இன்று சபரிமலையில் உச்ச நீதி மன்ற தீர்ப்பை செயல்படுத்தும் விதத்தில் ரிஹான பாத்திமா மற்றும் பத்திரிகையாளர் கவிதா பெண்களுக்கான சபரிமலை ஆலய நுழைவை உறுதி செய்ய போராடிக் கொண்டிருக்கிறார்கள். அதை கேரள தேவஸ்வம் போர்டும், பந்தள மன்னரும் எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்து பக்தர்கள் பெண்களின் வரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவில் வாசலில் சரண கோஷங்களை எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். 18 படியில் ஆலய அர்ச்சகர்கள் கோவில் நடையைச் சாத்தி விடுவோம் என்று மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள். காவல் துறை செய்வது தெரியாமல் மக்கள் கூட்டத்தை சமாதானப்படுத்தி பெண்களை அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள். ஒரு பக்கம் கேரள சுற்றுலா துறை அமைச்சர் திருப்பி அனுப்புமாறு கேரள அரசிடமே முறையிட்டுக் கொண்டிருக்கிறார். அரசும் பக்தர்கள் வெறியாட்டம் ஆடத் தொடங்குவதற்கு முன் பக்தர்களை சமாதானப்படுத்த பெண்அளை திருப்பி அனுப்ப கேரள அரசு ஓகே சொல்லி இருக்கிறது. இது எல்லாம் எதற்கு...? யாருக்கு அரசியல் லாபம்..? என்று கேட்டால் நம் மோடி ஜிக்குத் தான்.
2006
2006-ல் ஒரு மலையாள பத்திரிகையாளருக்கு அளித்த பேட்டியில் "கேரள கம்யூனிஸ்டுகள் கம்யூனிஸத்தை தங்கள் சித்தாந்தமாகக் கொண்டு இயங்குகிறார்கள். அதே நேரத்தில் கம்யூனிஸ்டுகள் பாஜக-க்கு ஹிந்துத்வா என்கிற சாயத்தையும் பூசுகிறார்கள். இந்த சாயத்தை கழுவி எங்களை கேரளத்துக்குக் காட்ட வேண்டும்" என்று சொன்னார். நீங்க சிரிச்சீங்களா...? எனக்கும் சிரிப்பு தாங்க வந்துச்சு.
2018-ல்
கடந்த செப்டம்பரில் இந்தியாவின் உச்ச நீதி மன்றம் "அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம்" என உத்தரவு பிறப்பித்துவிட்டது. இந்த ஒரு அரசியல் தீக்குச்சியைத் தான் பாஜக தேடிக் கொண்டிருந்தது. ஏன் வேறு ஏதாவது வழி இல்லையா...? என்ன செய்தாலும் கேரளத்தில் இடம் பிடிக்கவே முடியாதா...? முடியாது என்பது தான் பதில். பாஜக இந்தியா முழுவதும் பயன்படுத்திய அதே ஆயுதத்தை தான் கேரளத்திலும் பயன்படுத்த இருக்கிறது மதவாதம். ஹிந்துத்வா.
ஏன் பாஜகாவால் முடியாது
கேரள கம்யூனிஸம் முதல் காரணம். பத்தாக்குறைக்கு படித்தவர்கள் 94 சதவிகிதத்தினர். இந்த 94 சதவிகித மலையாளிகளில் பெரும்பாலானவர்கள் தினசரி செய்தித் தாள் வாசிக்கக் கூடியவர்கள். ஹிந்தி ஆங்கிலம் அல்லாத மற்ற மொழிப் பத்திரிகையில் மலையாள மனோரமா யெதித் தாளுக்குத் தான் விற்பனையில் முதலிடம். 23.8 லட்சம் தினசரிகள் நாள் ஒன்றுக்கு விற்பனை ஆகின்றன. அடிக்கடி நடக்கும் ஹர்த்தாள்கள் வேறு புரட்சி, போராட்டங்கள் என்றால் என்ன என்று சாதாரண மக்களும் உணரும் விதத்தில் நடந்து கொண்டே தான் இருக்கின்றன. இத்தனை விஷயங்கள் இருக்கும் போது எப்படி பாஜகவால் நுழைய முடியும். இருப்பினும் நுழைந்தாக வேண்டும் என்று அடம் பிடித்துக் கொண்டிருக்கிறது. காரணம் அங்கு எதிர்கட்சியாக இருக்கும் காங்கிரஸ். காங்கிரஸால் முடிகிறது என்றால் நானும் அங்கு இருக்க வேண்டுமே..? என்பது பாஜகாவின் கட்டாயம்.
