சமீபத்தில் ஒரு வெளிநாட்டு ஹேக்கர் டிராய் நிறுவனத்தின் தலைவர் ஆர்.எஸ் சர்மாவின் வங்கிக் கணக்கிலேயே ஒரு ரூபாய் வரவு வைத்தது நினைவில் இருக்கும். அப்படி ஓப்பன் சேலஞ்ச் விட்டு, மூக்கு உடைந்து தன் பதவி காலத்தை நீட்டித்துக் கொண்டவருக்கு அவரின் அடையாளங்கள் பாதுகாக்கப் பட வேண்டிய கவலை இல்லாமல் இருக்கலாம். ஆனால் சாதாரண மக்களுக்கு. குறிப்பாக ஆதார் பயன்படுத்துபவர்களுக்கு... பிரச்னை இருக்கத் தானே செய்கிறது. சமீபத்தில் தான் உச்ச நீதி மன்றம் ஆதார் அட்டை எதற்கு எல்லாம் அவசியம் இல்லை என்று தீர்ப்பு வழங்கியது.
Masked Aadhar
உச்ச நீதி மன்ற இறுதித் தீர்ப்பின் போது தான் ஆதார் பாதுகாப்பை உறுதிப்படுத்த மாஸ்க்டு ஆதார் கொண்டு வரப்படும் என்று UIDAI நிறுவனம் உறுதி அளித்தது. UIDAI நிறுவனம் சொன்ன படியே தன்னுடைய புதிய வசதியாக மாஸ்க்டு ஆதாரை வெளியிட்டு இருக்கிறது.
How to download masked aadhar
ஸ்டெப் 1: https://uidai.gov.in/ லிங்குக்குச் செல்லுங்கள்
ஸ்டெப் 2: Download Aadhar க்ளிக்குங்கள்
ஸ்டெப் 3: ஆதார் இருப்பவர்கள் Aadhar க்ளிக்குங்கள், இல்லாதவர்கள் VID அல்லது Enrolment ID க்ளிக்குங்கள். அதோடு Masked Aadhar-ஐ தேர்வு செய்யுங்கள்.
ஸ்டெப் 4: உங்கள் Aadhar அல்லது VID அல்லது Enrolment ID-யை டைப் செய்யவும். Enrolment ID கொடுப்பவர்கள், எப்போது பதிவிட்டீர்கள் என்கிற தேதி மற்றும் நேரத்தையும் குறிப்பிட வேண்டும்.
ஸ்டெப் 5: ஆதாரில் கொடுத்த பெயரை டைப் செய்யவும்
ஸ்டெப் 6: ஆதாரில் கொடுத்த முகவரி பின் கோடை டைப் செய்யுங்கள்.
ஸ்டெப் 7: Captcha-வை டைப் செய்யுங்கள்
ஸ்டெப் 8: Request OTP கொடுங்கள்
ஸ்டெப் 9: உங்கள் மொபைல் எண்ணுக்கு வந்திருக்கும் OTP-ஐ கொடுத்து உங்கள் மாஸ்க்டு ஆதாரை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்
மாஸ்க்டு ஆதார் பயன்கள்
இந்த மாஸ்க்டு ஆதாரில், ஆதாரின் 12 எண்களில் கடைசி நான்கு எண்கள் மட்டுமே தெரியும். அதோடு மூன்று QR code-கள் தரப்பட்டிருக்கும். இனி ஆதார் எண்ணை யாருக்கும் தெரியப்படுத்தாமலேயே, தேவையான தகவல் சரி பார்ப்புகளை மேற்கொள்ளலாம், என்பது தான் UIDAI நிறுவனத்தின் வாதம். இது தான் அவர்கள் சொல்லும் பாதுகாப்பு அம்சம்.
QR code 1
QR code with photo என்று குறிப்பிட்டிருக்கும் QR code-ஐ UIDAI நிறுவனம் வெளியிட்டிருக்கும் QR code ரீடர் மூலமாக ஸ்கேன் செய்தால் நம் புகைப்படத்துடன், பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி, கடைசி நான்கு இலக்க ஆதார் எண் மட்டுமே வருகின்றன. வரும் புகைப்படம் நம்முடையது தானா என்று மட்டும் உறுதிப்படுத்த முடியவில்லை. அந்த அளவுக்கு உருவமே தெரியாத ரீதியில் வருகிறது.
QR code 2
நம் புகைப்படத்துக்கு வலது பக்கம் கொடுத்திருக்கும் QR code-களை UIDAI நிறுவனம் வெளியிட்டிருக்கும் QR code ரீடர் மூலமாக ஸ்கேன் செய்தால் பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி, கடைசி நான்கு இலக்க ஆதார் எண் மட்டுமே வருகின்றன.
VID
UIDAI நிறுவனம் வெளியிட்டு இருக்கும் புதிய மாஸ்க்டு ஆதாரில் கூட மறைக்கப்பட்ட ஆதாருக்குக் கீழ் நம் VID கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதை பயன்படுத்தி கூட நம் ஆதார் விவரங்களை எடுத்துக் கொள்ளலாம் என்றாலும் நமக்கு வர வேண்டிய ஓடிபி நம் மொபைலுக்கு வந்து அவைகளை சரியாக கொடுத்தால் மட்டுமே ஆதாரை முழுமையாக டவுன்லோட் செய்ய முடியும்.
