சென்னை: மீன்பிடி தடை காலத்தில் வழங்கப்படும் நிதி உதவி திட்டத்திற்காக ரூ. 170.13 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைதி, வளம், வளர்ச்சி என்ற அடிப்படையில் தமிழக அரசு செயல்படுவதாக நிதியமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழக பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களாக, மீனவர்கள் நலனை பேண அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும்,
மீன்பிடி தடை காலத்தில் வழங்கப்படும் நிதி உதவி திட்டத்திற்காக ரூ. 170.13 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் கூறினார்.
பாக்., விரிகுடா பகுதியில் 1,600 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் மீன்பிடி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றும்,
முதல் கட்டமாக 500 இழுவலை படகுகளை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
ராமநாதபுரம் மாவட்டம், பூம்புகார் துறைமுகத்தில் மீன்பிடி உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுவதாகவும், 420 கோடி ரூபாய் செலவில் தரங்கம்பாடி உள்ளிட்ட இடங்களில் மீன்பிடி துறைமுகங்களை கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நீரோடி, மார்த்தாண்ட துறை ஆகிய இடங்களில் கடல் அரிப்பு தடுப்பான் அமைக்கப்படும் என்றும், ஒக்கி புயலுக்கு பிறகு மீனவர்களிடமிருந்து கரையோரத்திற்கு சீரான தொலைதொடர்பு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மீனவர்கள் தகவல் தொடர்புக்காக 18 உயர்மட்ட கோபுரங்கள், 18 கட்டுப்பாட்டு அறைகள் கட்டப்பட்டுள்ளன என்றும்
ஆபத்து காலங்களில் 200 கடல் மைல் தூரத்திலுள்ள படகுகளை கண்காணிக்க முடியும் எனவும் ஓ. பன்னீர் செல்வம் கூறினார்.மேலும், வரும் நிதியாண்டில் மீன்வளத்துறைக்கு, 927.85 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
வரும் ஆண்டில் 80 ஆழ்கடல் மீன்பிடி படகுகளுக்கு 240 நேவிக் தகவல் பெறும் கருவிகள், 160 ஐசாட்-2 செயற்கைக்கோள் தொலைபேசிகள் மற்றும் 160 நேவ்டெக்ஸ் கருவிகளையும் அரசு வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக, ஆண்டுதோறும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இந்தாண்டு நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு முன்கூட்டியே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications