டெல்லி: 2019-20ஆம் நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டில் பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு ரூ. 4 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் தற்போது நேஷனல் இன்சூரன்ஸ், யுனைடெட் இன்சூரன்ஸ், ஓரியண்டல் இன்சூரன்ஸ் என 3 இன்சூரன்ஸ் நிறுவனங்கள் உள்ளன. இவை மருத்துவ காப்பீடு, விபத்துக் காப்பீடு, சொத்து மற்றும் நிறுவனங்களுக்கான, பல்வேறு வகை இன்சூரன்ஸ் பாலிசிகளை விற்பனை செய்து வருகின்றன. தனியார் நிறுவனங்கள், காப்பீட்டு துறையில் அனுமதிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனாலும் கூட, மத்திய அரசு நிறுவனங்களான இந்த 3 நிறுவனங்கள் தான் இன்று சந்தையின் பெரும் பங்கை தங்கள் வசம் வைத்துள்ளன.
2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் மத்திய அரசின் 3 பொதுக்காப்பீட்டு நிறுவனங்களை ஒன்றாக இணைத்து பங்குசந்தையில் களமிறக்க உள்ளதாக அருண்ஜெட்லி அறிவித்தார். இந்த நிதி ஆண்டுக்குள்ளாகவே இவை ஒரே நிறுவனமாக்கப்படும் என நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறினார். ஆனால் இதுவரையிலும் இணைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
இதனிடையே நாளை பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய அரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது. இந்த பட்ஜெட்டில் அரசு காப்பீடு நிறுவனங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது குறித்து நிதி சேவைகள் துறை கோரிக்கை விடுத்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.
அதிக அளவில் கிளெய்ம் செய்யப்படுவதாலும், பிற செலவினங்கள் அதிகரித்திருப்பதாலும் காப்பீடு நிறுவனங்களின் வருமானம் குறைந்து வருகிறது. இதனால் காப்பீடு நிறுவனங்களின் நிதிநிலை சற்று பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேசிய காப்பீடு நிறுவனம், ஓரியன்டல் காப்பீடு நிறுவனம் மற்றும் யுனைட்டெட் இந்தியா காப்பீடு நிறுவனம் ஆகிய மூன்று அரசு காப்பீடு நிறுவனங்களுக்கான மூலதன தேவைக்காக ரூ. 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்ய நிதித்துறை பரிந்துரை செய்துள்ளது.
இந்த நிதி அரசு காப்பீடு நிறுவனங்களின் நிதிநிலையை வலுப்படுத்த பயன்படுத்தப்பட உள்ளது. பட்ஜெட்டில் இதற்கான நிதி ஒதுக்கீடு முடிவான பிறகு ஒவ்வொரு நிறுவனத்துக்கும் எவ்வளவு ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது என்பது முடிவு செய்யப்படும் எனக் கூறப்படுகிறது.
இந்த மூன்று நிறுவனங்களும் இன்சூரன்ஸ் சந்தையில் 35 சதவிகிதத்தைக் கொண்டுள்ளன. மார்ச் 31, 2017 நிலவரப்படி மூன்று காப்பீடு நிறுவனங்களும் 200 காப்பீடு திட்டங்களை விற்பனை செய்துவருகின்றன. இவைகள் ஈட்டியுள்ள மொத்த பிரீமியம் தொகை ரூ.41,461 கோடி. இந்த நிறுவனங்களை இணைக்க தொழிற்சங்கள் ஒத்துழைப்பு கொடுக்க மறுத்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் பட்சத்தில் காப்பீடு நிறுவனங்களை இணைக்கும் முயற்சியை அரசு மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது.