நடுத்தர மக்களுக்கு சொத்து பத்து பிரச்னைகள் வந்தால் பரவாயில்லை. ஆனால் இந்தியாவின் பணக்காரர்களுக்கு எல்லாம் சொத்து பத்துக்களில் பிரச்னை வந்தால் என்ன செய்வது..? அப்படி சொத்து பிரச்னையில் நிம்மதி இழந்து, அல்லாடுகிறார் Kamasutra & Raymond-ன் முன்னாள் தலைவர் விஜய்பத் சிங்கானியா.
இந்தியாவுக்கு இது புதுசா என்ன..?
சொத்துக்காக சண்ட போடுவது, ஒருவரை ஒருவர் போட்டுத் தள்ளுவது போன்ற பிரச்னைகள் இந்தியாவுக்கு பழைய கதை தான். திருபாய் அம்பானியின் மறைவுக்குப் பின் அனில் அம்பானி, முகேஷ் அம்பானி அடித்துக் கொண்டது... Wave Cinema நிறுவனத்தை நடத்தி வந்த அண்ணன் தம்பிகளான குருதீப் சிங் சத்தா, ஹர்தீப் சிங் சத்தாவும் ஒருவரை ஒருவர் 20 குண்டுகளால் சுட்டுக் கொண்டு ஒரே நாளில் செத்தது... Ranbaxy மருந்து நிறுவனத்தை நடத்தி வந்த ஷிவேந்தர் சிங், மல்விந்தர் சிங் குழாயடி சண்டையில் ஈடுபட்டு தலைப்புச் செய்தி ஆனது... என பட்டியல் நீள்கிறது. சரி விஜய்பத் சிங்கானியாவுக்கு வருவோம்.
Raymond
இந்தியாவின் பிராண்டட் உடைகளுக்கும், துணிகளும் பெயர் பெற்ற நிறுவனம், 1925-ல் இருந்து இந்தியர்களை அலங்கரித்து வரும் நிறுவனம் Raymond. Raymond நிறுவனத்துக்கு ரேமண்ட் ப்ரீமியம், பார்க் அவென்யூ, கலர் ப்ளஸ், பார்க்ஸ் போன்ற துணை பிராண்டுகளும் உண்டு. இந்தியாவில் 700க்கும் மேற்பட்ட கடைகள், வெளிநாடுகளில் 200-க்கும் மேற்பட்ட கடைகள் விரித்து வியாபாரம் செய்து வருகிறது Raymond.இது தான் ரேமண்டின் இன்றைய நிலை. கொஞ்சம் ரேமண்ட் நிறுவனத்தை பின்னோக்கிப் பார்ப்போம்.
குடும்ப பணக்காரர்கள்
1775-ம் ஆண்டில் ஒரு சிறிய கடை போட்டு கொஞ்சம் பணத்தோடு வங்கி ஆரம்பித்தவர்கள் தான் இன்று ஜேகே குழும சாம்ராஜ்யத்தை கட்டி நடத்தி வருகிறார்கள். அத்தனை பெரிய ஜேகே குழுமத்தின் ஒரு அங்கம் தான் இந்த ரேமண்ட் நிறுவனமும். JK Tyre, JK cements, JK cotton, JK Enterprise, JK Files, JK Ansell, JK Paper, JK Lakshmi Cement, JK Fenner என இந்தியாவில் பல்வேறு துறைகளில் கடை விரித்து வியாபாரம் பார்க்கும் பெரிய பிசினஸ் குழும குடும்பம் இவர்களுடையது. மேலே தலைப்பில் சொன்னோமே காமசூத்ரா ஆணுறைகளை JK Ansell நிறுவனங்கள் தான் உற்பத்தி செய்கின்றன.
பகிர்வு
1775-ம் இருந்து சொத்து பிரிந்து வருவதால், இன்று ஒரே பெரிய குழுமமாக இருந்தாலும், ஒவ்வொரு நிறுவனத்தையும் ஒரு குடும்பம் மட்டுமே நிர்வகிக்கிறது. அப்படி ரேமண்ட் மற்றும் காமசூத்ரா நிறுவனத்தை நிர்வகிப்பது விஜய்பத் சிங்கானியாவின் குடும்பம்.
குடும்ப எஸ்டேட்
ஜேகே குழும உறுப்பினர்கள், மொத்த குடும்பமும் ஒன்றாக இருக்க சில பெரிய அரண்மனை ரக வீடுகளை கட்டி இருக்கிறார்கள். கான்பூரில் இருக்கும் கமலா ரெட்ரீட் (Kamla Retreat), மும்பையில் இருக்கும் JK House, கான்பூரில் இருக்கும் கங்கா குதிர் எல்லாம் அந்த ரக அரண்மனை வீடுகள் தானாம்.
குடும்ப பிசினஸ் மேன்கள்
உலகிலேயே சீனா, அமெரிக்காவைத் தொடர்ந்து இந்தியாவில் தான் குடும்ப பணகாரர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என சர்வதேச அமைப்பான Credit suisse தன் அறிக்கையில் சொல்கிறது. அதாவது ஒரு குடும்பத்தின் உருப்பினர்களில் பெரும்பாலோனர்கள் பிசினஸில் ஈடுபட்டு தங்களுக்கு பிடித்தமான துறைகளில் பிசினஸ் செய்வார்கள். இதற்கு சிறந்த உதாரணம் அம்பானி குடும்பம், பிரமல் குடும்பம், பிர்லா குடும்பம், அதானி குடும்பம், சிங்கானியா குடும்பம், டாடா குடும்பம் என அடுக்கலாம்.
விஜய்பத்தும், ரேமண்ட் வளர்ச்சி
ரேமண்ட் நிறுவனத்தை இந்தியாவில் உள்ள மக்களின் ஆடை நிறுவனமாக மாற்றியதில், வளர்த்து எடுத்ததில் விஜய்பத் சிங்கானியாவுக்கு நிச்சயம் தனி இடம் உண்டு. அதே போல் 67-வது வயதில் உலகிலேயே அதிக உயரத்துக்கு ஹாட் ஏர் பலூன்களை செலுத்திய பெருமையும் இவருக்கு உண்டு. அதனாலேயே இந்திய விமானப் படை இவருக்கு கெளரவ கமடோர் (Air Commodore) பதவி கொடுத்தது.
மகன் வருகை
இப்படி சாகசங்கள் எல்லாம் ஒரு பக்கம் செய்து கொண்டிருந்த போது, பிசினஸை நான் பார்த்துக் கொள்கிறேன் என மகன் கெளதம் வருகிறார். கொஞ்ச நாள் அப்பா விஜய்பத் சிங்கானியா உடனேயே பிசினஸ் கற்கிறார். பின் தனியாக பறக்க நினைக்கிறார். அப்பாவுக்கு புரிந்து விட்டது. அல்லது புரிய வைக்கப்பட்டது.
சொத்து வழங்கள்
2015-ம் ஆண்டு வாக்கில் Raymond நிறுவனத்தில் அனைத்து முடிவுகளையும் எடுக்கும் அதிகாரமுள்ள தன் 37 சதவிகித பங்குகளையும் மகன் கெளதம் சிங்கானியாவுக்கு பரிசாகக் கொடுத்தார் அப்பா விஜய்பத் சிங்கானியா. இந்த பரிசளிப்புக்குப் பின் விஜய்பத் சிங்கானியாவும் Raymond இயக்குநர் குழுவில் ஒருவர் என்கிற அளவுக்கு இறக்கப்பட்டார். பெயருக்கு கெளரவ தலைவர். ஆனால் எதையும் செய்ய முடியவில்லை. அந்த விரக்தியின் வெளிப்பாடாக கடந்த இரண்டு வருடமாக மகனோடு அப்பா பேசாமல் மெளனத்திலும், வெறுமையில் சாகிறார்.
என் தப்பு தான்
என் மகன் என்னை உணர்வுப் பூர்வாக மிரட்டி என் 37% ரேமண்ட் பங்குகளை வாங்கிக் கொண்டான். நானும் அந்த மிரட்டலுக்கு பணிந்து ரேமண்ட் நிறுவனத்தை விட்டுக் கொடுத்தது என் வாழ்நாளில் நான் செய்த மிகப் பெரிய தவறு என வாய்விட்டு அழுகிறார் அந்த 80 வயது பிசினஸ் பழம் விஜய்பத் சிங்கானியா.
அதிகரித்த கசப்பு
சொத்துக்களை எல்லாம் கொடுத்த பின், அதாவது Raymond நிறுவனத்தின் லகானை கொடுத்த பின், விஜய்பத் எதிர்பார்த்த அளவுக்கு ரேமண்ட் நிறுவனத்திலேயே அவர் மதிக்கப்படவில்லை. கெளதமும் தனக்கு சரி எனப் பட்டதை எல்லாம் உடனடியாக செய்து பிசினஸை தன் போக்கில் வளர்க்க நினைத்தார். வளர்த்தும் காட்டினார். பிசினஸ் முடிவுகளில் இருந்து முற்ரிலுமாக வெளியேற்றப்பட்டார் விஜய்பத். அவருக்கு இயக்குநர்கள் குழுவில் ஒரு நபராக பங்கெடுத்துவிட்டு வீட்டுக்கு வருவதோடு சரி அவர் பணி Raymond-ல் முடிந்துவிட்டது.
வீட்டுப் பிரச்னை
மும்பையின் மலபார் ஹில் பகுதியில் உள்ள 36 அடுக்கு உல்லாச JK House-ல் விஜய்பத்துக்கு சேர வேண்டிய வீட்டைக் கூட Raymond இயக்குநர் குழு மூலம் தடுத்துவிட்டார் கெளதம். இந்த சம்பவத்துக்குப் பிறகு தான் அப்பா விஜய்பத்துக்கும், மகன் கெளதமுக்குமான கசப்பு வெளியே தெரிய ஆரம்பித்தது.மகனின் மறுப்பைக் கேட்டு முற்றிலும் மனம் உடைந்துவிட்டார் விஜய்பத் சிங்கானியா.
எதுக்கு வீடு
2007-ல் ஒரு பெரிய குடும்ப பிரச்னை எழுந்த போது குடும்பத்துக்குள்ளேயே ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது அதன் படி, விஜய்பத் சிங்கானியாவுக்கு மும்பையில் இருக்கும் JK House-ல் ஒரு வீட்டை குறைந்த விலைக்கு தருவதாக ஒப்பந்தமானது. அந்த வீடு ரேமண்ட் நிறுவனத்திடம் இருக்கிறது. விஜய்பத் மற்றும் சிங்கானியா குடும்பத்தினர் போட்ட ஒப்பந்தப்படி குறைந்த விலைக்கு வீட்டை தர ரேமண்ட் இயக்குநர் குழு தயாராக இல்லை. ரேமண்ட் நிறுவனம் சொல்லும் விலைக்கு வீட்டை வாங்குவதாக இருந்தால் தருகிறோம், எங்களால் ஒரு நல்ல சொத்தை நஷ்டத்துக்கு விற்க முடியாது என நேரடியாகச் சொல்லிவிட்டார் கெளதம் சிங்கானியா.
அவமானப்படுத்தப்பட்ட விஜய்பத்
எனக்கான வீட்டை நீ கொடுத்தே ஆக வேண்டும், நான் ரேமண்ட் நிறுவனத்தின் கெளரவ தலைவர். ஆக எனக்கும் ரேமண்ட் இயக்குநர் குழுவில் சில அதிகாரங்கள் இருக்கிறது என ஒரு கோபத்தில் சொன்னது தான் தாமதம், மகன் கெளதம் செயலில் இறங்கினார். உடனடையாக இயக்குநர் குழுவில் இருந்து அப்பா விஜய்பத் சிங்கானியாவையே தூக்கும் அளவுக்கு போய்விட்டார். பின் ஒரு சில காரணங்களுக்காக ரேமண்ட் இயக்குநர் குழு விஜய்பத்தின் கெளரவ தலைவர் பதவியை மட்டும் பரித்துவிட்டு இயக்குநராகவே வைத்துக் கொண்டது.
திருட்டு
அடுத்த கட்ட நடவடிக்கையாக ரேமண்ட் அலுவலகத்தில் விஜய்பத்துக்கு சொந்தமான பொருட்கள் அனைத்தும் மூட்டை கட்டி விஜய்பத்தின் வீட்டு அறைக்கு பார்சல் செய்யப்பட்டது. விஜய்பத்துக்கு இந்திய அரசு பத்ம பூஷன் விருது வழங்கி கெளரவித்திருந்தது. அந்த விருதைக் கூட யாரோ திருடிவிட்டார்கள் என 80 வயது விஜய்பத் கண்ணீரோடு பத்திரிகைகளில் கதறினார்.
திரும்ப வாங்கணும்
2007-ம் ஆண்டு கொண்டு வந்த சில சட்டங்கள் வழியாக மகனுக்கு கொடுத்த பரிசை, மீண்டும் தந்தை வாங்கிக் கொள்ள முடியுமாம். அப்பாவை ஒழுங்காக பார்த்துக் கொள்ளாத, அப்பாவின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யாத மகனுக்கு, தந்தை கொடுத்த பரிசுகளை மீண்டும் தந்தையே பெற்றுக் கொள்ளலாம் என ஒரு சட்டம் இருக்கிறதாம். அதை தான் விசாரித்து வருகிறாராம். அப்படி வழி இருந்தால் நிச்சயம் மீண்டும் விஜய்பத் ரேமண்டின் தலைவராவராம்.
