புதுச்சேரி: புதுச்சேரியில் 5 பில்லியன் டாலர் முதலீட்டில் செல்போன் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளை துவங்க திட்டம் அளித்துள்ளன. இதன் மூலம் 5 ஆண்டுகளில் புதுச்சேரியை சேர்ந்த 50 ஆயிரம் பேருக்குவேலை கிடைக்கும் என்று முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.
புதுச்சேரியில் உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு முன்னோட்டமாக நிதி ஆயோக் அதிகாரிகள் மற்றும் தொழில் நிறுவனங்கள், தொழில் கூட்டமைப்பு பிரதிநிதிகளுடனான மாநாட்டை நேற்றும் இன்றும் புதுச்சேரி அரசு நடத்தியது.
காலாப்பட்டு பகுதியில் உள்ள மத்திய அரசின் அசோகா விடுதியில் இதற்கான கூட்டம் நடைபெற்றது. மாநில முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தொழில்துறை அமைச்சர் ஷாஜஹான் மற்றும் அரசுதுறை செயலர் அன்பரசு, மாநில அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். மேலும் நிதி ஆயோக் தரப்பில் உயர் அதிகாரிகளும் இக்கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற இக்கூட்டத்தில் புதுச்சேரி மாநிலத்தில் புதிய தொழிற்சாலைகளை தொடங்குவது தொடர்பாகவும், மாநிலத்தில் தகவல் தொழில் நுட்ப பூங்கா அமைப்பது, சர்வதேச ஐடி நிறுவனங்கள் தொழில் தொடங்க நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும், உற்பத்தி தொழிற்சாலைகள் ஆரம்பிப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.
மாநாட்டின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் நாராயணசாமி, புதுச்சேரியில் மொபைல் மற்றும் மின்னணு தொழிற்சாலைகள் துவங்க தொழில்முனைவோர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர் என்றும், மொபைல்போன் மற்றும் மின்னணு நிறுவனங்கள் இணைந்து அடுத்த 5 ஆண்டுகளில் புதுச்சேரியில் 5 பில்லியன் டாலர் முதலீட்டில் செல்போன் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளை துவங்க திட்டம் அளித்துள்ளன.
இதன் மூலம் 5 ஆண்டுகளில் புதுச்சேரியை சேர்ந்த 50 ஆயிரம் பேருக்குவேலை கிடைக்கும். இத்திட்டத்திற்கு அரசு உடனடியாக அனுமதி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும் புதுச்சேரி அரசின் இலக்கு சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத, உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகளவில் தரும் நிறுவனங்களை கொண்டு வருவதாகும் என்றார்.
சிறிய மாநிலமான புதுச்சேரியில் அரசு தொழிற்சாலைகளுக்கு பல்வேறு சலுகைகளை அளித்தாலும், ரவுடிகளின் மாமுல் தொல்லையால் தொழிலதிபர்கள் புதுச்சேரியில் புதிய தொழிற்சாலைகளை தொடங்குவதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர் என்பதே நிதர்சனமான உண்மை.
மேலும் ரவுடிகளுக்கு பயந்து ஏற்கனவே இயங்கிவந்த பல்வேறு நிறுவனங்களும், தங்களுடைய நிறுவனத்தை மூடிவிட்டு பாதுகாப்பு கருதி அண்டை மாநிலங்களுக்கு சென்றுவிட்டன. இனிவரும் காலங்களிலாவது புதுச்சேரி அரசு புதிய தொழிற்சாலை தொடங்குபவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளித்தால் மட்டுமே, அவர்கள் எந்தவித பயமும் இன்றி புதுச்சேரியில் தொழில் செய்யமுடியும். இதனால் படித்த இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு உருவாகும் என்பதில் மாற்று கருத்தில்லை.