என்னப்பா தலைப்பிலேயே வயித்த கலக்க வெக்குற... என்ன பிரச்னை என்று கேட்கிறீர்களா..? ஜூன் 2015-க்குப் பிறகு அசையாச் சொத்துக்களுக்கு 20,000 ரூபாய்க்கு மேல் கொடுத்து வாங்கி இருந்தாலோ.. விற்று இருந்தாலோ.. வருமான வரித் துறை விளக்கம் கேட்டு நோட்டிஸ் விட இருக்கிறது.
ஏன்..?
வருமான வரிச் சட்டம் பிரிவு 269SS-ன் படி எந்த ஒரு தனி நபரும் 20,000 ரூபாய்க்கு மேலான தொகையை ரொக்கமாகக் கொடுக்கவோ வாங்கவோ கூடாது. கொடுக்க வேண்டிய பணத்தை காசோலையாகவோ, டிடி அல்லது ஆர்டிஜிஎஸ் முறையில் தான் கொடுக்க வேண்டும், வாங்க வேண்டும்.
மீறி வாங்கினால்
மேலே சொன்ன 269SS சட்டத்தை மீறி ரொக்கமாகச் சொத்தை விற்பவர் வாங்கினால் வருமான வரிச் சட்டப் பிரிவு 271D-ன் படிப் பணத்தை வாங்கிக் கொண்டவருக்கு (சொத்தை விற்றவருக்கு) வாங்கிய தொகை அப்படியே அபராதமாக விதிக்கப்படும். அதோடு கொடுத்த ரொக்கத்தை மீண்டும் சொத்தை புதிதாக வாங்கியவரிடமே (பணம் கொடுத்தவரிடமே) திரும்பத் தர வேண்டி இருக்கும்.
மீறிக் கொடுத்தால்
வீட்டை வாங்கும் போது ரொக்கமாக பணத்தை கொடுத்தது அரசுக்குத் தெரிய வந்தால், வீட்டை விற்றவரிடம் இருந்து பணத்தை திரும்ப வாங்கிக் கொடுக்கப்படும். வீட்டை வாங்க ரொக்கமாகக் கொடுத்த தொகை எப்படி வந்தது என வருமான வரித்துறையினருக்கு விளக்கம் அளிக்க வேண்டும். விளக்கம் திருப்திகரமாக இல்லை என்றால், வீட்டை வாங்கக் கொடுத்த ரொக்கத் தொகைக்கு 30% வரி விதிக்கப்படும்.
எப்போது இருந்து
இந்தச் சட்டம் கடந்த 2015-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. ஜூன் 2015-ல் இருந்து அமல்படுத்தப்பட்டிருக்கிறது. எனவே கடந்த ஜூன் 01, 2015-ல் இருந்து இன்று வரை வீட்டை வாங்கியவர்கள் விற்றவர்கள் எல்லாம் ஒழுங்காக வருமான வரித்துறையினரிடம் உண்மையைச் சொல்லி சரி செய்து கொள்வது நல்லது.
தில்லியில் தொடக்கம்
இந்த திட்டப் படி தில்லியில் உள்ள 21 அரசு பத்திரப் பதிவு அலுவலகங்களிலும் வருமான வரித்துறையினர் ஒவ்வொரு பக்கமாகப் பார்த்து யார், எவ்வளவு ரொக்கம் கொடுத்து சொத்துக்களை வாங்கி இருக்கிறார்கள் எனக் கட்டம் போட்டிருக்கிறார்கள். இப்போது அடுத்த சில வாரங்களில் சிக்கி இருக்கும் அனைவருக்கும் நோட்டீஸ் வழங்க இருக்கிறார்கள்.
ஏன் இத்தனை அழுத்தம்
ரியல் எஸ்டேட் மற்றும் தங்கம் தான் இந்தியாவில் உள்ள கறுப்பு பணத்தின் வீடாக இருக்கின்றன. இத்தனை சட்டங்கள் இயற்றிய பின்னும் மக்களுக்கு கறுப்புப் பணம் குறித்த விழிப்புணர்வோ, பயமோ வரவில்லை என்றால் என்ன செய்ய, கண்டிப்புடன் நடவடிக்கை எடுத்தால் தானே... இனி வருபவர்களாவது கொஞ்சம் ஒழுங்காக வங்கிகளில் பணப் பரிமாற்றம் செய்து கொள்வார்கள்..? என வருமான வரித் துறையினர் பொங்கி எழுந்துள்ளனர்.