டெல்லி: விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாக்கப்படும். கிசான் கார்டுதாரர்களுக்கான வட்டி மானியம் இரட்டிப்பாக்கப்படும். 2 ஹெக்டேர் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் மூன்று தவணைகளாக வழங்கப்படும் என்று நிதியமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.
16வது லோக்சபாவின் கடைசி பட்ஜெட்டை இன்று நிதித்துறை கூடுதல் பொறுப்பை வகிக்கும் அமைச்சர் பியூஷ் கோயல் தாக்கல் செய்தார்.
லோக்சபா தேர்தல் மற்றும் சில மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால், விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு நேரடி வருமான ஆதரவு, வருமான வரிச் சலுகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்ப்பு நிலவியது. எதிர்பார்த்தது போலவே விவசாயிகளின் மனங்களை குளிர்விக்கும் வகையில் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் நிதிஅமைச்சர் பியூஷ் கோயல்.
22 விவசாய பொருட்களின் விலை 50 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. விவசாயிகளின் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும்
விவசாயிகளுக்கு வருமான ஆதரவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாக்கப்படும். கிசான் கார்டுதாரர்களுக்கான வட்டி மானியம் இரட்டிப்பாக்கப்படும். 2 ஹெக்டேர் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் மூன்று தவணைகளாக வழங்கப்படும். இதன்மூலம் 12 கோடி விவசாய குடும்பங்கள் பயன்பெரும் வகையில் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கும் திட்டத்திற்கு 75 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கான இந்த திட்டம் டிசம்பர் 2018ஆம் ஆண்டு முதல் அமல்படுத்தப்படும் என்று கூறியுள்ளார். இந்த திட்டம் மூலம் 12 கோடி விவசாய குடும்பங்கள் பயன்பெறுவார்கள் என்று கூறும் போதே பாஜக உறுப்பினர்கள் ஜெய் கிஷான் என்று கூறி முழக்கமிட்டனர்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் பதவிக்காலம் விரைவில் முடிய உள்ள நிலையில், இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது. இந்த பட்ஜெட்டில் விவசாயிகளின் மனங்களை குளிர்விக்கும் வகையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு மானியமாக கொடுப்பதற்கு பதிலாக அவர்களின் வங்கிக்கணக்கில் பணமாக வரவு வைக்கலாம் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறி வந்தனர். இதே கருத்தினை கடந்த 2016-17 பொருளாதார ஆய்வறிக்கையில் முன்னாள் நிதி ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் தெரிவித்திருந்தார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சமீபத்தில் கேரளாவில் நடந்த பேரணியில் பேசிய போது காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் ஒவ்வொரு ஏழைக்குடிமகனுக்கும் குறைந்தபட்ச வருமானம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறினார். அதே திட்டத்தை சற்று மாற்றி விவசாயிகளுக்கு 6000 ரூபாய் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என்று அறிவித்துள்ளார் பியூஷ் கோயல்.