டெல்லி: லோக்சபா தேர்தல் இன்னும் சில மாதங்களில் வர உள்ளதால் மத்திய அரசு, நிதிப் பற்றாக்குறையைக் குறைப்பதைக் காட்டிலும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு ஏற்றவாறு பட்ஜெட்டில் அறிவிப்புகள் வெளியிடப்படும் எனப்படுகிறது. குறிப்பாக விவசாயிகளை மகிழ்விக்கும் வகையிலான அறிவிப்புகள் வெளிவரலாம். அதே நேரத்தில் நிதிப் பற்றாக்குறை உள்ளிட்ட பல பிரச்சனைகளை கையாளுவது மத்திய அரசுக்கு சவாலாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
நாட்டின் நிதிப் பாற்றாக்குறை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. நடப்பு நிதி ஆண்டுக்கு மத்திய அரசு, நிதிப் பற்றாக்குறை 3.3 சதவிகிதமாக இருக்கும் என்று கணித்துள்ளது. மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, சிகிச்சைக்காக வெளிநாடு செல்வதற்கு முன்பாக அளித்த பேட்டியில், மத்திய பட்ஜெட்டில் எப்படிப்பட்ட அறிவிப்பு இருக்கும் என்பது சூழ்நிலையைப் பொறுத்து முடிவாகும். எனவே, அது குறித்து தற்சமயம் ஒரு முடிவுக்கு வந்துவிட முடியாது. சில விஷயங்களுக்குக் கவனம் கொடுத்தேயாக வேண்டிய கட்டாயம் இருக்கும். அதற்கு நிச்சயமாக உடனடி கவனம் கொடுக்கப்படும். பொருளாதாரம் என்ன கேட்கிறதோ, அதற்கு ஏற்றாற் போலத்தான் அறிவிப்புகளை பட்ஜெட்டில் வெளியிட முடியும் என்று சூசகமாக பதில் அளித்துள்ளார்.
மத்திய அரசு அறிமுகப்படுத்திய சரக்கு மற்றும் சேவை வரியான ஜி.எஸ்.டி யில் பல்வேறு பொருட்களுக்கு சமீபத்தில்தான் வட்டி விகிதம் குறைக்கப்பட்டது. தேர்தல் வர உள்ளதால், பட்ஜெட் தாக்கல் அன்று பல அதிரடி அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம். வரிகுறைப்பு, வருமானவரி விலக்கு வரம்பு அதிகரிப்பு உள்ளிட்ட பல எதிர்பார்ப்புகள் இருந்தாலும் மோடி அரசுக்கு பல சவால்களும் காத்திருக்கின்றன.
கிராமப்புற வாக்காளர்கள்
கிராமப்புற வாக்காளர்கள் மற்றும் சிறு வியாபாரிகளை மகிழ்விப்பதற்காக மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவிப்புகளை வெளியிடுமேயானால், நிதிப் பற்றாக்குறை கண்டிப்பாக அதிகரிக்கும். அதே நேரத்தில் நிதிப் பற்றாக்குறை இலக்கை அடைவதற்கு மத்திய அரசு ஏதாவது அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று நிதித் துறை வல்லுநர் ரூக்மேகர் கருத்து தெரிவித்துள்ளார்.
பற்றாக்குறை அதிகரிப்பு
அரசின் வருவாயை விட செலவு அதிகமானால் நிதிப் பற்றாக்குறை ஏற்படும். நடப்பு ஆண்டுக்கான நிதிப் பற்றாக்குறை முதல் 9 மாதங்களிலேயே 15 சதவிகிதம் அதிகரித்துவிட்டது. அரசு, நிதிப் பற்றாக்குறையை 3.3 சதவிகித ஜிடிபிக்கு மேல் நீட்டிக்கக் கூடாது என்று இலக்கு வைத்திருந்தது. ஆனால், அது தற்போது சாத்தியமில்லை என்பது தெளிவாகிறது. இந்தச் சிக்கலுக்குக் காரணம் மறைமுக வரிதான் என்று வல்லுநர்கள் கருத்து கூறுகின்றனர்.
வர்த்தகப்போரால் பாதிப்பு
இந்தியா தனது எரிபொருள் தேவைக்கு 80 சதவிகிதம் இறக்குமதியை நம்பித்தான் உள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கமாகவே இருக்கிறது. சீனா - அமெரிக்கா இடையிலான வர்த்தகப் போரும் இறக்குமதிச் செலவை உயர்த்தியுள்ளது.
ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகரிக்கும் போது வணிகப் பற்றாக்குறை ஏற்படும். இந்தப் பற்றாக்குறை நடப்பு நிதியாண்டின் முதல் 8 மாதங்களில் 129.9071 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. இது சென்ற ஆண்டு 106.3734 பில்லியன் டாலர்களாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.
வாராக்கடன்கள் அதிகரிப்பு
வங்கிகளின் மொத்த கடன் அளவு ரூ. 11 லட்சம் கோடியாக உள்ளது. இதில் மறு சீரமைப்புக் கடன் மற்றும் வாராக் கடனும் (என்பிஏ) அடங்கும். இது வங்கித் துறைக்கு மிகப் பெரிய தலைவலியாக இருந்து வருகிறது. 21 பொதுத் துறை வங்கிகள் வசம்தான் நாட்டின் சொத்துக்களில் மூன்றில் இரண்டு பங்கு உள்ளது. அவர்களிடம் மட்டும் என்.பி.ஏ கடன்கள் 11 லட்சம் கோடி இருக்கிறது. வரும் மார்ச் மாதத்துக்குள் 70,000 கோடி ரூபாய் என்.பி.ஏ கடனை திரும்பப் பெற முடிவெடுத்துள்ளது அரசு. இதுவரை 80,000 கோடி என்.பி.ஏ கடன் பெறப்பட்டுள்ளது.
வளர்ச்சி குறைய வாய்ப்பு
2019-20 நிதி ஆண்டுக்கான உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.3 சதவீதமாக இருக்கலாம் என கிரிசில் தரச்சான்று நிறுவனம் கணித்துள்ளது. நடப்பு நிதி ஆண்டில் வளர்ச்சி 7.2 சதவீதமாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளது. 2018-19 நிதியாண்டின் முதல் இரண்டு காலாண்டுகளில், பொருளாதார வளர்ச்சி முறையே 8.2 மற்றும் 7.1 சதவிகிதமாக இருந்தன. மொத்த நிதியாண்டுக்கும் வளர்ச்சி 7.2 சதவிகிதம் ஆக இருக்கும் என்று மத்திய அரசு கணித்துள்ளது. இது மத்திய ரிசர்வ் வங்கி கணித்த 7.4 சதவிகிதத்தை விடக் குறைவானது. கடந்த ஆண்டு வளர்ச்சி 6.7 சதவிகிதம் ஆகவே இருந்தது. நடப்பு நிதியாண்டில் நுகர்வு குறைவாக உள்ளதால் ஜிடிபி 7 சதவிகிதத்தை ஒட்டியே இருக்கும் என்றும் நிதித் துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இந்த சவால்களை சமாளிக்க இன்னொரு ஐந்தாண்டு காலம் ஆட்சிக்கட்டிலில் அமர்வாரா? அல்லது புதிய நபருக்கு வழிவிட்டு ஒதுங்குவாரா மோடி, லோக்சபா தேர்தலில் இதற்கான விடை கிடைக்கும்.