டெல்லி: பிப்ரவரி 1ஆம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு தாக்கல் செய்யப்பட உள்ள இந்த பட்ஜெட்டில் பல அதிரடி சலுகைகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய நிதி ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டை தயாரிக்கும் பணிகள் தொடங்கிவிடும். அதில் பல்வேறு துறைகள், சமுகப் பாதுகாப்புத் திட்டங்கள், நிதி தரவுகள் போன்றவற்றைப் பெற வேண்டும். இந்த பட்ஜெட்டில் கல்வி, விவசாயம், உள்கட்டமைப்பு வசதி, வேலைவாய்ப்பு, மோடிகேர், வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட முக்கிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
மே மாதத்தில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளதால், இந்த கூட்டத் தொடர் தான் தற்போதுள்ள மத்திய அரசுக்கு கடைசி பட்ஜெட் கூட்டத்தொடராக அமையும். இந்த இடைக்கால பட்ஜெட்டில் வரி சலுகை பற்றிய அறிவிப்புகளும் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடுத்தர வர்கங்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாக இருக்கும் வருமான வரி வரம்பை உயர்த்த வேண்டும் என்பதே. மாத சம்பளதாரர்களின் எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் ரூ. 2.5 லட்சத்திலிருந்து 5 லட்சமாக வருமானவரிக்கான வரம்பை உயர்த்தப்படலாம் என தெரிகிறது. அதே போல் மருத்துவ செலவுகள் மற்றும் போக்குவரத்து செலவினங்களுக்கான வரி விலக்கு மீண்டும் கொண்டுவரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்கட்டமைப்பு வசதிகள்
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜான திட்டம் கிழ் இலவசமாக வீடு கட்டித் தர நிதி அளிக்கப்படுகிறது. சென்ற பட்ஜெட்டில் 64,500 கோடி ரூபாய் அளிக்கப்பட்டது. 2022ம் ஆண்டுக்குள் 2 கோடி வீடுகளை மத்திய அரசு கட்டித் தர உள்ளது. நாடு முழுவதும் ஸ்மார்ட் நகரங்கள், சாகர் மாலா மற்றும் பாரத் மாலா உள்ளிட்ட திட்டங்கள் கீழ் சாலை திட்டங்கள் போன்றவற்றுக்காகவும் மத்திய அரசு 1.48 லட்சம் கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. உதான் திட்டத்தின் கீழ் குறைந்த கட்டணத்தில் உள்நாடு மற்றும் வெளிநாடு விமானப் பயணங்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது.
விவசாயிகளுக்கு கடன் இலக்கு
இந்திய விவசாயிகள் கடன் நெருக்கடிகளில் சிக்கி தவித்து வருகின்றனர். இது நிதி நிறுவனங்களுக்குக் கடனை வசூலிப்பதில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. சென்ற ஆண்டு விவசாயிகள் கடனுக்காக 11 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது. தற்போது ஏமாற்றத்தில் உள்ள விவசாயிகளுக்குக் கண்டிப்பாக இந்தப் பட்ஜெட்டில் மிகப் பெரிய அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது.
கடந்த 2017-18ம் ஆண்டில் ரூ. 10 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், ரூ.11.68 லட்சம் கோடி வழங்கப்பட்டது. இந்த 2019-20ம் நிதியாண்டும் விவசாய கடன் இலக்கு 10 சதவீதம் அல்லது ரூ. லட்சம் கோடி அதிகரிக்கப்பட்டு ரூ. 12 லட்சம் கோடி வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. வழக்கமாக விவசாய கடன்கள் 9 சதவீத வட்டியில் வழங்கப்படுகின்றன. ஆனால், அரசு 2 சதவீத வட்டி மானியம் அளிக்கிறது. இதன் மூலம், ரூ. 3 லட்சம் வரையிலான குறுகிய கால கடன்களை 7 சதவீத வட்டியில் பெறலாம். கடனை குறித்த தேதியில் சரியாக செலுத்தும் விவசாயிகளுக்கு கூடுதலாக 3 சதவீதம் வட்டி தள்ளுபடி அளிக்கப்படுகிறது. அவர்கள் 4 சதவீத வட்டியை செலுத்தினால் போதும்.
கல்வி நிலையங்களுக்கு நிதி
கல்வி நிறுவனங்களில் உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை அளிக்க உயர் கல்வி நிதி நிறுவனம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. புதிதாக ஐஐஎம், ஐஐடி, ஐஐஎஸ்இஆர், மற்றும் எய்ம்ஸ் உள்ளிட்ட கல்லூரிகளைக் கட்டுவதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. பிரதான் மந்திரி குஷால் விகாஸ் யோஜனா போன்ற திறன் மேம்பாட்டுத் திட்டங்களை மீண்டும் புதுப்பித்துள்ளது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஏகலைவ பள்ளிகள் போன்ற திட்டங்களுக்குப் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படும்.
பெண்கள் பாதுகாப்புக்கு நிதி
மோடி தலைமையிலான அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் அமைச்சகத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட அளவிலான நிதியை ஒதுக்குகிறது. சென்ற பட்ஜெட்டில் 2,605 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. நிர்பையா நிதியாக 500 கோடி அளிக்கப்படுகிறது. வரும் பட்ஜெட்டிலும் இது போன்று பல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது. ஊனமுற்றோர், சிறுபான்மையினர், எஸ்சி மற்றும் எஸ்டி, ஓபிசி மற்றும் மூத்த குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த கூடிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படும். மேலும் இலவச மின்சார இனைப்பு, இலவச எரிவாயு இணைப்பு போன்ற திட்டங்களுக்கு மத்திய அரசு தங்கலது கருவூலத்தில் உள்ள பணத்தைச் செலவு செய்யும்.
மருத்துவ காப்பீடு திட்டம்
மத்திய அரசு ஏழை மக்களுக்குச் சிகிச்சை வழங்க மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைச் சென்ற பட்ஜெட்டில் அறிமுகம் செய்தது. ஆயுஷ்மான் பாரத் எனப்படும் இந்த தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இந்தியாவில் சுமார் 10 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வரையிலான மருத்துவ செலவை மத்திய அரசே ஏற்கும் புதிய மருத்துவ காப்பீடு திட்டம் கொண்டு வரப்படும் என்று கடந்த பிப்ரவரி மாதம் பட்ஜெட் தாக்கலின் போது அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்துக்காக மத்திய அரசு ஆண்டுதோறும் 12 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்யும் என்று நிதி மந்திரி அருண்ஜெட்லி தெரிவித்தார். 'மோடி கேர்' என்று மாற்றம் செய்யப்பட்டுள்ள இந்த திட்டத்திற்கு கூடுதலாக 2 சதவிகிதம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.