அரசாங்கம் சொல்வது உண்மை தான். இந்திய வங்கிகளிடம் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாமல் நேரடியாக இந்தியாவை விட்டு வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்ற தொழிலதிபரை பிடித்துவிட்டார்கள். இவர்களை economic offender என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். ஆனால் நாம் எதிர்பார்த்த மல்லையாவையோ, நீரவ் மோடியையோ பிடிக்கவில்லை.
முஹம்மது யாஹியா
இந்த மனுஷன் தாங்க மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்ஷிக்கு எல்லாம் அண்ண. இந்திய வங்கிகள்ள கடன் வாங்கிட்டு, நாம பாட்டுக்கு ஜாலியா விமானம் ஏறி டாடா காட்டலாமுன்னு, இந்திய தொழிலதிபருங்களுக்கு சொல்லிக் கொடுத்த குரு. இந்த மனுஷன் வாங்குன கடன் தொகை 43 லட்சம் தான். ஆனா அதோட இன்றைய மதிப்பு சுமாரா ஒரு 2.5 கோடி தேரும்.
மல்லையாவின் அண்ணன்
இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் மல்லையாவின் பெங்களூரூவில் தான். இவர் சுமாராக ஒரு 2 - 3 வங்கிகளுக்கு அல்வா கிண்டிவிட்டு 2009-ல் வெளிநாட்டுக்கு தப்பி ஓடியவர். 2003-ல் தான் கடன் வாங்கி இருக்கிறார். அதை திருப்பிக் கட்ட முடியாமல் இந்தியாவிலேயே அங்கே இங்கே என்று சமாளித்து விட்டு, சிபிஐ வழக்குகள் மற்றும் வங்கிகளின் நடவடிக்கைகளை எதிர் கொள்ள முடியாமல் பஹரைனுக்கு பறந்துவிட்டார். சிபிஐ சிறப்பு நீதி மன்றம் இவரை குற்றவாளியாக அறிவித்தது.
உஷாரான சிபிஐ
அன்றைய தேதிக்கு மிகவும் அப்டேட் ஆன ஒரு ஐடியாவைச் சொல்லி வங்கிகளிடம் கடன் வாங்கி இருக்கிறார். அதோடு வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்லவும் அத்தனை அழகான ஒரு திட்டத்தைத் தீட்டி மொத்த இந்திய அரசாங்கத்துக்கும், குடியுரிமை அதிகாரிகளுக்கும் அழகாக டாடா காட்டியவர் என்பதால் இவரின் செய்திகள் கூட அதிகம் வெளி வராத வண்ணம் சிபிஐ பார்த்துக் கொள்கிறதாம். இவரின் வழக்கு விவரங்கள் வெளியில் வந்தால் அதை அப்டேட் செய்து புதிய தொழிலதிபர்கள் கூட பறக்கக் கூடும். அந்த அளவுக்கு நல்ல ஐடியாவாக இருக்கிறது என்று சிபிஐ அச்சப்படுகிறதாம். ஆகையால் மீடியாக்களுக்குக் கூட மிக சுமாரான படத்தைத் தான் கொடுத்திருக்கிறார்கள். மேலே பார்த்திருப்பீர்கள்.
இன்டர்போல் ரெட் நோட்டீஸ்
சர்வதேச போலீஸ் உதவியோடு நம் முஹம்மது யாஹியாவுக்கு இந்திய அரசு ரெட் நோட்டிஸ் கொடுத்து, பஹரைன் அரசாங்கத்தை நடவடிக்கை எடுக்கச் செய்திருக்கிறது. இந்தக் கடனாளியை கைது செய்ய பஹரைன் அரசாங்கத்தை பெரிய அளவில் பேசி சம்மதிக்க வைத்திருக்கிறது.
இந்தியாவில் முதன் முறையாக
இதுவரை இந்திய வங்கிகளுக்கு அல்வா கிண்டிவிட்டுச் சென்றவர்களை திரும்ப அழைத்து வந்ததே இல்லை. அதுவும் இந்தியாவில் பொருளாதார குற்றம் செய்து விட்டு தப்பிச் சென்றவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது கூட அரசுக்கு தெரிய வராமல் இருந்தது. இந்த முஹம்மது யாஹியா விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்ஸி, நிதின் சந்தேஸார, ஜதின் மேத்தா போன்ற ஆட்களை இந்தியாவுக்குக் கொண்டு வர பயன்படுத்திக் கொண்டிருக்கும் fugitive economic offenders' act, 2018 சட்டத்தைப் பயன்படுத்தவில்லை. இது கொண்டு வரப்பட்டதே 2018 தான். ஆனால் அவர் யாஹியா வெளிநாடுகளுக்கு பறந்ததோ 2009-ல் என்பதால் இந்த புதிய சட்டம் அவர் மீது பாயவில்லை.
இறுதி நடவடிக்கை
பஹரைன் அரசு முஹம்மது யாஹியாவை சில மாதங்களுக்கு முன்பே கைது செய்து விட்டார்கள். ஆனால் அவரின் அடையாளங்களைக் கண்டு பிடித்து அவர் தான் இந்தியாவில் பொருளாதாரக் குற்றம் புரிந்தவர் என்பதற்கு போதுமான ஆதாரங்களை இந்தியா மற்றும் சர்வதேச அரசுகளிடம் இருந்து திரட்டி, உறுதிப்படுத்திக் கொள்ள இத்தனை காலமாகி விட்டதாக சிபிஐ தரப்பினர் சொல்கின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை தான் முஹம்மது யாஹியா தில்லிக்கு கொண்டு வரப்பட்டு மேற்கொண்டு விசாரணை செய்து வருகிறார்கள் சிபிஐ அதிகாரிகள்.