பாகிஸ்தான் எல்லை 3,323 கிமீ, சீன எல்லை 4,000 கிமீ இந்த இரண்டு எல்லைக் கோடுகளை அந்தந்த நாட்டு ராணுவம் தாண்டாமல் பாதுகாப்பது தான் இந்திய ராணுவத்தின் (Indian Army) முக்கிய பணியாக இருக்கிறது. இந்த இரண்டு நாட்டோடும் இந்தியா சில முறை சண்டையும் செய்திருக்கிறது. சீனாவோடும், பாகிஸ்தானோடும் போர் செய்ய இந்திய ராணுவம் உடல் அளவிலும், மனதளவிலும் எப்போதும் தயாராக உள்ளது. ராணுவ தளவாடங்கள் ரீதியாக... சீனர்களின் தொழில்நுட்பத்தைத் முறியடிக்கும் நவீனரக ஆயுதங்கள் ரீதியாக..? இல்லை... என இந்திய விமானப் படைத் தளபதி B S Dhanoa பேட்டி கொடுத்திருக்கிறார். தேவையானதைச் சொன்னாலும் மத்திய அரசு மெத்தனம் காட்டி வருகிறது என்பது தான் ராணுவ கசப்பான உண்மை. அதற்கு நவீன ரக பீரங்கிகள் (டாங்கிகள்) திட்டம் ஒரு எடுத்துக் காட்டு. Rafale உலகறிந்த எடுத்துக் காட்டு.
இந்திய ராணுவத் திட்டம்
கடந்த 2009-ம் ஆண்டு இந்திய ராணுவம் ஒரு திட்டத்தை மத்திய அரசிடம் சொன்னது. அந்த திட்டத்தின் பெயர் FICV - future infantry combat vehicles. இந்த திட்டத்தின் படி இந்திய ராணுவத்துக்கு தேவையான 2,600 நவீன ரக போர் டாங்கிகளை (Tanks) ரூபாய் 60,000 கோடி செலவில் வரும் 2025-ம் ஆண்டுக்குள் வாங்கிச் சேர்ப்பது. அல்லது உள்நாட்டிலேயே தயார் செய்வது என முடிவானது. பாதுகாப்பு அமைச்சகம் உள்நாட்டிலேயே தயாரிக்கலாம் என முடிவு செய்தது.
ஏன் உள்நாட்டில் தயாரிக்கிறோம்
கடந்த 2010-ம் ஆண்டு இந்தியாவின் DRDO - Defence Research Development Organisation-ஆல் உருவாக்கப்பட்ட அர்ஜுன் எம்கே 1 ரக டாங்கிகள் ரஷ்யாவின் சரித்திரப் புகழ் டி90 டாங்கிகளுக்கு இணையாக செயல்பட்டதால் ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டது. எனவே தான் இந்திய ராணுவமும் இந்திய அரசை நம்பி தன் நவீன ரக டாங்கிகளை உள் நாட்டிலேயே தயார் செய்யச் ஒப்புக் கொண்டது.
இல்லை என்றால்..?
ஒருவேளை இந்திய ராணுவம் எதிர் பார்க்கும் தரத்தில் டாங்கிகள் இல்லை என்றால் ராணுவம் நேரடியாக தான் சொல்லும் நாட்டிடம் இருந்து ராணுவத் தளவாடங்களை வாங்கச் சொல்லி பாதுகாப்பு அமைச்சகத்துக்கு பரிந்துரைக்கலாம். பரிந்துரை செய்தும் இருக்கிறது இந்திய ராணுவம். 1990-களில் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அர்ஜுன் ரக டாங்கிகள் ஒழுங்காக செயல்படாத நிலையில், இந்திய ராணுவத்தின் அழுத்தத்தால் ரஷ்யாவின் டி90 டாங்கிகள் வாங்கப்பட்டன.
இந்திய போர்களில் டாங்கிகள்
1971 இந்தோ பாக் போரில் பதான்கோட் பகுதியைக் கைப்பற்ற பாகிஸ்தான் திட்டமிட்டிருந்தது. இந்திய ராணுவத்தின் முகாமும் அதே பதான் கோட்டில் தான் இருந்தது. பாகிஸ்தானின் ராணுவ முகாம் சியால்கோட்டில் இருந்தது. பதான்கோட் தாக்குதல் மூலம் இந்திய அரசின் கவனம் பதான்கோட் பக்கம் திரும்பினால் போதும் பங்களாதேஷில் போரை முடித்து பாக் கொடியை பறக்க விடலாம் என யோசித்துக் கொண்டிருந்தது பாகிஸ்தான்.
டாங்கிச் சண்டை
பயன்படுத்திய ஆயுதம் டாங்கிகள் தான். பாகிஸ்தானின் Shabazpur, Shakargarh bulge பகுதிகளில் இருந்து வந்த பாக் டாங்கிகளை இந்தியா வீழ்த்தியதும் டாங்கிகளை வைத்து தான். இந்தியா பாகிஸ்தானின் 46 டாங்கிகளை வீழ்த்தியதாக சில செய்திகள் கணக்கு சொல்கின்றன. இந்தியா தரப்பில் 10 டாங்கிகள் வீழ்ந்ததாம். அந்த அளவுக்கு டாங்கிகள் இந்தியாவுக்கு அவசியமானது.
டாங்கிகளின் முக்கிய பயன்கள்
டாங்கிகளின் தேவையை டாவின்சி கூட சொல்லி இருக்கிறார்.
1. போர் வீரர்கள் பாதுகாப்பான வாகனத்தில் இருந்து கொண்டு எதிரியைத் தாக்குவது தான் டாங்கிகளின் முதல் தேவை, பயன் எல்லாமே.
2. நிலத்தைப் பாதுகாக்கும் ஒரு நடமாடும் ராணுவக் குழு என்றே சொல்லலாம். நிலம் வழியாக மலை முகடுகளோ, பாலைவனமோ, பள்ளத் தாக்கோ, சதுப்பு நிலங்களோ எல்லா இடத்திலும் டாங்கிகள் பயணிக்கும்.
3. டாங்கிகளில் இருந்து கொண்டே 3 - 5 கிமீ இலக்குகளை தாக்கலாம்.
4. வீரர்களின் உயிரிழப்பு பெருமளவில் குறையும். இன்னும் ராணுவ ரீதியாக பலன்கள் டாங்கிகளால் அதிகம் இருக்கிறது, நாம் விஷயத்துக்கு வருவோம்.
என்ன நடந்தது..?
2009 - இந்திய ராணுவம் தன் தேவையை பாதுகாப்பு அமைச்சகத்திடம் சொன உடன் ஒரு சில மாதங்களிலேயே உள்நாட்டிலேயே ராணுவ டாங்கிகளை தயாரிக்க தனியார் நிறுவனங்களை தேர்தெடுக்கும் வேலையைத் தொடங்கினார்கள்.
2012 - ஒரு சில காரணங்களுக்காக இந்திய ராணுவ டாங்கிகளைட் தயாரிக்கும் வேலைக்கு தனியார் நிறுவனங்களை தேர்ந்தெடுக்க வேண்டாம் என தேர்வு வேலைகளை அப்படியே முடக்கினார்கள்.
2014 - சொன்ன நேரத்தில் 2025-ல் இந்திய ராணுவத்துக்கான நவீன ரக டாங்கிகள், இந்திய ராணுவம் கேட்கும் தரத்தில் தயாரித்துத் தரப்படும் என பாதுகாப்பு அமைச்சகம் தகவல்.
கடுப்பில் ராணுவம்
இந்திய ராணுவம் கேட்டிருக்கும் தரத்தில் ராணுவ டாங்கிகள் தயார் செய்யு பணிகள் நத்தை வேகத்தில் ஊர்ந்து கொண்டிருப்பது தான் பிரச்னை. அந்த பிரச்னைக்கு இந்தியா பணையம் வைத்திருக்கும் விலை இந்திய நாட்டின் பாதுகாப்பு. காரணம் மேலே சொன்ன பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் மாறி மாறி தன் ராணுவ தளவாடங்களையும், ஆயுத பலத்தையும் அதிகரித்துக் கொண்டே இருப்பது தான்.
