்கிவிட்டாலும் (Loan Written off ), இவர்களிடம் இருந்து வசூலிக்க வேண்டிய கடன்களை வசூலிக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்" என்று வங்கி அதிகாரிகள் வழக்கமான பதில்களை அள்ளித் தெளித்து வருகிறார்கள்.