"பெரியவனாகி என்ன செய்யப் போற" என நம்மூர் பெரியவர்கள் கேள்விக்கு பாதிக் குழந்தைகள் டாக்டர் ஆகப் போறேன் எனச் சொல்லும். சில விஜய்காந்த் ரசிகர்கள் மட்டும் போலீஸ் ஆவேன் என்பார்கள். இதெல்லாம் பொன்னான 90-ஸ் கிட்ஸ்களின் காலம்.
ஆனால் இன்று 6 வயதிலேயே நான் டிஜி மிக்ஸர் ஆகப் போகிறென், காண்டினெண்டல் குஸைன் செஃப் ஆகப் போகிறேன், வெறும் டாக்டர் அல்ல, நியூரோ ஸ்பெஷலிஸ்ட் தான் என் கனவு என தங்களுக்கான கனவுகளைக் காண பெற்றோர்கள் நிறைய ஆப்ஷன் கொடுக்கிறார்கள். வரவேற்கிறோம்.
ஆனால் கண்ட கனவு நிறைவேறவில்லை என்றால்..? என்ன செய்வோம். "சரிப்பு எல்லாருக்குமா கனவு நிறைவேறுது. கனவ விட்டு நிஜத்துக்கு வந்து பிழைப்ப பாருங்க" என அதே ஊர் பெரியவர்களும், நண்பர்களும் எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ளச் சொல்வார்கள். அதோடு கண்ட கனவுகளை எல்லாம் மூட்டை ஏற்றிவிட்டு நாமும் போயே ஆக வேண்டும். அப்படிப்பட்ட ஒருவரைப் பற்றித் தான் இங்கு பார்க்கப் போகிறோம். அவர் ஒரு பெண் என்பது ஒரு கூடுதல் ஸ்பெஷல்.
மூட்டை கட்டவில்லை
அந்த பெண்ணின் பெயர் வள்ளி. அவருக்கு வயது 56 ஆகிறது. இன்னும் தன் கனவுக்காக காத்திருக்கிறார். அதே ஆசையோடு, அதே எதிர்பார்ப்புகளோடு, அதே நம்பிக்கையோடு காத்திருக்கிறார். அவர் முதலில் காத்திருப்பது வாய்ப்புக்காக அல்ல... தன் ஓய்வு காலத்துக்காக. ஆம். இவர் ஒரு மத்திய அரசு ஊழியர். இந்திய ரயில்வேயில் மேட்டுப் பாளையம் - ஊட்டி - குன்னூர் பகுதியில் பயணச்சீட்டு பரிசோதகராக இருக்கிறார் (TTE - Train Ticket Examiner).
ரயில் மேடைகள்
சரி பரிசோதனை நேரங்கள் போக மற்ற நேரங்களில் அந்த ‘தட தடக்கு' அழகு மலை ரயில் பயணத்தின் மத்தியில் தனக்குப் பிடித்தமான பாடல்கள், நேயர்களுக்கு விருப்பமான பாடல்களைப் பாடி பயணிகளை மகிழ்விக்கிறார். ஆமாம் இங்கு நேயர்கள் யார் எனக் கேட்கிறீர்களா..? பயணிகள் தான்..! இதில் வெளி மாநில பயணிகளும் அடக்கம். இத்தனை கணிவாக பேசி பயணச் சீட்டுகளை பரிசோதனை செய்த பின் மனிஷி அத்தனை சந்தோஷமாக கேட்டு கேட்டு பாடல்களைப் பாடுவாராம். கிட்ட தட்ட மொத்த ரயில் பெட்டிகளுமே அக்தாக்ஷரமே விளையாடுமாம். தனக்குத் தெரியாத பாடல்களைப் பாடச் சொன்னால் ‘தன நானா... தன தன் தானா' என சிரித்துக் கொண்டே சுருதி தப்பாமல் பக்காவாக டியூன் போடுவாராம்.
பழைய கதை
வள்ளியக்கா கேரளத்தில் ஷொர்ணூரைச் சேர்ந்தவர், வீட்டில் ஆறு பிள்ளைகளில் ஒருவராகப் பிறந்தவர். ஏழ்மையான குடும்பம் தான். தாய் ஷொரணுர் நகராட்சியில் துப்புரவுத் தொழிலாளர். தந்தை ரயில்வே ஸ்ஏஷனில் பாயிண்ட்ஸ்மேனாக வேலை. அப்பா தான் கலைஞர். 1970-களிலேயே மேடை நாடகங்கள் நடிக்க பாட என தன்னுடைய கலை எச்சங்களை அவ்வப் போது வெளிக் காட்டிக் கொண்டிருந்தவர். மக்களிடத்தில் தன் நடிப்பு மற்றும் பாட்டுத் திறமைகளுக்கு கொஞ்சம் ரசிகர்களும் உண்டாம்
பழைய கதை 1
தந்தை தான் குருவாகி நம் வள்ளியக்காவுக்கு பாடக் கற்றுக் கொடுத்தவர். அத்தனை சிரமங்களுக்கு நடுவிலும் படிப்பு வரும் வள்ளியக்காவை படிக்க வைத்தது குடும்பம். ஒட்டு மொத்த ஆறு குழந்தைகளில் 10-வது வரை படித்த மேதாவி நம் வள்ளியக்கா மட்டும் தானாம். ஆனால் வள்ளியக்காவுக்கு மேற்கொண்டு படிக்க விருப்பமில்லாமல் அப்பா கற்றுக் கொடுத்த பாட்டிலேயே வளர ஆசைப்பட்டார். ஆம் அந்த 15-வது வயதில் தான் ஜானகி அம்மா போல பெரிய பாடகி ஆக வேண்டும் என தன்னுள் ஆசையை வளர்த்துக் கொண்டார். அதன் முதல் சில படிகளையும் வெற்றிகரமாகக் கடந்தார்.
முதல் மேடை
திருச்சூரில் உள்ள ஒரு இசைக் குழுவில் இணைந்து கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமாக ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் நம் வள்ளியக்காவுக்கு ஒரு நாள் சம்பளமாக 1980-களிலேயே 200 ரூபாய் வாங்கும் அளவுக்கு வளர்ந்தார். ஆனால் விதி விளையாடி விட்டது. 1983-ல் தந்தை, குருவாகி கலைகளை கற்றுக் கொடுத்தவர் ஒரு இரவில் உடல் நலக் குறைவால் இறந்துவிட்டார்.
அரசுப் பணி
வள்ளியக்காவின் அப்பா ரயில்வே பணியில் இருந்த போதே இறந்ததால், வள்ளியக்கா வீட்டில் ஒரு வாரிசுக்கு வேலை கொடுக்க முன் வந்தது ரயில்வே. அம்மா ஏற்கனவே அரசு ஊழியர் என்பதால் 6 வாரிசுகளில் ஒருவருக்கு இந்த வேலை கிடைத்தால் நன்றாக இருக்கும் என்றால் அம்மா. 6 பேரில் அதிகம் படித்த வள்ளியக்கா அந்த அரசுப் பணியை அரை மனதோடு ஏற்றுக் கொண்டாள். அப்போது வள்ளியக்காவுக்கு 20 வயது. சரி நமக்கு இது தான் வேலை போல என மனதை தேற்றிக் கொண்டாL வள்ளியக்கா. ஆனால் அவருடைய சொந்த ஊரான ஷொர்ணூர் ரயில்வே ஸ்ஏஷனில் துப்புரவுப் பணியாளர் வேலையைத் தான் அரசு வேலையாகச் செய்யப் போவதைக் கேட்ட உடன் நொந்தே போய்விட்டாள். ரயில்வே ஸ்டேஷன் துப்புரவு பணியாளர் வேlaiயா..? என தனக்குத் தானே கேட்டுப் பார்க்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் புலம்பி அழவே தொடங்கிவிட்டாரம். ஒரு வாரு வீட்டில் உள்ளவர்கள் சமாதானம் சொல்லி வேலைக்கு அனுப்பி இருக்கிறார்கள்.
வெட்கம்
அவர் தந்தை வேலை பார்த்த அதே ஷொர்ணூர் ரயில் நிலையத்தில் தான் இவருக்கு துப்புரவுப் பணியாளர் வேலை கிடைத்தது. ஒரு வழியாக தன்னை தேற்றிக் கொண்டு பணியில் இணைந்தார். ஆனால் அவரின் பல நண்பர்கள் அடிக்கடி ஷொர்ணூர் ஸ்டேஷன் வழியாகத் தான் வெளியூர்களுக்குச் செல்வார்களாம். முக்கியமாக ஸ்டார் பாடகியாக இருந்த திருச்சூர் இசைக்குழு கூட இந்த ஷொர்ணூர் ரயில் நிலையத்தில் இருந்து தான் வெளியூர் கச்சேரிகளுக்குப் பயணிக்குமாம். "சே நாம கெளரவமா மைக் பிடிச்சு பாடிக்கிட்டு இருந்த குழுவுக்கு முன்னாடி கையில தொடப்பக் கட்டையோட நிக்கிறதா..?" என மனம் நொந்து அழுது கொண்டே அவர்கள் கண்ணில் படாமல் இருக்க ஓடி ஒளிவாராம் வள்ளியக்கா.
அறிவுரை
அடிக்கடி வள்ளியக்கா ஓடிப் போவதைப் பார்த்த ஒரு ஸ்டேஷன் உயர் அதிகாரி வள்ளியக்காவை கூப்பிட்டு அனுப்புகிறார். சரி இந்த வேலை போச்சு போல என நினைத்துக் கொண்டே அதிகாரியை சந்திக்கிறார் "உன் திறமை எனக்கு புரியுது வள்ளி. ஆனா நீங்க இப்படி செய்யுற வேலைய கேவலமா நினைக்குறது ரொம்ப தப்பு. நீங்க பாடகி தான், ஆனா நீங்க அரசு ஊழியரும் கூட-ங்குறத மறந்துறாதீங்க. எந்த தொழிலும், வேலையும் கேவலம் இல்லை. நாம பாக்குற பார்வையில் தான் இருக்கு. இனிமே ஸ்டேஷனுக்கு உங்க நண்பர்கள் வந்தா தைரியமா எதிர் கொள்ளுங்க, சந்தோஷமா பாடிக்கிட்டே வேலை பாருங்க" என அறிவுரை சொல்ல வள்ளியக்கா பொறி தட்டி விட்டது. ஆம் இது என் வேலை. என தைரியமாக நண்பர்களை வழியனுப்பத் தொடங்கினார்.
ஒரே பாட்டு தான்
அன்றில் இருந்து வள்ளியக்கா பாடிக் கொண்டே தான் துப்புரவு வேலைகளைச் செய்வாராம். அவரோட பல பேரும் சேர்ந்து பாடிக் கொண்டே வேலை பார்க்கத் தொடங்கினார்களாம். ஒரு கட்டத்தில் பாடகி வள்ளியக்கா ஷொர்ணூர் ஸ்டேஷன் முழுமைக்கும் பெயர் பரவி விட்டது. சக துப்புரவு தொழிலாளர்கள் மற்றும் ஸ்டேஷன் அதிகாரிளுக்கு பெரிய பொழுது போக்காகிப் போனார் வள்ளியக்கா..! அத்தனை அன்புக்குக் காரணம் இவரின் பாட்டு தான்.
தேடுவோமா..?
ஆனால் அந்த பாடகிக் கனவு மட்டும் விக்ரமாதித்யன் கதையில் வரும் வேதாளம் போல வள்ளியக்காவை விட வில்லை. சரி வேலை முடித்துவிட்டு, பாட வாய்ப்பு தேடத் தொடங்குவோம் என சில மாதங்கள் அலைந்து பார்த்தார். ஆனால் சரியாக, முழுமையாக தேட முடியவில்லை. இதற்கு நடுவில் வள்ளியக்காவுக்கு கல்யாணம். அன்பின் பரிசாக மூன்று குழந்தைகள் என தனி குடும்பமே ஆகிவிட்டது. சரி அப்புறம் பார்க்கலாம் என விட்டுவிட்டார். காரணம் தன் குழந்தைகளுக்கு வள்ளியக்கா தாயாக செய்ய வேண்டிய கடமைகளைச் செய்ய வேண்டி இருந்தது. அந்த பொறுப்புகளைச் சுமக்க தன் கனவுகளை கொஞ்சம் ஓரங்கட்டினார்.
பணிமாற்றம்
சுமார் நான்கு வருடம் தன் சொந்த ஊரில் வேலை பார்த்த பின் பாலக்காடு ஸ்டேஷனுக்கு பணிமாற்றம் கிடைத்ததாம். அப்போதும் இசையை கற்றுக்கொள்ள ஆசை இருந்தது. ஆனால் நேரம் இல்லை. சரி போகட்டும் கழுத என டிவியில் வரும் பாடல்களை வைத்தே இசை கற்றுக் கொண்டாராம். இன்று வரை அப்படித் தான் தன் இசையை கற்றுக் கொள்கிறாராம். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க வள்ளியக்காவின் ஆர்வத்துக்கும், துடிப்புக்கும் ஒரு வழி பிறந்தது.
நம்பிக்கை
ஒரு நாள் பாலக்காடு ஸ்டேஷனில் வெளிநாட்டு பயணிகளுக்கு ஆங்கிலத்தில் பதில் சொல்லி இருக்கிறார். அதை கவனித்த பாலக்காடு ஸ்டேஷன் உயர் அதிகாரி ஒருவர் வள்ளியக்காவைப் பாராட்டி இருக்கிறார். அதோடு "வள்ளி, உங்களுக்கு திறமை இருக்கு. ஏதாச்சும் புரமோஷனோட டிரான்ஸ்ஃபர் வாய்ப்பு வந்தா சொல்கிறேன்" எனவும் நம்பிக்கை கொடுத்திருக்கிறார். அவர் சொன்ன படியே துப்புரவுப் பணியாளர் தலைவர் போன்ற ஒரு பணி உயர்வு கிடைத்தது. இதெல்லாம் ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்க வள்ளியக்காவுக்கு 45-வது வயதில் படிக்க ஆசை வருகிறது.