ஆயுதக் குவிப்பு
ராணுவ உளவுத் துறையின் தகவல்கள் படி கடத 10 ஆண்டுகளில் இந்தோ - சீன எல்லையில் சீன ராணுவ தளவாடங்கள் குறைந்தபட்சம் 5 - 7 மடங்கு அதிகரித்திருக்கிறது. இந்தோ - பாக் எல்லையில் பாகிஸ்தானின் ராணுவ தளவாடங்கள் மற்ரும் ஆயுதக் குவிப்பு 2 - 3 மடங்கு அதிகரித்திருக்கிறார்கள். இந்த இரண்டு நிலப் பரப்புகளுக்கு சரியாக பதிலடி கொடுக்கும் விதத்தில் இந்தியா செய்ய வேண்டிய குறைந்தபட்ச பாதுகாப்பு நடவடிக்கை தான் 2600 நவீன ரக டாங்கிகளை தயார் செய்வது. இதை கூட ஒழுங்காக ஆட்சியாளர்கள் கொடுக்கவில்லை என்றால் என்ன செய்வது என கொந்தளித்திருக்கிறார்கள்.
அரசுத் தரப்பு
"ராணுவ அதிகாரிகள் தரப்பில் ஒவ்வொரு நாளும் புதிய புதிய மாற்றங்களைச் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். இப்படி ஒவ்வொரு மாதத்துக்கும் புதிய மாற்றங்களைச் சொல்லிக் கொண்டே இருந்தால் எப்படி வேலையைப் பார்ப்பது. ராணுவ தரப்பில் முழுமையாக ஆலோசித்து final plan-ஐ சமர்பித்திருந்தால் இத்தனை கால தாமதம் ஆகி இருக்காது" என பாதுகாப்பு அமைச்சகம் சொல்கிறது.
ராணுவ தரப்பு
"இதற்கான prototype-கள் கூட தயாரிக்கப்படாத நிலையில் திட்டங்களை மாற்றுவதில் தவறில்லையே... ரானுவத்துக்கு ஒதுக்கும் பட்ஜெட்டில் அதை முழுமையாக, சரியாக பயன்படுத்திக் கொள்ள நினைப்பது தவறா..? திட்டத்தை அமைச்சகத்திடம் கொடுத்து 10 ஆண்டுகள் ஆகிறது இன்னும் உருப்படியாக ஒரு மாதிரியைக் கூட காட்டவில்லை என்றால் ஏன் திட்டங்களை மாற்றக் கூடாது. சீனாவும் பாகிஸ்தானும் நேற்று கண்டுபிடித்த நவீன ஆயுதங்களை வைத்து சண்டை இடும் போது, இந்தியா மட்டும் 10 வருட பழைய ஆயுதங்களை வைத்து சண்டை செய்ய முடியுமா..?" என ராணுவத்தினரும் மல்லுக்கு நின்றிருக்கிறார்கள். ஆனால் அரசுத் தரப்பு தான் பதில் சொல்லவில்லை.
விதிகள் பிரச்னை
2014-க்குப் பிறகு ஒருவழியாக மஹிந்திரா & மஹிந்திரா, ரிலையன்ஸ் டிஃபென்ஸ், லார்சன் & டியூப்ரோ, டாடா மோட்டார்ஸ், பாரத் ஃபோர்ஜ் போன்ற நிறுவனங்கள் இந்த 60,000 கோடி திட்டத்தை வலைத்துக் போட துடித்தன. பாதுகாப்பு அமைச்சகத்தின் Defence Procurement Procedure (DPP)-ன் படி Make (high tech) category-ன் கீழ் இந்திய ராணுவ டாங்கிகளுக்கான prototype-களை செய்ய வேண்டும். Make (high tech) category-ன் கீழ் prototype செய்தால், prototype-க்கான செலவில் 80%-த்தை அரசும், 20% செலவுகளை நிறுவனங்களை செய்ய வேண்டும்.
prototype பிரச்னை
மேலே சொன்ன நிறுவனங்களில் இரண்டு நிறுவனங்களோடு அரசின் Ordnance Factory Board-ம் இணைந்து prototype-ஐ தயாரிக்க சொன்னது அரசு. பாதுகாப்பு அமைச்சகத்தின் Defence Procurement Procedure (DPP)-ன் படி Make (high tech) category-ன் படியே தயாரிப்பதாகத் தான் பேச்சு. அதற்காக மூன்ரு நிறுவனத்துக்கு தலா 3,000 கோடி ரூபாயும் வழங்கப்பட்டது.
