இரண்டு வருடம் முன்பு அதாவது சுமாராக டிமானிட்டைசேஷன் கொண்டு வரப்படுவதற்கு முன் வரை இந்தியாவின் முகம் நரேந்திர மோடி தான். உலகம் முழுக்க இந்த பிம்பம் அழுத்தமாக பதிந்தது.
அவ்வளவு ஏன் அந்த 2016 நவம்பர் மாத காலங்களில் தற்போதி தில்லாக கேள்வி கேட்கும் ராகுல் காந்தி அப்போது பச்சிளம் பாலகன் தான். அவருக்கும் இந்திய அரசியலும் ஏதோ சம்பந்தமே இல்லதது போல் நடந்து கொள்வார்.
அந்த கால கட்டத்தில் மோடியை யாராலும் தோற்கடிக்க முடியாது என்கிற நிலை அல்லது மோடியை எதிர்த்து வலுவாக போட்டி இட காங்கிரஸ் உடப்ட எந்த எதிர் கட்சியிலும் ஒரு வலுவான பிரதமர் வேட்பாளர் இல்லை என்கிற நிலையே இருந்தது. அதுவும் உத்தரப் பிரதேச மாநிலத்தின் இன்னொரு காவி முதல்வர் ஆன பின் இனி இந்தியா என்றால் பாஜாக தான் போல என்கிற நிலையே உருவானது.
நிலைக்கவில்லை
ஆனால் இது தொடர்ந்து நிலைக்கவில்லை. சாதாரணை மக்களை வாட்டி வதக்கி பணமதிப்பிழப்பு, ஒட்டு மொத்த இந்தியப் பொருளாதாரத்தை பாதிக்கும் வகையில் கொண்டு வந்த ஜிஎஸ்டி, திட்டக் குழுவை காலி செய்து விட்டு நிதி ஆயோக் என்கிற பிரதமரின் ஆலோசனை அமைப்பை கொண்டு வந்து தங்களுக்கு சாதகமான தரவுகளை மட்டுமே வெளியிடுவது போல பல்வேறு பிரச்னைகள் இன்று விவாதப் பொருளாகி இருக்கின்றன. முக்கியமாக ரஃபேல்.
மக்கள் செல்வாக்கு
மக்கள் செல்வாக்கும் பிஜேபிக்கு சரிந்து வருவதை வெளிச்சம் போட்டுக் காட்டியது ராஜஸ்தான், மத்தியப் பிரதேச சட்ட மன்றத் தேர்தல்கள். அதற்கு முன் டிசம்பர் 2017இல் நடந்த குஜராத் மாநில தேர்தலில் கூட குறைந்த வித்தியாசத்தில் வெற்றி பெற்றதும் மோடி தன் சொந்த மாநிலத்திலேயே செல்வாக்கு சர்நிது வருவதைக் காட்டுகிறது. இந்த காரணங்கள் எல்லாம் 2019ஆம் ஆண்டுப் பொதுத்தேர்தலில் பாஜகவுக்கு ஒரு பெரிய சரிவு இருக்குமோ என யோசிக்க வைக்கிறது.
ஆய்வு
இந்நிலையில் லேக்நிதி ஆய்வு திட்டம் மற்றும் ஏபிபி செய்தி நிறுவனம் இணைந்து நடத்திய ஆய்வில் மோடியின் அலை ஆரம்பகட்டத்தில் சிறப்பாக இருந்தாலும், தற்போது இது அதிகளவில் குறைந்துள்ளது. சொல்லப் போனால் எங்கே இருக்கிறது எனத் தேடி வேண்டி இருப்பதாகச் சொல்கிறது. என்று இந்த ஆய்வறிக்கை கூறுகிறது. இந்த ஆய்வறிக்கையில் முக்கியமாக Misery Index பற்றி பேசி இருக்கிறார்கள். இந்த Misery Index அதிகமாக இருந்தால் அந்த நாட்டு மக்கள் வருத்தமாக இருப்பதைக் குறிக்குமாம். பாஜக ஆட்சிக் காலத்தில் இது அதிகரித்திருக்கிறதாம். அதனால் மோடி பெரிய அளவில் தோல்வியைத் தழுவ வாய்ப்பிருப்பதாகவே சொல்கிறார்கள்.
