சென்னை: மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராயின் புதிய கட்டண அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை முதல் கேபிள் டிவி ஒளிபரப்பு சேவை நிறுத்தம் செய்யப்படும் என தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கம் அறிவித்துள்ளது. புதிய முறை அனைத்து தரப்பு மக்களையும் கடுமையாகப் பாதிக்கும் என்பது கேபிள் டிவி ஆபரேட்டர்களின் குற்றச்சாட்டாகும்.
ஆண்டனா மூலம் டிவி பார்த்தவர்களை கேபிள் டிவி மூலம் டிவி பார்க்க வைத்தனர். சேட்டிலைட் சேனல்களின் வருகைக்குப் பின்னர் கேபிள் டிவி மட்டுமல்லாது டிஷ் ஆண்டனா மூலம் டிவி சீரியல்களையும், நிகழ்ச்சிகளையும் பார்த்து ரசிக்கின்றனர் மக்கள். இவை அனைத்திலுமே எஸ்டி மற்றும் எச்டி பேக்கேஜ் முறையில் விரும்பிய சேனல்களை வாடிக்கையாளர்கள் பெற்று பயன்பெற்று வந்தார்கள்.
மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், கேபிள் மற்றும் டிடிஎச் சேவை குறித்து அண்மையில் புதிய அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, வாடிக்கையாளர்கள் 100 இலவச சேனல்களை அடிப்படை கட்டணம் 155 ரூபாயில் பெறலாம் என்றும் அதற்கு மேல் கட்டண சேனல்களை மக்களே தேர்வு செய்து அதற்குரிய கட்டணத்தை செலுத்தலாம் எனவும் அறிவித்துள்ளது. புதிய விதிமுறைகள் அமலுக்கு வரும் போது இப்படிப் பேக்கேஜாகக் கட்டண தொலைக்காட்சி சேனல்களை வாடிக்கையாளர்களால் பெற முடியாது. ஆனால் இலவச சேனல்களை அடிப்படை பேக்கேஜ்களில் பார்க்க முடியும். ஆனால் இதற்கும் செட்-ஆப் பாக்ஸ் கட்டாயம்.
அதிகரிக்கும் கட்டணம்
ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் நெட்வொர்க் கெபாசிட்டி கட்டணமாக 130 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. இதனுடன் 18% ஜிஎஸ்டி சேர்த்து 153.40 ரூபாய் கட்ட வேண்டுமென்று கூறப்பட்டது. தூர்தர்ஷன் உட்பட குறைந்தபட்சம் 100 சேனல்கள் இவ்வாறு ஒளிபரப்பாகுமென்றும், பார்வையாளர்கள் தங்களுக்கென்று தேவைப்படும் சேனல்களுக்கான கட்டணத்தை ஜிஎஸ்டி தொகையுடன் சேர்த்துத் தனியாகக் கட்ட வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டது.
மக்களுக்கு கட்டண சுமை
இந்த விதிமுறைகள் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. டிராயின் இந்த புதிய விதிமுறைக்கு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த புதிய முறையால் கேபிள் டிவி கட்டணம் 200 ரூபாய்க்கு மேல் வசூலிக்க வேண்ய நிலை ஏற்பட்டுள்ளது. இது அனைத்து தரப்பு மக்களையும் கடுமையாகப் பாதிக்கும் என்றும், பெரு நிறுவனங்களுக்குச் சாதகமாக டிராய் செயல்படுகிறது என்றும் கேபிள் ஆபரேட்டர்கள் குற்றம்சாட்டினர்.
இடைக்கால தடை விதிக்க மறுப்பு
டிராய் வெளியிட்ட அறிவிப்பாணைக்குத் தடை விதிக்கக் கோரி சென்னை மெட்ரோ கேபிள்ஆபரேட்டர்கள் சங்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த டிசம்பர் 28ஆம் தேதியன்று நீதிபதி வைத்தியநாதன் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, விருப்பப்பட்ட சேனல்களை பார்ப்பதற்கான கால அவகாசம் ஜனவரி 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாகத் தெரிவித்தார் டிராய் சார்பில் ஆஜரான வழக்கறிஞர். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி வைத்தியநாதன், டிராய் அறிவிப்பாணைக்கு இடைக்காலத் தடை ஏதும் விதிக்க முடியாது என்று உத்தரவிட்டார்.
