சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகத்தின் போது ஒரே தேசம் ஒரே வரி, ஒரே சந்தை என கம்பீரமாக முழங்கினார்கள். நாமும் சில்லறைகளை எல்லாம் சிதற விட்டு பெருமிதப் பட்டோம். ஆனால் வரி வசூலிக்கும் மாநில அரசுகளின் உரிமையை மொத்தமாக எடுத்துச் சென்றுவிட்டது ஜிஎஸ்டி. ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பின் எந்த ஒரு பொருளின் மீதும் கூடுதல் வரியை மாநில அரசுகள் விதிக்க முடியாது.
கேரளத்துக்கு மட்டும்
இதற்கு கேரளமே சாட்சி. கேரளத்தில் கடந்த 2018-ல் வந்த மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளையும் பொருளாதார இழப்பீடுகளையும் விவரிக்க வார்த்தை இல்லை. அப்பேற்பட்ட பிரச்னையில் கூட கேரள மாநிலம் தன் மாநிலத்துக்குள் ஒரு விதியை விதித்து வசூலித்துக் கொள்ள முடியவில்லை. கேரளா தன் நிலையை மத்திய அரசிடம் விலக்கி வெள்ளத்தினால் ஏற்பட்ட பிரச்னைகளை சீர் செய்ய நிதி தேவை அதற்கு வரி விதிக்க ஜிஎஸ்டி கவுன்சிலிடம் அனுமதி பெற்று இருக்கிறது. அதுவும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே. அதன் பின் செஸ் வரிகள் காலாவதியாகி விடும்.
எதற்கெல்லாம் வரி
இனி 12 சதவிகிதத்துக்கு மேல் ஜிஎஸ்டி வரி செலுத்தும் பொருட்களுக்கு 1 சதவிகித செஸ் வரியை விதிக்க இருக்கிறார்கள். மதுபானங்கள் மீது மட்டும் இரண்டு சதவிகித செஸ் விதிக்க இருக்கிறார்கள். தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் மீது 0.25% கூடுதல் செஸ் விதிக்க இருக்கிறார்களாம். ஆக சினிமாவுக்கான டிக்கெட்டுகள், மின்சார சாதனங்கள், மற்ற சொகுசுப் பொருட்களின் விலை இன்னும் கொஞ்சம் கூட இருக்கிறதாம்.
எவ்வளவு வரும்
கேரளத்தில் புதிய செஸ் வரிகள் விதிக்கப்படாமல் 32,564 கோடி ரூபாய் வருவாய் கிடைக்குமாம். ஆனால் இப்போது விதிக்க இருக்கும் புதிய செஸ் மூலம் இந்த வரி வருவாய் சுமாராக 40,000 கோடி ரூபாய் வரை வரலாம் என எதிர்பார்க்கிறார்களாம். அதோடு கேரள மாநிலத்தின் நிதிப் பற்றாக்குறை 3.3 சதவிகிதமாக இருக்கிறதாம் இந்த புதிய செஸ் வரிகள் மூலம் சுமார் 1 சதவிகிதம் வரை நிதிப் பற்றாக்குறை குறையுமாம்.
எல்லாம் திருவனந்தபுரம் தான்
கேரள பட்ஜெட்டை தாக்கல் செய்த கேரள நிதி அமைச்சர் தாமல் ஐசக் "இந்தியாவிலேயே 100% மின்சார வாகனங்களைப் பயன்படுத்தி மக்கள் போக்குவரத்து வசதிகளைக் கொண்ட முதல் நகரமாக திருவனந்தபுரம் பெயரெடுக்கும்" என அறிவித்திருக்கிறார். கேரள மறு சீரமைப்புக்கு 1000 கோடி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பஞ்சாயத்துக்களுக்கு 250 கோடி, கேரள வெள்ளத்தால் பாதிக்கபப்ட்ட மக்களின் நலத் திட்டங்களுக்கு 4,700 கோடி, முதியோர்களுக்கு மாதாமாதம் பென்ஷன் தொகையாக வழங்கும் 100 ரூபாயில் இருந்து 4,000 ரூபாயாக அதிகரிப்பு, புதிய இன்ஷூரன்ஸ் திட்டம் என நலல் திட்டங்களை சொல்ல இருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications