ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் ஈகோ பிரச்னையாகவே இந்த ராஜஸ்தான், சத்திஸ்கர், தெலுங்கானா சட்டமன்றத் தேர்தல்கள் பார்கப்படுகின்றன. கடந்த டிசம்பர் 7-ம் தேதி ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலை எதிர் கொண்டது. இந்த தேர்தலில் அரசியல் கட்சிகள் ஒன்றை ஒன்று அடித்துக் கொள்வது, தரக் குறைவாக பேசுவது எல்லாம் இப்போது பிரச்னையே கிடையாது என்கிற ரீதியில் ஒரு பெரிய பிரச்னை தலை எடுத்திருக்கிறது. அதே சர்ச்சைக்குரிய Aadhar-ல் இருந்து.
பறி போன ஓட்டுக்கள்
தேர்தல் நேரத்துக்கு முன்பு வாக்காளர் பட்டியலில் இருந்த தங்கள் பெயர்கள், வாக்குப் பதிவு செய்யச் சென்ற போது இல்லை என புகார் தெரிவித்திருக்கிறார்கள். இதில் பிரபல இடது கை பேட்மிண்டன் வீராங்கணை ஜுவாலா கட்டாவும் ஒருவர். அவருடைய ட்விட்டர் பக்கத்திலேயே இதைப் பற்றி சொல்லி வருத்தப்பட்டிருக்கிறார். ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என அனைத்து சமூக வலை தளங்களிலும் #WhereIsMyVote என்ற ஹேஷ்டேக் டிரெண்டானது.
ஆதார் தான் காரணம்
வாக்காளர் பெயர் காணாமல் போனதற்கு வாக்காளர் அடையாள அட்டை உடன் மோடி அரசின் ஆதார் இணைப்பு தான் காரணம் என சிலர் காரணம் சொல்கிறார்கள். அதெப்படி ஆதார் எண்ணை, வாக்காளர் அடையாள அட்டை உடன் இணைத்தால் நம் வாக்கு உரிமை பறி போகும் என்று கேட்கிறீர்களா..?
NERPAP
2015-ம் ஆண்டு மார்ச் மாதம் இந்திய தேர்தல் ஆணையம் "National Electoral Roll Purification and Authentication Programme" திட்டத்தைக் கொண்டு வந்தது. இந்த திட்டத்தின் மூலம் ஒரு நபர் ஒரு வாக்காளர் அடையாள அட்டை தான் இருக்க வேண்டும். அதை உறுதிப் படுத்த வேண்டும் என்பதற்காக ஒரு நபருக்கு வழங்கப்பட்ட ஆதார் எண்ணை அவர்களின் வாக்காளர் அடையாள அட்டை உடன் இணைக்க திட்டமிட்டார்கள்.
நல்ல எண்ணம்
ஜனநாயகக் கடமையான ஓட்டுப் பதிவை சரி செய்ய தேர்தல் ஆணையம் மேற்கொண்ட முயற்சி சிறப்பானது தான். ஆதார் எண்களை வைத்து போலி வாக்காளர் அடையாள ட்டைகளை நீக்க திட்டமிட்டதும் சரியான முடிவு தான்... ஆனால் டீமானிட்டைசேஷனைப் போல, ஒழுங்காக திட்டமிடாமல், அவசர கதியில் செய்ததால் சொதப்பித் தள்ளிவிட்டது தேர்தல் ஆணையம். விளைவு லட்சக் கணக்கானோரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து காணாமல் போய் இருக்கிறது.
NERPAP-க்குத் தடை
இந்த திட்டம் செயல்படத் தொடங்கி சில மாதங்களுக்கு மட்டுமே அமலில் இருந்தது. 2015 ஆகஸ்ட் மாதம் உச்சநீதிமன்ற உத்தரவால் முடிவுக்கு வந்தது. ஆதாரின் இருப்புத் தன்மையை இன்னும் உறுதிபடுத்தாத நிலையில் இதை தேர்தல் ஆணையம், ஆதார் எண்களை வாக்காளர் அடையாள அட்டையோடு இணைக்கும் வேலைகளை மேற்கொள்ளக் கூடாது என உத்தரவிட்டது உச்ச நீதி மன்றம்.
