மூன்றாம் உலகப் போர் என ஒன்று நடந்தால் (நடக்காது), அப்படி நடந்தால் உலகமே அழிந்துவிடும். அத்தனை நாடுகளிடம் அணு ஆயுதம் இருக்கின்றன. ஆக அப்படி ஒரு சண்டை போட ஒரு காரணம் வேண்டும் என்றால் தண்ணீரைக் காட்டலாம். அத்தனை முக்கியமான தண்ணீர் இப்போது வங்கிகளின் வாராக் கடனுக்கும் காரணம் எனச் சொல்கிறது WWF - World Wildlife Fund என்கிற அமைப்பு.
வங்கிகள் பிரச்னை
இப்போது மோடி ஆட்சிக் காலத்தில் தாறுமாறாக அதிகரித்திருக்கிறது வாராக் கடன் பிரச்னை. இதற்கு முந்தைய காங்கிரஸ் கட்சி கொடுத்த வாராக் கடன்கள் தான் காரணம் என நழுவிக் கொள்ள முடியாது. அதை விட மிகப் பெரிய காரணம் தண்ணீர் தான் என்கிற WWF-ன் அறிக்கை.
அறிக்கையில் இருந்து
இந்திய வங்கிகள் சங்கத்துடன் இணைந்து WWF தன் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. 'Hidden Risks and Untapped Opportunities: Water and the Indian Banking Sector என்பது தான் அறிக்கையின் பெயர். இந்த அறிக்கையில் தண்ணீர் எப்படி இந்திய வங்கிகளுக்குத் தலைவலி கொடுக்கிறது என ஆதாரங்களோடு பேசி இருக்கிறது.
எந்தத் துறைகள்
குறிப்பாக மின்சாரம் மற்றும் விவசாயம் துறை சார்ந்த தொழில்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகிறது என்பதை ஆதாரத்தோடு விளக்கி இருக்கிறார்களாம். இந்திய வங்கிகளின் மொத்த கடன்களில் மின்சாரம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களில் தான் அதிக கடன்களைக் கொடுத்திருக்கிறார்களாம். இந்த இரண்டு துறைகளுக்கு மட்டும் இந்தியாவின் மொத்த கடனில் சுமார் 40%-க்கு மேல் கொடுத்திருக்கிறார்கள்.
வாராக் கடன் நிலை
இன்றைய தேதிக்கு இந்திய வங்கிகள் வழங்கி இருக்கும் மொத்த கடனில் 10 சதவிகிதத் தொகை வாராக் கடனாக இருப்பதற்கு முக்கிய காரணம் பணம் கொடுக்க வேண்டியவர்கள் (Sundry Debitors) கொடுக்காமல் இருப்பது தானாம். இப்படிக் கொடுக்க வேண்டியவர்கள் கொடுக்காமல் இருப்பதால் தான் இந்தியாவில் பணப் புழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறதாம்.
நிதி அயோக்
எப்போதும் இல்லாத அளவுக்கு இந்தியா, இந்த 2018 - 19 கால கட்டத்தில் தண்ணீர் பிரச்னைகளை, பற்றாக்குறைகளைச் சந்தித்து வருகிறதாம். இனி வரும் நாட்களிலாவது அனைவரும் ஒன்று சேர்ந்து தண்ணீர் மேலாண்மையை சரியாகச் செய்ய வேண்டும், என நிதி அயோக்-ம் திட்டம் தீட்டி வருகிறது.
ஏழை மக்களுக்கு மட்டுமே சிம்ம சொப்பனமாக இருந்த தண்ணீர் பிரச்னை இன்று கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான, பணம் வராமல் போவதற்கான பிரச்னையாக மாறி வருவது ஒரு விதத்தில் நல்லது தான். அப்போதாவது இந்திய ஏழைகளுக்கு கிடைக்க வேண்டிய குடிநீர் ஒழுங்காக கிடைக்கும் என்கிற நம்பிக்கை தான்.