1959
1959-ல் இந்திராகாந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த போது, கேரளத்தில் கம்யூனிஸ்ட் ஆட்சியப் பிடித்தார்கள். இ.எம்.எஸ் நம்பூதிரிபட் முதல்வராக இருந்தார். தேசியக் கட்சியான காங்கிரஸுக்கு, தங்களுக்கு எதிராக ஒரு வலுவான கட்சி ஆட்சியைப் பிடிப்பது அறவே பிடிக்கவில்லை. கோவம் வந்தது. கலைத்துவிட்டார். இனி கேரள அரசு குடியரசுத் தலைவர் கீழ் தான் இயங்கும், என்று சரித்திரப் புகழ் Article 356 of the Constitution of India-வைக் காட்டி காலி செய்தார். அந்த அளவுக்கு இந்தியாவில் தனக்கு எதிராக யாருமே இருக்கக் கூடாது என்று செயல்பட்டவர் இந்திரா. தற்போது என்னை எதிர்க்க ஒரு கட்சி இருந்தால் மட்டும் போதும் என்று சொல்லும் மோடி, அடுத்த தேர்தலில் கிடைக்கும் வெற்றியைப் பொறுத்து, இந்திரா காந்தியைப் போல அனைத்து எதிரிகளையும் ஒழித்தாலும் ஒழித்து விடுவார். இப்போது தங்கள் கட்சியை வடக்கில் முழுமையாக நிலை நாட்டி விட்டு, தற்போது தெற்குக்கு எழுந்தருளி இருக்கும் பாஜக என்ன சாமி கும்பிடவா சபரிமலையை கையில் எடுத்திருக்கிறது. அரசியல் எல்லாம் மதவாத ஹிந்துத்வா அரசியல்.
சபரிமலை தீக்குச்சி
2006-ல் பாஜக சொன்ன கேரள அரசியல் பிரவேசத்தை சபரிமலையில் பெண்கள் ஆலயப் பிரவேசத்தை வைத்துத் தொடங்கி இருக்கிறது. அதுவும் மாநில சட்ட மன்றத் தேர்தல் வரும் சமயம் பார்த்து இந்த தீக்குச்சி பத்திக் கொள்ள அதை ஊதிப் பெரிதாக்குவதை பக்தர்கள் செவ்வனே செய்து வருகிறார்கள். அவ்வப் போது அவர்களை முறையாகத தூண்டி விட "பெண்களை அனுமதித்தால் நாங்கள் கூட்டமாக தீக்குளிப்போம்" "பெண்கள் தீர்பினால் தான், கேரளமே வெள்ளக் காடு ஆனது" என்று பாஜகவின் அரசியல் யாகத்திற்கான நெய்யை மட்டும் அவ்வப்போது சிறப்பாக உருக்கி ஊற்றிக் கொண்டு வருகிறார்கள் பாஜகவினர். இப்போது கிட்டதட்ட பாஜகவின் கேரள அரசியல் களம் தயார். அவர்கள் ஆணித்தரமாக அடித்துப் பேச ஒரு விஷயம் கிடைத்துவிட்டது.
பெண்கள் நுழைந்தால்
ஆர்எஸ்எஸ் சபரிமலை தீர்ப்பு வந்த சில தினங்களில் ஆதரித்துவிட்டு, சமீபத்தில் அதை எதிர்த்து போராடியது நினைவு இருக்கலாம். இதற்கு காரணம் இந்துக்கள் ஓட்டு வங்கி. 2011 சென்செஸ் படி கேரள மக்கள் தொகையில் 54 சதவிகிதத்தினர் ஹிந்துக்களே. பெண்கள் சபரிமலையில் உள் நுழைந்துவிட்டால் "எங்கள ஆட்சியில் உக்கார வைங்க, நாங்க சுப்ரீம் கோர்டுல வழக்கு தொடுக்குறோம். சபரிமலையும் திரும்பவும் புனிதமலையா மாத்திக் காட்டுறோம்"-ன்னு சொன்னாலும் சொல்லுவாங்க. இப்ப கேரள அரசு ஒரு பதற்றத்துல வந்த இரண்டு பெண்களையும் திருப்பி அனுப்பிருச்சு. ஆனா இனிமேலும் திரும்ப வரலாம். இல்லை பாஜக வாலிண்டியரா வந்து கூட கேஸ போட்டு நல்ல பெயர் எடுக்கலாம்.
பயம், பயந்து தான் ஆகணும்
என்ன தான் கேரளத்தில் படித்தவர்கள் அதிகம், கம்யூனிஸ்டுகள் ஆளுங்கட்சிகள், அரசியலோடு எப்போதும் தொடர்புடைய மக்கள் உள்ளவர்கள் என்றாலும், அவர்களிடம் இருக்கும் ஜாதிகள் தமிழகத்தை விட இன்னும் வலுவாக நிலைத்துக் கொண்டே தான் இருக்கின்றன. மலையாளிகள் பெயர்களில் நிமிர்ந்து நிற்கும் நாயர், மேனன், நம்பூதிரி, நம்பீசன்களே அவர்களின் ஜாதிய சாட்சிகள். 2016 கேரள சட்டமன்றத்தில் பாஜகவின் ராஜகோபால், நெமாம் தொகுதியில் வெற்றி பெற்று கேரள சட்ட சபையில் வலது கால் வைத்து விட்டார். இந்தியாவில் மதம் ஒரு மனிதனின் உடல் உறுப்பைப் போல பின் தொடர்ந்து கொண்டே இருக்கிறது அல்லது தொடரச் செய்கிறது நம் சமூகம். இந்து ஜாதிய படி நிலைகளையும், கலாச்சாரம் என்கிற பெயரில் சாதி வெறியையும் பாஜக சாமர்த்தியமாக கையில் எடுக்கும் பட்சத்தில் "கடவுளின் தேசம், காட்டான்களின் தேசம்" ஆவதில் சந்தேகம் இல்லை. "தோழர்களே... ஷ்ரத்திகணும். லால் சலாம்"