போச்சே போச்சே..?
உச்ச நீதி மன்றம் தடை விதிப்பதற்கு முன் இணைப்பை மேற்கொண்ட பகுதிகளில் மட்டும் லட்சக் கணக்கானோரில் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து வெளியேறிவிட்டது. தேர்தல் ஆணையமே தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் 22 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் தவறுதலாக வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக ஒப்புக் கொண்டது.
நாங்கள் அனுமதிக்கவில்லை
நேற்று தேர்தல் நடந்த தெலங்கானா மாநிலத்தில் தான் இந்தத் திட்டம் முதலில் சோதனையிடப்பட்டதாம். வாக்காளர்களின் ஒப்புதல் இல்லாமல் தான் பல ஆதார் எண்களை வாக்காளர் அடையாள அட்டை உடன் இணைக்கப்பட்டதாம். இந்தத் திட்டத்தில் தமிழ்நாடு, குஜராத், மேற்கு வங்காளம், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில், இந்த ஆதார்-வாக்காளர் அட்டை இணைப்புக்காக National Population Register (NPR) டேட்டா பேஸ் பயன்படுத்தப்படுத்தி இருக்கிறார்கள்.
மென்பொருள்
DSDV (Data Seeding and Data Viewer) மென்பொருள் மூலம் இது செயல்படுத்தப்பட்டிருக்கிறது. அதாவது வாக்காளர் அட்டையில் இருக்கும் டேட்டாபேஸ் தகவல்களையும், ஆதார் டேட்டாபேஸில் உள்ள தகவல்களையும் வைத்து DSDV முதலில் ஒப்பிடும். அப்படி ஒப்பிடும் போது யாருடைய தகவல்கள் எல்லாம் ஒத்துப் போகிறதோ அவர்களௌடைய ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டைகளோடு இணைத்துவிடும்.
தவறான தகவல்களுக்கு
சத்தியமாக நாட்டின் பிரதமருக்குக் கூட வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள விவரங்களும், ஆதார் அட்டையில் இருக்கும் விவரங்களும் அப்படியே 100% பொருந்திப் போகாது. அப்படி இருக்கும் பட்சத்தில் எப்படி இந்த இணைப்பு சாத்தியப் படுத்தினார்கள்...?
மதிப்பெண்கள்
ஆம். ஒவ்வொரு நபரின் தகவல்கள் இணைப்புக்கும் ஒரு மதிப்பெண் வழங்கினார்கள். வாக்காளர் அடையாள அட்டை டேட்டாபேஸ் மற்றும் ஆதார் டேட்டாபேஸில் உள்ள தகவல்கள் எழுத்து மாறாமல் அப்படியே சரியாக இருந்தால் 100 மதிப்பென்கள். ஒவ்வொரு ரக தவறுக்கும் மதிப்பெண்கள் குறைந்து கொண்டே வரும். இப்படி 50 மதிப்பெண்களுக்குக் கீழ் வந்தால் தானாகவே இணைப்பை துண்டித்து, வாக்காளர் பட்டியலில் இருந்து பெயரையே நீக்கிவிட்டது.
ஆக ஒரு 12 இலக்கம் கொண்ட ஆதாரினால் விலை மதிப்பற்ற, ஜனநாயகக் கடமையை ஆற்ற முடியாமல் 22 லட்சம் பேரின் பெயர்கள் வாக்காளர்க் பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறது.
கொந்தளிப்பு
இப்போது தேர்தல் ஆணையத்துக்கு தங்கள் வாக்குகள் செலுத்த முடியாமல் போனதற்கு காரணம் கேட்டு, புகார் கடிதங்களை அனுப்பிக் கொண்டே இருக்கிறார்கள். சர்கார் படத்தில் சொன்னது போல 22 லட்சம் வாக்குகள் என்பது பெரிய எண் தானே..? இந்த 22 லட்சம் வாக்குகளும் இந்த தேர்தலில் பங்கெடுத்திருந்தால் ஒரு சில தொகுதிகளிலாவது வெற்றி வாய்ப்பு மாறி இருக்க வாய்ப்பிருக்கிறது என சில தேர்தல் கணிப்பாளர்களும் தற்போது பேசி வருகிறார்கள்.