RBI உர்ஜித் ரவிந்திரா படேல் என்கிற உர்ஜித் படேல், மத்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் பதவியில் இருந்து ராஜிநாமா செய்திருக்கிறார், அவ்வளவு தான் செய்தி.
விமர்சனங்கள்
இந்தியாவில் உள்ள அரசு & தனியார் வங்கிகள் மற்றும் பெருவாரியான நிதி நிறுவனங்களை நிர்வகிப்பது ரிசர்வ் வங்கி தான். 24-வது ஆளுநரான இவர் பதவிக்கு வரும் போது ரிலையன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றியவர் தான் நாட்டின் முக்கிய பொறுப்பில் இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தது. ஆக கார்ப்பரேட்டுக்கு சாதகமான விஷயங்களையே செய்வார் எனவும் விமர்சிக்கப்பட்டார்.
பதவி
சாமானிய செய்தித் தாள் இந்தியர்களுக்கு மத்திய ரிசர்வ் வங்கியின் பதவி எத்தனை முக்கியமானது என்பதை புரிய வைத்த ரகுராம் ராஜனுக்கு பிறகு பதவி ஏற்றுக் கொண்டதால் இவரிடம் அதிகம் எதிர்பார்ததை எவரும் மறுக்க முடியாது. ரகுராம் ராஜன் பதவியில் இருந்த வரை தனக்கு சரி என்று பட்டதை செய்து கொண்டே இருந்தார். இன்ரு செய்ய முடியாமல் போகும் போது தன் பதவியில் இருந்து விலகி இருக்கிறார் உர்ஜித் படேல்
காரணம்
தன்னுடைய சொந்த விஷயங்களுக்காகத் தான் இந்த பதவியில் இருந்து ராஜிநாமா செய்வதாகவும் தெரிவித்திருக்கிறாராம். பாஜக, ஆர்பிஐ அமைப்பின் மீதும், உர்ஜித் படேல் மீதும் கொடுத்த அரசியல் அழுத்தத்தை இன்னும் வெளிப்படையாக சொல்லவா வேண்டும்.
பதவி காலம்
கடந்த செப்டம்பர் 2016-ல் பதவி ஏற்றுக் கொண்ட உர்ஜித் இரண்டு ஆண்டு கழித்து டிசம்பர் 2018-ல் பதவி விலகி இருக்கிறார். அநேகமாக சுதந்திர இந்தியாவில் ஆர்பிஐ ஆளுநர் பதவியில் இருந்து ராஜிநாமா செய்த முதல் நபராக உர்ஜித் இருப்பார் செய்திகள் பரவி வருகின்றன. ஆனால் இதை இன்னும் எந்த அரசுஅமைப்புகளும் உறுதிப்படுத்தவில்லை.
அனுபவம்
கென்யாவில் பிறந்த இவர், 2013-ல் இருந்து தான் இந்திய குடிமகன் ஆனார். லண்டன் பொருளாதாரப் பள்ளியில் படித்து பட்டம் பெற்றவர். தன்னுடைய ஆராய்ச்சிப் படிப்பை முடித்துவிட்டு சர்வதேச நிதியத்தில் (IMF) வேலை பார்த்தார். 2000-க்குப் பிறகு தான் மனிதர் இந்தியா நிறுவனங்களிலும், இந்திய அரசு பதவிகளில் பணியாற்றத்தொடங்கினார். 2013-ல் ஆர்பிஐ-ன் துணை ஆளுநராக பதவி வகித்தார். இந்தியாவின் பெரிய பொருளாதார மேதைகளில் ஒருவரான சுபீர் கொகனுக்குப் பிறகு அவர் இடத்தை நிரப்பத் தான் உர்ஜித் ஆர்பிஐ-ன் டெபுட்டி கவர்னராக நியமிக்கப்பட்டார். அதன் பின் கவர்னரானது தனி கதை.
வாழ்த்துக்கள்
சமீப ஆண்டுகளில் வங்கி சிறப்பாகச் செயல்பட்டதற்கு ஆர்.பி.ஐ. ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் நிர்வாகத்தின் ஆதரவு மற்றும் கடின உழைப்பு காரணம் என்றும், இந்த வாய்ப்பில் சக ஊழியர்களுக்கும், இயக்குநர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் உர்ஜித் படேல் தெரிவித்துள்ளார். மேலும், அவர்களது எதிர்காலத்திற்கு தன்னுடைய வாழ்த்துக்களையும் கூறியுள்ளார் விடை பெறும் உர்ஜித் படேல்.
நீயா நானா..?
சென்ற மாதம் மத்திய அரசு ஆர்பிஐ உடன் ஈடுபட்ட பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவினை செயல்படுத்த முடியாத காரணத்தினால் உர்ஜித் படேல் ராஜினாமா செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. அதோடு கடந்த சில மாதங்களாகவே சுயாட்சி அதிகாரங்கள் கொண்ட ரிசர்வ வங்கியில் மத்திய அரசின் தலையீடு அதிகம் இருந்தது. இதனைச் சகித்துக் கொள்ள முடியாத ஆர்பிஐ அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் செய்திகள் ஆகும் அளவுக்கு போராட்டங்களில் ஈடுபட்டார்கள்.
காசு கொடு
மறு பக்கம் மத்திய அரசு ஆர்பிஐ வசம் உள்ள 3.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான உபரி தொகையினைக் கேட்டுத் தொந்தரவு செய்து வந்தது, வருகிறது என்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்த நடவடிக்கை தவறு எனவும் பல்வேறு எதிர்க் கட்சிகள் கண்டனம் தெரிவித்தது. டிசம்பர் 6-ம் தேதி நடைபெற்ற மானிட்டரி பாலிசி கூட்டத்துக்கு முன்பு நடந்த வாரிய கூட்டத்திலேயே உர்ஜித் படேல் ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
வெச்சு செய்யப் போகுது
தேர்தல் முடிவுகள், ஆர்பிஐ ஆளுநர் ராஜிநாமா, என்கிற இரட்டைக் குழல் துப்பாக்கிகள் நாளை பங்கு சந்தையை சல்லடையாக சுட்டுத் தள்ளப் போகிறது. இப்போது தான் தலைமை பொருளாதார ஆலோசகர் பதவிக்கு தங்களுக்கு சரியான ஆளைத் தேடிக் கண்டு பிடித்தார்கள். இப்போது ஆர்பிஐ கவர்னருக்கான தேடுதல் வேட்டையில் மத்திய அரசு ஈடுபட வேண்டி இருக்கிறது.
புதிய கவர்னருக்கு
யார் புதிய ஆளுநராக பொறுப்பேற்றாலும், அடுத்த இரண்டு மாதத்தில் தயாரிக்க இருக்கும் பட்ஜெட், ஆர்பிஐ இடம் இருக்கும் பணத்தை பாதுகாப்பது, வங்கிகளுக்கான முதலீட்டுத் திட்டங்களை மேற்கொள்வது, ஜி.எஸ்.டியில் ஏற்பட இருக்கும் களப் பிரச்னைகளை எதிர் கொள்வது என ஒரு பெரிய பிரச்னை பட்டியலே சமாளிக்க வேண்டும். இதற்கு நடுவில் டெல்லி வட்டாரத்தில் ஆர்பிஐயின் டெபுட்டி கவர்னர்களில் ஒருவரான விரல் ஆச்சார்யாவும் பதவி விலக இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. சரியான தகவல்கள் வரும் வரை காத்திருக்க வேண்டியது தான் ஒரே வழி..!