மோடி வீழ்ச்சி..
குறைந்த காலகட்டத்திலேயே மோடி அலையின் தாக்கம் அதிகளவில் மறைந்துள்ளதற்கு என்ன காரணம் என்பதை ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். இதற்குச் சரியான பதில் என்றால் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மோசமான பாதிப்புகளே இதற்கு முக்கியக் காரணமாக உள்ளது. இதனை மிஸ்ரி இன்டெக்ஸ் ( Misery Index) விளக்குகிறது.
மிஸ்ரி இன்டெக்ஸ்
அமெரிக்காவின் பொருளாதாரம் அதன் மக்களை எப்படிப் பாதிக்கிறது என்பதை ஆய்வு செய்ய ஆத்தர் ஓகுன் என்பவர் வேலைவாய்ப்பின்மை மற்றும் பணவீக்கம் ஆகியவற்றை மையமாக வைத்து ஒரு ஆய்வு முறையை அறிமுகப்படுத்தினார்.
அமெரிக்கா
இந்த மிஸ்ரி இன்டெக்ஸ் அமெரிக்காவின் பல்வேறு அதிபர்களின் தலைமையில் நாட்டு மக்களின் நிலை எப்படி இருந்தது என்பதைச் சரியாக விளக்கும் வகையில் இருக்கும் காரணத்தால் அமெரிக்காவில் இது புகழ்பெற்று விளங்குகிறது.
இந்தியா
இதே ஆய்வு முறையை இந்திய சந்தைக்குச் சில முக்கிய மாற்றங்களுடன் கொண்டு வரப்பட்டுள்ளது. அமெரிக்காவைப் போல் இந்தியாவில் ஒவ்வொரு மாதத்திற்கான வேலைவாய்ப்புத் தரவுகள் இல்லை. இதனால் இந்த ஆய்வைப் பணவீக்கம், உண்மையான ஊரகச் சம்பள வளர்ச்சி மற்றும் உணவு அல்லாத துறையில் வளர்ச்சி (non-food credit growth) ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. உணவு அல்லாத துறையில் வளர்ச்சி நாட்டின் பொருளாதார வளர்ச்சியைக் குறிக்கும் அளவீடாக இந்த ஆய்வில் செயல்பட உள்ளது.
அளவீடுகள்
இந்த மிஸ்ரி இன்டெக்ஸ்-இல் 0 முதல் 100 புள்ளிகள் வரையில் இருக்கும், 100 புள்ளிகள் என்றால் அதீத பாதிப்புகள் அதாவது மக்களுக்கு அதிக துன்பம் விளைகிறது என்று பொருள். அதிகப் புள்ளிகளைத் தாண்டினால் தத்தம் காலத்தில் அரசின் ஆட்சியில் மக்கள் அதிகத் துன்பத்தில் இருப்பதாகப் பொருள்.
காங்கிரஸ்
இந்த ஆய்வில் காங்கிரஸின் கடைசி இரு ஆட்சிக் காலத்தையும், தற்போது மோடி தலைமையிலான ஆட்சியும் மையமாக வைத்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சியின் முதல் 5 ஆண்டுக் காலத்தின் பிற்பகுதியில் மிஸ்தி இன்டெக்ஸ் 50 புள்ளிகளைத் தாண்டியது இக்காலகட்டத்தில் தான் சர்வதேச சந்தையில் நிதி நெருக்கடி போன்ற பொருளாதாரப் பிரச்னைகள் உலகம் எங்கும் விஸ்பரூபம் எடுத்தது.
இரண்டாவது ஆட்சிக்காலம்
2வது ஆட்சிக்காலத்தில் மிஸ்ரி இன்டெக்ஸ் நிலையான அளவீட்டை அடையவில்லை, இதற்கு முக்கியக் காரணம் வங்கித்துறையில் உயர்வடையத் துவங்கிய வாராக் கடன் அளவு. முதல் ஆட்சிக் காலத்தில் மிஸ்தி இன்டெக்ஸ்-இன் சாரசரி அளவு 49 புள்ளிகளாகவும், 2வது ஆட்சி காலத்தில் சராசரி அளவு 57 புள்ளிகளாகவும் இருந்தது.
