டெல்லி: தமிழக சட்டசபைக் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. 2019-20 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தமிழக சட்டசபையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நாளை தாக்கல் செய்கிறார். ஓபிஎஸ் தாக்கல் செய்யும் எட்டாவது பட்ஜெட் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. லோக்சபா தேர்தல் நெருங்கி வருவதால் மக்களை கவரும் அறிவிப்புகள் பட்ஜெட்டில் நாளை வெளியாக வாய்ப்புள்ளது.
வடகிழக்குப் பருவமழை சரியாக பெய்யாத காரணத்தினால் கோடை காலங்களில் குடிநீர் பற்றாக்குறையை போக்க, நீர் ஆதாரங்களை மேம்படுத்தவும், கூடுதல் ஆதாரங்களை ஏற்படுத்தவும் தேவையான நிதி ஒதுக்கவும் பொதுப்பணித் துறை, வருவாய்த் துறை சார்பில் பல திட்டங்கள் செயல்படுத்தவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மார்ச் முதல் வாரத்தில் லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இதையடுத்து, மத்திய அரசு தனது இடைக்கால பட்ஜெட்டை கடந்த 1ஆம் தேதி தாக்கல் செய்தது. இதில், வருமான வரி உச்சவரம்பு உயர்வு உள்ளிட்ட பல்வேறுஅறிவிப்புகள் வெளியாகின. தமிழக பட்ஜெட்டிலும் மக்களைக் கவரும் வகையில் பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு
இந்த ஆண்டு வழக்கமான பட்ஜெட்டை போல் அல்லாமல், அதிகமான அளவுக்கு புதிய அறிவிப்புகளும், சலுகைகளும் இந்த பட்ஜெட்டில் இடம் பெறும் என்று தெரிகிறது. ஏற்கனவே, மத்திய அரசு தாக்கல் செய்துள்ள இடைக்கால பட்ஜெட்டில், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதுபோன்ற அறிவிப்பு தமிழக பட்ஜெட்டிலும் இடம்பெறும் என்று தெரிகிறது. அதேபோல், புதிய அறிவிப்புகளுக்கும் பஞ்சமிருக்காது. விவசாயம், வேலைவாய்ப்பு, சிறுதொழில், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட துறைகளுக்கு முக்கியத்துவம் அளித்து புதிய அறிவிப்புகள் வெளியாகலாம் என தெரிகிறது.
கடந்த ஆண்டு விவசாயத்திற்கு எவ்வளவு
பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு ரூ.8,916 கோடி ஒதுக்கீடு. விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் உழவன் என்ற செயலி அறிமுகப்படுத்தப்படும். கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ. 8,000 கோடிக்கு புதிதாக பயிர்க்கடன்கள் வழங்கப்படும். இந்த நிதியாண்டில் ஒருகோடியே பத்து லட்சம் டன் உணவு தானிய உற்பத்தியை அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னை கிண்டியில் ரூ. 20 கோடி மதிப்பீட்டில் அம்மா பசுமைப் பூங்கா அமைக்கப்படும். ஓசூரில் மலர் வணிக வளாகம் அமைக்கப்படும். கடலூர் மாவட்டம் மங்களூரில் மக்காச்சோளம் பதப்படுத்தும் அலகு அமைக்கப்படும். தோவாளையில் மலர் பதப்படுத்தும் அலகு அமைக்கப்படும். இந்த அறிவிப்புகளுக்கு எந்த அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதை முதல்வர்தான் கூறவேண்டும்.
கடன் சுமை அதிகரிக்கும்
பட்ஜெட் கூட்டத் தொடரில், துறை சார்ந்த மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும். விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால், மானியக் கோரிக்கைகள் மீதான விவாதமும், வாக்கெடுப்பும் தேர்தலுக்கு பிறகு ஜூன் மாதம் எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிகிறது. இந்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை தமிழக அரசின் கடன் அளவு ரூ 3.50 லட்சம் கோடியாக இருக்கும் என்று ஏற்கனவே மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், கஜா புயல் நிவாரணச் செலவு, பொங்கல் பரிசுச் செலவு ரேசன் குடும்ப அட்டைக்கு ரூ. 1000 போன்ற செலவுகளினால், தமிழக அரசின் கடன்சுமை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
கூடுதல் நிதி எதிர்பார்ப்பு
மத்திய வரி வருவாயிலிருந்து அடுத்த நிதியாண்டில் ரூ.3,000 கோடிக்கு மேல் கூடுதலாக வருவாய் கிடைக்குமென்று தமிழகம் எதிர்பார்க்கிறது. 14ஆவது நிதிக் குழுவின் பரிந்துரைப்படி தமிழகத்துக்கு 4.023 சதவிகித வரி வருவாய் பிரித்தளிக்கப்பட வேண்டும். 2019-20ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் 33,978 கோடியை மத்திய அரசிடமிருந்து தமிழகம் எதிர்பார்த்துள்ளது. இது நடப்பு நிதியாண்டைக் காட்டிலும் ரூ.3,348.60 கோடி அதிகமாகும். 14ஆவது நிதிக் குழுவின் வரன்முறைப்படி நடப்பு 2018-19ஆம் நிதியாண்டில் மத்திய நிதித் தொகுப்பிலிருந்து தமிழகத்துக்கு ரூ.30,638.80 கோடி வழங்க நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் எதிர்பார்ப்பு
மாநிலத்தின் நிதிநிலை மிகவும் நெருக்கடியான நிலையில் இருப்பதால் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வருவாயை மாநிலங்களுக்கு வழங்குவது தொடர்பாக மத்திய அரசு லோக்சபாவில் அறிவிக்கும் என்று மாநில அரசு எதிர்பார்த்தது. வரும் நிதியாண்டில் (2019-20) கார்பரேட் வரி மூலமாகத் தமிழகத்துக்கு ரூ.11,003 கோடி வருவாய் கிடைக்குமென்று தமிழக அரசு எதிர்பார்க்கிறது. இது நடப்பு நிதியாண்டில் ரூ.9,713 கோடியாக உள்ளது.
ஜிஎஸ்டி நிலுவைத்தொகை
அதேபோல மத்திய ஜிஎஸ்டி மூலமான வரி வருவாயில் ரூ.10,283 கோடியை எதிர்பார்க்கிறது. இது நடப்பு நிதியாண்டில் ரூ.8,494 கோடியாக உள்ளது. ஜிஎஸ்டியில் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ.7,214 கோடி இருப்பதாகக் கடந்த மாதம் சட்டசபையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்திருந்தார். இந்த ரூ.7,214 கோடியில் ரூ.5,454 கோடி ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வரி வருவாயாகும். 2017-18ஆம் ஆண்டுக்கான இழப்பீட்டுத் தொகை ரூ.455 கோடியாகும். 2018-19 நிதியாண்டுக்கான இழப்பீட்டுத் தொகை ரூ.1,305 கோடியாகும்.
ஓபிஎஸ் தாக்கல் செய்யும் பட்ஜெட்
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நிதியமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் எட்டாவது முறையாக நாளை பட்ஜெட் தாக்கல் செய்கிறார். லோக்சபா தேர்தலில் பெருவாரியான வாக்காளர்களை கவரும் வகையில் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெண்களையும், இளைய தலைமுறை வாக்காளர்களையும் கவரும் வகையில் புதிய அறிவிப்புகளை வெளியிடுவாரா நிதியமைச்சர்.