டெல்லி: நாட்டில் இதற்கு முன்னதாக 14 முறை இடைக்கால பட்ஜெட்டுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
வரக்கூடிய லோக்சபா தேர்தலை போன்று முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த பட்ஜெட் பேச்சுகள் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. 2019ம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட் மீது அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், பொது மக்களுக்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
2019ம் ஆண்டுக்கு முன்னதாக, நமது நாட்டில் 14 முறை இடைக்கால பட்ஜெட்டுகள் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இடைக்கால பட்ஜெட் என்பது 2 சூழ்நிலைகளை முன் வைத்து தாக்கல் செய்யப்படும். முதலாவதாக, முழு வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்வதற்கு அரசாங்கத்திடம் நேரம் இல்லாத போது இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இரண்டாவது, எந்த ஆண்டில் லோக்சபா தேர்தல் வர உள்ளதோ, அதே ஆண்டில் தேர்தலுக்கு முன்பாக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம்.
கடந்த காலங்களில் எப்போது எல்லாம் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப் பட்டது என்பதை பார்க்கலாம்.
1947ல் முதல் பட்ஜெட்
நாட்டின் முதல் இடைக்கால பட்ஜெட்டானது 1947ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதியன்று தாக்கல் செய்யப்பட்டது. அதை ஆர்.கே.சண்முகம் செட்டி தாக்கல் செய்தார். அந்த பட்ஜெட் ஏழு மாதங்களுக்கும் மேலாக இருந்தது. இந்த வரவு செலவுத் திட்ட காலம் 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி முதல் மார்ச் 31, 1948ம் ஆண்டு வரை இருந்தது.
2வது பட்ஜெட்
இரண்டாவது இடைக்கால பட்ஜெட் சி.சி. தேஷ்முக் அவர்களால் 1952-53ல் லோக்சபா தேர்தலுக்கு ஒரு நாள் முன்பு தாக்கல் செய்யப்பட்டது. நாட்டின் மூன்றாவது இடைக்கால பட்ஜெட்டானது, 1957-58ல் பொதுத்தேர்தல்களுக்கு முன்பாக டி. டி. கிருஷ்ணமாச்சாரி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
பிரதமராக இருந்தவர் நேரு
மொரார்ஜி தேசாய் 1962-63 ல் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்பொழுது ஜவஹர்லால் நேரு பிரதமராக பதவியில் இருந்தார். அதற்கு அடுத்து, 1967-68ல் இரண்டாவது முறையாக இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தை மொரார்ஜி தேசாய் தாக்கல் செய்தார். அப்பொழுது பிரதமராக இருந்தவர் இந்திரா காந்தி. அவரின் இரண்டு இடைக்கால பட்ஜெட்களும் மிக முக்கியமானதாக இன்று வரை பார்க்கப்படுகிறது.
திட்டங்கள் இல்லை
1971-72ல், இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தை ஒய்.பி சவூனால் தாக்கல் செய்தார். அந்த பட்ஜெட்டில் பெரிதாக அறிவிப்புகள், கவர்ச்சிக்கரமான திட்டங்கள் இல்லை.
வரலாற்றில் இடம்
1977ல் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட் வரலாற்றில் முக்கிய இடம் பிடித்தது. இதை நிதியமைச்சர் ஹரிபாய் எம்.பட்டேல் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் வரலாற்றின் மிகச்சிறிய உரை கொண்டதாகும்.
அரசியல் உரை என விமர்சனம்
1980-81ல் ஆர்.வெங்கட்ராமன் இடைக்கால வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்தார். அவர் தமது பட்ஜெட் உரையை ஒரு அரசியல் உரையை போன்று வாசித்தார் என்ற குற்றச்சாட்டு அப்போது எழுந்து, பரவலாக பேசப்பட்டது.
சந்திரசேகர் அரசு
1990ல் பொதுத்தேர்தல் நடைபெற இருந்தது. ஆனால் திடீரென சந்திரசேகர் அரசாங்கம் கவிழ்ந்ததால், அப்போதைய நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா 1991ம் ஆண்டிற்க்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது. அதனை தொடர்ந்து, யஷ்வந்த் சின்ஹா இடைக்கால வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்தார்.
மன்மோகன் பட்ஜெட்
லோக்சபா தேர்தல் உடனடியாக வர இருந்ததால், 1991-92ல் டாக்டர் மன்மோகன் சிங் இடைக்கால வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்தார். வாஜ்பாய் அரசில் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா 1998-99ல் இடைக்கால வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்தார்.
வாஜ்பாய் அரசாங்கம்
வாஜ்பாய் தலைமையிலான ஆட்சி நிறைவு பெற்று, தேர்தல் வர இருந்தது. அதனால் 2004-05ம் ஆண்டு, அப்போதைய நிதியமைச்சர் ஜஸ்வந்த் சிங் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்தார்.
பிரணாப் முகர்ஜியின் பட்ஜெட்
2008-09 ஆண்டு இடைக்கால வரவு செலவு திட்டத்தை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் நிதி அமைச்சராக பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்தார். அந்த வரவு செலவு திட்டத்தில் எந்த பெரிய அறிவிப்பும் இடம் பெறவில்லை. இதுவும் லோக்சபா தேர்தலை முன்வைத்தே தாக்கல் செய்யப்பட்டது.
கடைசியாக பட்ஜெட்
கடைசியாக இடைக்கால பட்ஜெட் லோக்சபா தேர்தல் காரணமாக 2014ம் பிப்ரவரி 17ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அப்போது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தை தாக்கல் செய்தார்.