தேசிய ஜனநாயக கூட்டணி
மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 2014ஆம் ஆண்டில் பல வாக்குறுதிகள் உடன் ஆட்சியைப் பிடித்தது. அதுவும் தனிப் பெரும்பான்மையோடு. துவக்கத்தில் பணவீக்கம் மற்றும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை போன்றவைகளை தேசிய ஜனநாயக கூட்டணி கட்டுப்படுத்தினாலும், பின் நாளில் ஊரக வளர்ச்சியில் பெரிய அளவிலான தொய்வு ஏற்பட்டது. இதனால் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சிக் காலத்தில் மிஸ்ரி இன்டெக்ஸ்-இன் சாரசரி அளவு 64 ஆக உள்ளது. இது காங்கிரஸ் 2வது ஆட்சிக்காலத்தின் சராசரி அளவான 57 விடவும் அதிகமாகும்.
தொடர் உயர்வு..
கடந்த சில மாதங்களாக மிஸ்தி இன்டெக்ஸ் தொடர்ந்து உயர்ந்து வருவதை நாம் புகைப்படத்தில் பார்க்க முடிகிறது. அதிகப் புள்ளிகள் என்றால் தத்தம் காலத்தில் அரசின் ஆட்சியில் மக்கள் அதிகத் துன்பத்தில் இருப்பதாகப் பொருள். மேலும் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி குறித்து ஆய்வை மே 2017 மற்றும் ஜனவரி 2018 இல் லைவ்மின்ட் நடத்தியுள்ளது. ஆய்வில் ஏற்பட்ட மாற்றங்கள் உங்கள் பார்வைக்கு.
நல்ல காலம்..
அதேபோல் மோடியின் நல்ல காலம் அதாவது 'achhe din' குறித்த ஆய்விலும் முடிவுகள் தலைகீழாக உள்ளது. இந்தியாவில் புகழ்பெற்ற அரசியல் தலைவர்கள் பட்டியலில் மோடியும், புகழ்பெற்ற அரசியல் கட்சியில் பாரத ஜனதா கட்சியும் முதல் இடத்திலேயே உள்ளது. ஆனால் இந்தப் புகழின் அளவீடுகள் கடந்த மே மாதம் முதல் தொடர்ந்து குறைந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
பொதுத் தேர்தல் 2019
மோடி மற்றும் பிஜேபி கட்சியின் புகழ் குறைந்து வரும் வேளையில் காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தியின் புகழ் அளவீடுகளில் கணிசமான உயர்வு ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் தான் பொதுத் தேர்தல் வருகிறது.
யாருக்கு வெற்றி..?
இந்நிலையில் அடுத்தச் சில மாதங்களில் நாட்டில் புதிய வேலைவாய்ப்புகளையும் நாட்டின் பொருளாதாரத்தையும் உயர்த்திவிட்டால் நிச்சயம் மோடிக்கும், பிஜேபிக்கும் வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றே சொல்லப்பட்டு வந்தது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு இந்திய பொருளாதாரம் வளர வில்லை. அப்படியே வளர்ந்தால் அது காப்பரேட்டுகளுக்கு நல்ல வளர்ச்சியைக் கொடுத்ததே ஒழிய, இந்திய மக்களுக்கோ அல்லது அன்றாடக் கூலித் தொழில் செய்யும் ஏழைகளுக்கோ கொடுக்கவில்லை. ஆக காங்கிரஸ் ஒரு விதத்தில் எப்படி இந்தியாவை பொய் சொல்லி ஆட்சி செய்தார்களோ அதே போல் பாஜகவும் பொய்ப் பிரசாரங்களைச் செய்தே ஆட்சிக்கு வந்தது. எனவே இந்த முறை ராஜஸ்தான், சத்திஸ்கர், மத்தியப் பிரதேசம் போல ஒரு பிரமாண்ட போட்டி மக்களவைத் தேர்தலிலும் இருக்கும் என்றே தெரிகிறது.