எனக்கு அரசு காசு வேண்டாம்
ஒரு பெரிய நிறுவனம் மட்டும் அரசு கொடுத்த மானியத்தை வாங்காமல் பாதுகாப்பு அமைச்சகத்தின் Defence Procurement Procedure (DPP)-ன் படி Make II category-ன் கீழ் தயாரித்தது. இந்த சட்டப் படி prototype-களுக்கு அரசு தன் சார்பாக எந்த மானியம் அல்லது செலவுகளையும் கொடுக்கக் கூடாது. prototype-களை நிறுவனங்களே செலவு செய்து தயாரித்துக் கொடுக்க வேண்டும்.
கட்டையைப் போடும் அரசு
"பார்த்தீர்களா, ஒரு நிறுவனம் அரசிடம் ஒரு ரூபாய் கூட வாங்காமல் prototype -களை செய்து கொடுக்க முன் வந்திருக்கிறது. ஆனால் அரசோ ஒரு நிறுவனத்துக்கு 3000 கோடி என மூன்று நிறுவனத்துக்கு 9000 கோடி ரூபாயை தண்டமாக செலவழித்து விட்டார்கள். இது டெண்டர் விடும் விதிமுறைகளிலேயே தவறு நடந்திருக்கிறது என திட்டத்தை மேற்கொண்டு செயல்படுத்த விடாமல் சில பாதுகாப்பு துறை அதிகாரிகளே முட்டுக் கட்டை போட்டிருக்கிறார்கள்.
அந்த அதிகாரி
சமீபத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் நவீன ரக டாங்கிகளைப் பற்றிப் பேசிய ராணுவ உயர் அதிகாரி ஒருவர் "இந்த டாங்கிகளை 2025-க்குள் இந்திய ராணுவத்தில் சேர்ப்பதாகச் சொன்னீர்கள், ஆனால் போகிற போக்கைப் பார்த்தால் 2050-ல் கூட டாங்கிகள் இந்திய ராணுவத்துக்கு கிடைக்காது போலிருக்கிறது. இந்த லட்சணத்தில் நம்மை விட அதிக ஆயுதம் பலம் கொண்ட சீனாவோடு சண்டை செய்யணுமாம்" என வெளிப்படையாக அதிருப்தியை பதிவு செய்திருக்கிறாராம்.
தலையில் கை வைத்த ராணுவம்
நீங்கள் இந்த 9000 கோடி ரூபாயைப் பார்த்துக் கொண்டு, இந்தியாவை சீனாவிடமோ, பாகிஸ்தானிடமோ அடி வாங்க வைத்து விடாதீர்கள்..! இந்த திட்டம் இந்திய ராணுவத்துக்கு அவ்வளவு முக்கியமான திட்டம். தயசெய் செய்து இந்த திட்டத்தை 2025-க்குள் முழுமையாக செயல்படுத்த உதவுங்கள் என கடுப்பிலும் கணிடோடு கேட்டிருக்கிறது ராணுவ தரப்பு.
என்ன ஆச்சு...?
இப்போது வரை பாதுகாப்பு அமைச்சகமோ அல்லது ராணுவ தரப்போ, இந்தியாவுக்கான நவீன டாங்கிகள் திட்டம் நல்ல படியாக தொடங்கிவிட்டோம், இத்தனை ஆண்டுகளில் எங்களுக்கு டாங்கிகள் கிடைத்துவிடும் அல்லது கொடுத்துவிடுவோம் என யாரும் சொல்ல வில்லை... தங்கள் குடும்பம், குழந்தைகள், எதிர்காலம் என அனைத்தையும் விட்டு விட்டு ராணுவ ஒழுங்கோடு நாட்டை காப்பாத்த கதறுகிறார்கள் ராணுவத்தினர்கள். அரசியல்வாதிகளோ, 9000 கோடி ஊழல் என அறிக்கை சமர்பிக்கிறார்கள். இன்னும் எத்தனை விக்ரம் பத்ராக்கள், அருன் கேத்தர்பால், ஜஸ்வந்த் சிங் ராவத் என இந்திய அரசின் மெத்தனத்தால் எல்லையைக் காத்து உயிர் விடப் போகிறார்களோ... தெரியவில்லை.