உஷார் மக்களே
இனி எங்கு சென்றாலும், இந்த இரண்டு ரக QR code-களை மட்டுமே காட்டி வேலைகளை முடித்துக் கொள்ளுங்கள் என்று எச்சரிக்கை செய்கிறது UIDAI நிறுவனம். மாஸ்க்டு ஆதாரில் கூட நம்முடைய செல் எண், பதிவீட்டு எண் (Enrolment id), மற்ற படி நம் வழக்கமான பெயர், பிறந்த தேதி, முகவரி போன்ற விவரங்கள் கிடைத்துவிடும்.
அதுக்கு நாங்க பொறுப்பு இல்ல
திருட வேண்டும் என்பவர்கள் முதலில் உங்களுடைய மெயில் மற்றும் எஸ்.எம்.எஸ்-களை ஹேக் செய்தால் ஒழிய ஆதார் விவரங்களை திருட முடியாது என்றும் UIDAI நிறுவனம் சொல்கிறது. அதாவது ஆதாரைப் பாதுகாப்பது மட்டும் தான் எங்க வேலை, மொத்த இணைய ஹேக்கர்களை சமாளிப்பது எல்லாம், உலக மக்கள் அனைவருடைய பிரச்னை என்று சொல்கிறது. அப்புறம் எதுக்குங்க கை ரேகை, ரெடினா எல்லாம் எடுத்தீங்க என்று நெட்டிசன்களும் ஒரு பக்கம் கொந்தளித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
இருந்தாலும் திருடலாம்
ஒருவருக்கு நம் மெயில் மற்றும் எஸ்.எம்.எஸ்-க்கு ஆக்ஸிஸ் கிடைத்துவிட்டால் அதை வைத்து நம் ஆதார் எண்ணைத் தெரிந்து கொள்ள முடியும். https://resident.uidai.gov.in/find-uid-eid என்கிற லிங்கில் சென்று நம் பெயர், மெயில் ஐடி, செல் எண் கொடுத்தால் நம் மெயில் மற்றும் மொபைலுக்கு ஓடிபி வரும் அதைக் கொடுத்தால் ஆதார் எண் மற்றும் பதிவீட்டுக் எண் இரண்டுமே கிடைத்துவிடும். இதை வைத்து https://eaadhaar.uidai.gov.in/#/ டவுன் லோட் ஆதார் என்கிற இணைப்பில் நம் ஆதார் எண், பெயர் பின் கோட் கொடுத்து மொபைலுக்கு வரும் ஓடிபி கொடுத்தால் நம் ஆதார் ஹேக்கர் கையில்.
மறக்க முடியுமா சாகேத் மோடி
இவரப் பத்தி அதிகம் பேச வேணாம் வீடியோ பாருங்க:
இப்படிப்பட்ட ஹேக்கர்கள் இந்தியாவில் தனியாக அப்ளிகேஷன் செய்து கள்ளா கட்டிக் கொண்டிருக்கும் போது, நம் மெயில் மற்றும் எஸ்.எம்.எஸ் எல்லாம் அத்தனை பாதுகாப்பாக இருக்குமா...? இத்தனைக்கும், இவர் மத்திய ஐடி அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் முன்னிலையில் இந்தியா டிவியில் நாங்கள் எப்படி ஒருவரின் டேட்டாக்களை ஹேக் செய்கிறோம், எந்த ஒரு தரவும் இன்று டிஜிட்டல் யுகத்தில் பத்திரமாக இல்லை குறிப்பாக ஆதார் போன்ற ஒர் நாட்டின் தரவுகள் என்று நிரூபித்தார்.
அதற்கு இந்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது.
என்ன செய்யப் போறோம்
போர்கள், ஜவான்களால் வெற்றி பெறுவது இல்லை, ஜனரல்களால் என்று ஒரு பழமொழி உண்டு. அதன் படி ஆதார் அவந்த போது அதிகம் தம்பட்டம் அடித்துக் கொண்ட தார்மீகப் பொறுப்பாளி பிரதமர் மோடி தான் இந்த பிரச்னைக்கும் ஒரு தீர்வு சொல்ல வேண்டும். இனியும் ஆதாரை எப்படி வலுப்படுத்த இருக்கிறீர்கள். ஒட்டு மொத்த இந்திய மக்களின் பெயர் தொடங்கி கண் ரேகை வரை எல்லாமே ஆதாரில் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு விஷயத்தை சாகேத் மோடி மாதிரியான ஹேக்கர்களால் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியுமா...? இன்று டேட்டா தான் புதிய சக்தி என்று நாங்கள் சொன்னால் உங்கள் காதில் விழாது, உங்களுக்கு நெருக்கமான அம்பானியே "Data is the new oil" என்று சொல்லி இருக்கிறார். அதையும் ஜியோ மூலம் செயல்படுத்தியும் வருகிறார். இப்போது என்ன செய்ய இருக்கிறீர்கள் மோடி...? 130 கோடி இந்தியர்களின் தரவுகள், தனி மனித அடையாளங்கள் உங்கள் ஒருவரின் வழிகாட்டுதலுக்காக காத்துக் கொண்டிருக்கிறது... என்ன செய்யப் போகிறீர்கள்?