விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி, நிதின் சந்தேசரா போன்ற மகான்கள் இந்திய Government Banks (அரசுத் துறை) களிடம் இருந்து ஆயிரம் கோடிகளில் கடனை வாங்கி விட்டு தங்க கழிவறைகளோடு சுக போகமாக வாழ்ந்து வருகிறார்கள். இதில் ஒருவனை மட்டும் தான் இந்தியா கொண்டு வந்து வாராக் கடனை வசூலிக்க நாக்கு தள்ள போராடி வருகிறது மத்திய அரசு.
மக்களவை விவாதம்
இப்போது குளிர்கால கூட்டத் தொடர் மக்களவையில் நடந்து வருகிறது. அதில் வாராக் கடனைப் பற்றி பேச்சு எழுந்த போது, எதிர் கட்சியினர் கேட்கும் கேள்விகளுக்கு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் நிதி அமைச்சகத்தின் இணை அமைச்சரான சிவ பிரதாப் சுக்லா சில சுவாரஸ்ய பதில் அளித்திருக்கிறார்கள்.
நிதி நிலைமை
இப்போது 2018 - 19 நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் (01 ஏப்ரல் 2018 முதல் 30 செப்டம்பர் 2018 வரையான காலம்) 19 பொதுத்துறை வங்கிகளில் நிகர நஷ்டம் 21,388 கோடியாக அதிகரித்திருக்கிறது.
கடந்த ஆண்டில்
கடந்த நிதி ஆண்டான 2017 - 18-ல் இதே போல முதல் அரையண்டு காலத்தில் 19 அரசுத் துறை வங்கிகளின் நிகர நஷ்டம் வெறும் 6,861 கோடி ரூபாய். ஆனால் இப்போது 2018 - 19 நிதி ஆண்டின் முதல் காலாண்டில் கடந்த ஆண்டை விட சுமார் 3 மடங்கு நிகர நஷ்டம் அதிகரித்திருக்கிறது.
வாராக் கடன்
பொதுத் துறை வங்கிகளுக்கு கடந்த மார்ச் 2018 வரையான காலத்தில் நிகர வாராக் கடன் 9.62 லட்சம் கோடியாக அதிகரித்திருப்பதை கொஞ்சம் வெட்கத்தோடு ஒப்புக் கொண்டார்கள். ஆனால் இப்போது செப்டம்பர் 2018 நிலவரப்படி இது வெறும் 9.43 லட்சம் கோடியாகத் தான் இருக்கிறதாம். வேடிக்கையாக இருக்கிறது தானே.
வெற்றிகரமான தோல்வி
மத்திய நிதி இணை அமைச்சர் சிவ பிரதாப் சுக்லா "இதுவரை இந்திய வரலாறு காணாத வகையில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் தான் 60,713 கோடி ரூபாய் வராக் கடன் வசூலிக்கப்பட்டிருக்கிறது" எனவே தான் 9.62 லட்சம் கோடியில் இருந்து இப்போது 9.43 லட்சம் கோடியாக குறைந்திருக்கிறது" என பெருமை பட்டிருக்கிறார்.
இதற்கு முன்
கடந்த மார்ச் 2016 -ல் இந்திய அரசுத் துறை வங்கிகளின் நிதி நிலை அறிக்கைகள் படி 19 அரசுத் துறை வங்கிகளையும் சேர்த்து 5.66 லட்சம் கோடியாகத் தான் இருந்திருக்கிறது. அடுத்த இரண்டு வருடத்தில் தான் கொடுத்த கடன்கள் ஒழுங்காக திரும்ப வசூலிக்காமல் 9.62 லட்சம் கோடியாக அதிகரித்திருக்கிறது. ஆக கடந்த இரண்டு ஆண்டில் வாராக் கடன் 69 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.
இவர்கள் தான் காரணம்
இந்திய பொதுத் துறை வங்கிகளில் வாராக்கடனுக்கு காரணம், பொருப்பற்ற, தங்கள் பணிகளை முழுமையாக செய்யாத வங்கி அதிகாரிகள் தான். அவர்கள் எல்லாம் நம் பணத்தை ஒழுங்காக நிர்வகித்திருந்தால் நமக்கு இவ்வளவு பெரிய கடன் தொகை நிலுவை வந்திருக்காது என்றார் அருண் ஜெட்லி.
நடவடிக்கை
அப்படி தங்கள் வேலைகளை ஒழுங்காக செய்யாத 6,049 வங்கி அதிகாரிகளை பட்டியல் இட்டு நடவடிக்கை எடுத்து இருக்கிறோம். சிறிய தொகை அபராதங்கள் தொடங்கி பல தண்டனைகள் வழங்கி இருக்கிறோம் என மக்களவைக்கு எழுத்தில் தெரிவித்திருக்கிறார் அருண் ஜெட்லி
என்ன தண்டனைகள்
தவறு செய்த வங்கி அதிகாரிகளுக்கு கட்டாய பணி ஓய்வு (Compulsoru Retirement), பணி நீக்கம் (Dismissal), பணி இறக்கம் (Demotion), அபராதங்கள் (Penalties) என வங்கியின் உயர் மட்டக் குழு மற்றும் இயக்குநர் குழு சேர்ந்து பரிந்துரை செய்திருக்கிறது. அதன் அடிப்படையில் தான் இந்த நடவடிக்கைகளை நிதி அமைச்சகம் எடுத்ததாம்.
வழக்குப் பதிவு
வாராக் கடனாக இருக்கும் நிலுவைத் தொகையைப் பொருத்து பல வழக்குகள் மத்திய புலனாய்வுத் துறையிடமும், அந்தந்த மாநில காவல் துறையினரிடமும் பதிவு செய்யப்பட்டு முதல் தகவல் அறிக்கையே தயார் செய்துவிட்டார்களாம். அந்த அளவுக்கு மத்திய அரசு வாராக் கடன் மீது கவனமாக நடவடிக்கை எடுத்து வருவதாக அருண் ஜெட்லி மற்றும் சிவ பிரதாப் சுக்லா மக்களவையில் தெரிவித்திருக்கிறார்கள்.