இலவச சேனல்கள் 18 % ஜிஎஸ்டி
1 முதல் 100 இலவச சேனல்களைப் பார்க்க 130 ரூபாய் உடன் 18 சதவிகிதம் ஜிஎஸ்டி எனச் சேர்த்து 153.50 ரூபாயை வாடிக்கையாளர்கள் கட்டணமாகச் செலுத்த வேண்டும். 125 இலவச சேனல்கள் பார்க்க வேண்டும் என்றால் ரூ.150 உடன் 18 சதவிகிதம் ஜிஎஸ்டி சேர்த்து 177 ரூபாயைக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். 150 இலவச சேனல்களைப் பார்க்க வேண்டும் என்றால் ரூ. 170 உடன் 18 சதவிகிதம் ஜிஎஸ்டி என 200.50 ரூபாயைக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். 175 இலவச சேனல்களைப் பெற வேண்டும் என்றால் ரூ. 190 உடன் 18 சதவிகிதம் ஜிஎஸ்டி என 224.50 ரூபாயைக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
ரூ. 248 கட்டணம் கூடவே ஜிஎஸ்டி
200 இலவச சேனல்கள் வரை பார்க்க வேண்டும் என்றால் ரூ. 210 உடன் 18 சதவிகிதம் ஜிஎஸ்டி என 248 ரூபாயைக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். இப்படித் தொடர்ந்து கூடுதலாக மேலும் 25 இலவச சேனல் வேண்டும் என்றால் அடிப்படை கட்டணத்துடன் மேலும் 25 ரூபாய் கட்டணம் கூடுதலாக ஜிஎஸ்டி எனத் திட்டம் நீள்கிறது. சன் குழும சேனல்கள், ஜீ குழும சேனல்கள், ராஜ் குழும சேனல்கள், ஸ்டார் குழும சேனல்கள், கலர்ஸ் சேனல், மெகா டிவி போன்றவை கட்டண சேனல்களாக உள்ளன. கட்டண சேனல்கள் பார்க்க வேண்டும் என்றால் மேலே கூறிய அடிப்படை திட்டங்களுள் ஒன்றைத் தேர்வு செய்துகொண்டு கட்டண சேனல்களுக்கான கட்டணம் கூடவே 18 சதவிகிதம் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.
கேபிள் ஆபரேட்டர்கள் ஸ்டிரைக்
தேவைப்படும் போது பேக்கேஜ்களை மாற்றிக்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இலவச சேனல்கள் மாநிலத்திற்கு ஏற்றவாறு மாறுபடும். கேபிள் டிவி என்றால் மாவட்டம் வாரியாக மாறும். கட்டண சேனல்களின் விலை மொபைல் ரீசார்ஜ் கட்டணங்கள் போன்று அவ்வப்போது மாற வாய்ப்புள்ளது. வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ள புதிய கட்டண விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை முதல் கேபிள் டிவி ஒளிபரப்பு சேவை நிறுத்தம் செய்யப்படுவதாக தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கம் அறிவித்துள்ளது. டிராய் அவசரகதியில் இந்த நடைமுறையைக் கொண்டுவருவதாகத் தெரிவித்துள்ளது.
சீரியல் பார்க்க முடியாதோ
டிவி சேனல்களில் சீரியல்களை பார்த்து பழக்கப்பட்ட மக்களுக்கு கேபிள் டிவி ஸ்டிரைக் என்பது சற்றே அதிர்ச்சிகரமான விசயம்தான். காசு கொடுத்து சீரியல் மட்டுமல்லாது விளம்பரங்களையும் பார்க்கின்றனர். அப்போ நாளை முதல் சீரியல் பார்க்க முடியாதா? டிஷ் ஆண்டனா இருந்தா பார்க்கலாமா என்று இப்போது முதலே கேட்கத் தொடங்கிவிட்டனர்.