கெளதம் தரப்பு
"என் தந்தையை நான் நன்றாகத் தான் பார்த்துக் கொள்கிறேன். ரேமண்ட் நிறுவனத்தின் தலைவர் என்கிற பதவி வேறு, என் தந்தைக்கு மகனாக நான் செய்ய வேண்டிய, செய்யும் கடமைகள் வேறு. என் தந்தை என்பதாலோ, ரேமண்ட் நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவர் என்பதாலோ விஜய்பத் சிங்கானியாவுக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை லட்சங்களுக்கு விற்று ரேமண்டில் நஷ்ட கணக்கு எழுத முடியுமா..? இப்படி வியாபாரம் பார்த்தால் எப்படி வாழ முடியும்..?. அப்பாவின் புகாரால் நான் தான் உலககுக்கு கெட்டவனாகத் தெரிகிறேன். ஆனால் எனக்கு ரேமண்ட் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பிலும், மகனாக என் கடமையிலும் எந்த ஒரு குழப்பமும் இல்லை" என தன் பதிலையும் பதிவு செய்கிறார் கெளதம்
இப்போது ரேமண்ட் எப்படி இருக்கிறது..?
2015-ல் இருந்து தலைமை ஏற்று நடத்தும் கெளதம் சிங்கானியா பிசினஸ் ரீதியாக பல நல்ல முன்னேற்றங்களைக் கண்டிருக்கிறார். ரேமண்டின் நிதி நிலையைப் பார்ப்போம். மார்ச் 2015-ல் 2,607 கோடி ரூபாயாக இருந்த வருவாய், 2018-ல் 2,980 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது. மார்ச் 2015-ல் 109 கோடி ரூபாயாக இருந்த நிகர லாபம், மார்ச் 2018-ல் 141 கோடியாக அதிகரித்திருக்கிறது.
அதிகரித்த ஏற்றுமதி
கெளதம் சிங்கானியா பொறுப்பேற்ற பின் ரேமண்ட் எத்தியோப்பியாவில் ஒரு புதிய ரேமண்ட் துணி உற்பத்தி ஆலையை நிறுவி இருக்கிறது. இப்போது 55 நாடுகளுக்கு மேல் ரேமண்ட் துணிகளை ஏற்றுமதி செய்கிறது. இப்படி நிலையாக விரிவாக்கத்தையும், லாப அதிகரிப்பையும் காட்டி இருக்கிறார் கெளதம். இதை இந்திய பிசினஸ் சமூகமும் நல்ல வளர்ச்சியாகவே பார்க்கிறது. ஆக எடுத்த காரியத்தை ஒழுங்காக ஒரு பிசினஸ்மேனாக செய்து வருகிறார் கெளதம். ஆனால் அப்பாக்கு ஒரு நல்ல மகனாகத் தான் இல்லை. இந்த உறவுப் பிரச்னைகளை அவர்களே விரைவில் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் என Ernst & Young நிறுவனம் கருத்துச் சொல்லி இருக்கிறது.
விஜய்பத் கதறல்
மகன் பிசினஸில் என்ன சாதித்தும் அப்பாவுக்கு ஏனோ அவரை அவமானப்படுத்திய காயங்களில் இருந்து கொஞ்சமும் மீள முடியாமல் தவிக்கிறார். அந்த தவிப்பின் உச்சமாக "என்னைப் போன்ற வயதான அப்பா அம்மாக்களுக்கு ஒன்றைச் சொல்கிறேன். நீங்கள் பெரும் பணக்காரரோ, நாடோடியோ, நீங்கள் உயிரோடு இருக்கும் வரை உங்கள் சொத்துக்களை உங்கள் குழந்தைகளுக்கு கொடுத்துவிடாதீர்கள். அப்படி கொடுத்தால் என்னைப் போல நீங்களும் உங்கள் பிள்ளைகளிடம் அன்றாட தேவைகளுக்கே கெஞ்ச வேண்டி இருக்கும்." என உடைந்து அழுகிறார். அருகில் அமர்ந்து தேற்றத் தான் ஆள் இல்லை.
ஒரு காலத்தில் இந்திய ஆடைகளின் ராஜாவாக வளம் வந்தவர் இன்று ஏதோ ஒரு மூலையில் முடங்கிக் கிடக்கிறார். இவரை கெளதம் சிங்கானியா எங்கே வைத்திருக்கிறார் என்பது கூட சரி வரத் தெரியவில்லை. இவர் ஏழ்மையாக இருக்கும் போட்டோக்களும் இணையத்தில் வளம் வந்து கொண்டு தான் இருக்கிறது. காசு கொடுக்கும் வரை இவர் காலையே சுற்றி சுற்றி வந்த கெளதம் சிங்கானியா இப்போது அப்பாவுடன் ஒரு போட்டோவில் கூட இல்லை.