டெல்லி: ஜம்மு காஷ்மீர் புல்வாமாவில் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு எதிரொலியாக பாகிஸ்தானுக்கு வழங்கி வந்த வர்த்தகத்துக்கு இணக்கமான நாடு என்ற சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200% இறக்குமதி வரி விதித்துள்ளது. இது உடனடியாக அமலுக்கு இந்திய அரசின் இம்முடிவால் பாகிஸ்தானுக்கு சுமார் ரூ.3,500 கோடி அளவிலான வர்த்தகப் பாதிப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, அந்தந்த நாடுகளுடன் இந்தியா கொண்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளுக்கு ஏற்ப இறக்குமதி வரி(Import Duty) விதிப்பது வழக்கம். இதில் நட்பு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இறக்குமதி வரி விலக்கு மற்றும் வரி குறைவாகவும், வர்த்தக உறவு மட்டும் வைத்துள்ள நாடுகளில் இருந்து செய்யப்படும் இறக்குமதிக்கு சற்று கூடுதல் வரியும், சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற எதிரி நாடுகளில் இருந்து செய்யப்படும் பொருட்களுக்கு இறக்குமதி வரி அதிகமாகவும் விதிப்பது வழக்கமாகும்.
அண்டைநாடான பாகிஸ்தான் இந்தியாவுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வந்தாலும், எல்லைகளில் போர் பதட்டம் இருந்தபோதிலும், நதி நீர் பங்கீட்டில் எந்தவிதமான பிரச்சனையும் செய்யாமல் இருநாடுகளுக்கு இடையே செய்யப்பட்ட ஒப்பந்தப்படி இந்தியா நடந்துவருகிறது. இருந்தாலும் கூட அமெரிக்கா மற்றும் ரஷ்யா போன்ற நட்பு நாடுகளுக்கு வழங்கும் மிகவும் இணக்கமான நாடுகள் என்ற அந்தஸ்தை பாகிஸ்தானுக்கு வழங்கி வந்தது. பாகிஸ்தானில் இருந்து மருத்துவ சிகிச்சைக்காக வரும் அனைவருக்கும் எந்தவித பாகுபாடும் காட்டாமல் மனித நேயத்துடன் இந்தியா தொடர்ந்து நடந்துவருகின்றது. இரு நாடுகளுக்கு இடையே சுமூகமான நல்லுறவு வர்த்தகம் நடக்க கடந்த 1996ஆம் ஆண்டில் உலக வர்த்தக சபை (World Trade Organization-WTO) ஓர் ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது. அன்றிலிருந்து இரு நாடுகள் இடையே தொடர்ந்து வர்த்தகம் நடைபெற்று வந்துள்ளது.
மோடி அதிரடி அறிவிப்பு
2016-ம் ஆண்டு நடைபெற்ற உறி தாக்குதலுக்குப் பின் இந்த ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்வதாகப் பிரதமர் மோடி தலைமையிலான அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா என்ற இடத்தில் இந்தியா ராணுவ வீரர்களுக்கு எதிராக நடைபெற்ற கொடூர தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200% இறக்குமதி வரி விதக்க முடிவு செய்துள்ளது. ஜம்மு காஷ்மீர் புல்வாமாவில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலை அடுத்து பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்புத் துறை அமைச்சரவை கூட்டத்தில் பாகிஸ்தானைத் தனிமை படுத்தும் பணிகள் தொடங்கியதாக அறிவித்திருந்தனர்.
200 சதவிகித வரி உயர்வு
அதன் ஒரு கட்டமாக பாகிஸ்தானுக்கு வழங்கி வந்த வர்த்தகத்துக்கு உகந்த நாடு (Most Favourd Nation) என்ற சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. இதன் மூலம் பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்கள் மீதான கலால் வரி 200 சதவிகிதமாக உயர்த்தப்படுவதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். இந்த வரி உயர்வு உடனடியாக அமலுக்கு வருகிறது.
பாகிஸ்தான் மீது போர்
இந்த வரி உயர்வு நடவடிக்கையாது இந்தியா பாகிஸ்தான் மீது தொடுக்கும் வர்த்தகப்போர் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். பாகிஸ்தான் மீது போர் தொடுக்க வேண்டும் என்ற கருத்து வலுவடைந்து வரும் நிலையில் மத்திய அரசு பாகிஸ்தான் மீது முதற்கட்டமாக வர்த்தகப்போரை தொடங்கியுள்ளது. இதன்மூலம் பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான விலை இரண்டு மடங்காக உயரும். இந்தியாவில் அவற்றை இறக்குமதி செய்தால் விற்பனை செய்ய முடியாது என்ற நிலை உருவாகும். பாகிஸ்தானின் பொருளாதாரம் பாதிப்படையும்.
ஆண்டுக்கு 2 பில்லியன் டாலர்
இந்த ஒப்பந்தத்தின்கீழ் இந்தியா -பாகிஸ்தான் இடையில் சர்க்கரை, சிமெண்ட், ரசாயனங்கள், காட்டன், காய்கறிகள், பழங்கள், உப்பு போன்றவை வர்த்தகம் செய்யப்பட்டு வந்தது. பாகிஸ்தானுடனான இந்த ஒப்பந்தத்தினால் ஆண்டுக்கு 2 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகம் இரு நாடுகள் இடையிலும் நடைபெற்று வந்தது. இதே போன்ற ஒப்பந்தம் அமெரிக்க, சீனா போன்ற பல்வேறு நாடுகளுக்கும் இடையிலும் போடப்பட்டுள்ளது.
ரூ.3,500 கோடி பாதிப்பு
பாகிஸ்தானிலிருந்து பழங்கள், ஜிப்சம், சல்பர், தயார் செய்யப்பட்ட தோல் பொருட்கள், தாதுக்கள், கனிம எண்ணெய்கள் மற்றும் சிமென்ட் போன்றவையே அதிகம் இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்திய அரசின் இம்முடிவால் பாகிஸ்தானுக்கு சுமார் ரூ.3,500 கோடி அளவிலான வர்த்தகப் பாதிப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.