ஏற்கனவே அமெரிக்கா மற்றும் சீனாவுக்கிடையில் வர்த்தகப் போர் நடந்து கொண்டிருக்கிறது. அமெரிக்கா சீனப் பொருட்கள் மீது வரி விதித்தால், சீனாவும் பதிலுக்கு அமெரிக்க நிறுவன பொருட்கள் மற்றும் சேவைகள் மீது வரி விதிக்கிறது. உலகின் இரு பெரு நாடுகள் இப்படி குழாயடிச் சண்டை போல இறங்கிக் அடித்துக் கொள்வதை உலகமே பார்த்து தலையில் அடித்துக் கொண்டது.
வழக்கு
தற்போது சீனர்கள் மீதான வெறுப்பை, உலகிலேயே அதிக நெட்வொர்க் கியர்களைத் தயரிக்கும் ஹிவாய் நிறுவனத்தின் மீதும், அதன் துணை நிறுவனங்கள் மீதும் வழக்கு தொடுத்து உறுதி செய்திருக்கிறது. போதாக்குறைக்கு ஹிவாய் நிறுவன முதன்மை நிதி அதிகாரி மெங் வாங்சூ (Meng Wanzhou)மீதும் மோசடி வழக்கைப் பதிவு செய்திருக்கிறது அமெரிக்க நீதித் துறை (US Justice Department).
என்ன மோசடி
டி மொபைல் நிறுவனம் தன் ஸ்மார்ட் போன்களை சோதனை செய்யப் பயன்படுத்தும் சில ரோபாட்டிக்ஸ் இயந்திரங்கள் உட்பட பல்வேறு வர்த்தக ரகசியங்களை திருடி விட்டதாகவும், ஹிவாய் நிறுவனம் அமெரிக்க வங்கிகளிடம் கடன் வாங்கும் போது தவறான ட்பிசினஸ் தகவல்களைச் சொல்லி அமெரிக்க வங்கிகளை திசை திருப்பியதாகவும் மோசடி வழக்கு பதிவுச் செய்திருக்கிறார்கள்.
பிரச்னையின் ஆழம்
ஹிவாய் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஸ்கைகாம் ஹாங்காங்கில் இருந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்கை காமும், ஹிவாயும் வெவ்வேறு நிறுவனம் என அமெரிக்க வங்கிகளிடம் பொய் சொல்லி இருப்பதாகவும் அமெரிக்க நீதித் துறை வாதிடுகிறது. அதோடு ஈரானுக்கு இந்த ஸ்கைகாம் மூலம் பல சாதனங்கள் மற்றும் கருவிகளை ஹிவாய் நிறுவனம் விற்று இருக்கிறதாம்.
அமெரிக்கா கொண்டு வா
கடந்த டிசம்பர் 2018-ம் ஹிவாய் நிறுவன முதன்மை நிதி அதிகாரி மெங் கனடாவில் வைத்து கைது செய்யபப்ட்டார். உடனடியாக சீனாவும் கனடா நாட்டைச் சார்ந்த சிலரைக் கைது செய்து தன் எதிர்ப்பைக் காட்டியது. இப்போது கனடாவில் இருந்து மெங்கை அமெரிக்கா அழைத்து வந்து விசாரிக்க அமெரிக்க நீதி மன்றத்திடம், அரசு வழக்கறிஞர்கள் அனுமதி கேட்டிருக்கிறார்கள்.
இன்னும் சில தினங்களில் இதற்கான பதிலடியைச் சீனா கொடுக்கும் என எதிர்பார்க்கலாம்.