படிப்பா..? 45 வயசுலயா..?
ஆம். எந்த வள்ளியக்காவுக்கு 10-ம் வகுப்புக்குப் பின் படிக்க விருப்பமில்லாமல் மைக் பிடித்து பாடப் போனாரோ அதே வள்ளியக்காவுக்கு 45-வது வயதில் படிக்க ஆசை வருகிறது. காரணம் பதவி உயர்வு. பயணச் சீட்டு பரிசோதகர் பணிக்கு பல முறை பல பேர் தேர்வு எழுத தங்களைத் தயார் படித்திக் கொள்வதைப் பார்த்த வள்ளியக்காவுக்கு தானும் படித்து அதிகாரி ஆக வேண்டும் என்கிற ஒரு சின்ன ஆசை துளிர் விடுகிறது.
முதல் முறை..!
முதல்முறை தேர்வுக்குச் சென்று கேள்வித் தாளைக் கூட புரிந்து கொள்ள முடியாமல் தடுமாறி இருக்கிறார். தேர்வு முடிவுகளைச் சொல்ல வேண்டுமா என்ன..? ஃபெயில் தான். ஆனால் வள்ளியக்காவுக்கு எப்படியாவது இந்த பரிட்சையில் தேறி அதிகாரி ஆகிவிட வேண்டும் என்கிற ஆசை அழுத்தமாக பதிந்துவிட்டது.
இரண்டாம் முறை
பொதுவாக அம்மாக்கள் தான் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பார்கள். ஆனால் வள்ளியக்கா தலைகீழாக தன் மகளிடம் இருந்து தேர்வுக்கான விஷயங்களைக் கற்றுக் கொண்டார். கணிதம், அடிப்படை அறிவியல், ஆங்கிலம் என எல்லாமே அவர் மகள் மூலம் கற்றுக் கொண்டாள். இரண்டாம் முறை தன் 48-வயதில் டிடிஇ பரிட்சையில் தேறி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். ஆம் வள்ளியக்கா டிடிஇ கோட் போட்டு முகத்தில் சந்தோஷச் சிரிப்பு வழிய தன் முதல் டிக்கேட்டை பரிசோதனை செய்து வெட்கப்பட்டாராம்.
எக்ஸ்ட்ரா சர்வீஸ்
வள்ளியக்கா பொழுதுபோக பாடுவது மட்டும் இன்றி வெளியூர்ப் பயணிகளுக்கு ஊட்டியில் சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்கள், சாப்பிட, தங்குவதற்கான ஹோட்டல்கள் என்று வழிகாட்டுவதையும் ஒரு சின்ன சேவை மனப்பான்மையோடு செய்வாராம். முடிந்தால் அதையும் பாட்டாகவே பாடிவிடுவாராம். இப்போது வள்ளியக்காவுக்கு
வெளி மாநிலப் பயணிகளைப் பார்த்தவுடன் இந்தி, கன்னடம் மற்றும் தெலுங்கு பாடல்களையும் பாடி அசத்தும் அளவுக்கு மொழி அறிவை அதிகரித்துக் கொண்டாராம். வெளிநாட்டுப் பயணிகளுடன் கைகோத்து ஆடி ஒட்டு மொத்த இந்தியாவின் இமேஜையே உற்சாகமாக உயர்த்துகிறாராம். இதனால் 2017 - 18-ல் இவருக்கு இந்திய ரயில்வே ‘Everyday Hero' என்கிற விருதையும் கொடுத்து கெளரவித்திருக்கிறது.
இனிதான் தேடனும்..!
பெயர் கேள்விப்படாத ஊர்களில் இருந்து வருபவர்கள் எல்லாம் என் பாட்டையும் என் திறமையையும் பாராட்டும் போது அத்தனை சந்தோஷமாக இருக்கும். இப்போதைக்கு அது போதும் என மன நிறைவோடு அடுத்த பயணச் சீட்டைச் சரி பார்க்கப் போகிறார். இன்னும் நாலு வருஷம் தான். அதுக்கப்புறம் மலையாளம், தமிழ்-ன்னு தெரிஞ்ச எல்லா இடத்துலயும் சான்ஸ் கேட்கணும், ஜானகி அம்மாவுக்கு டஃப் கொடுக்கணும் என தன் ஒரு துளிக் கண்ணீரை கண்ணிலேயே புதைக்கிறார்.
இவரைப் பற்ரி கூகுள் பாராட்டி இருப்பதை இங்கே சொடுக்கிப் படிக்கவும்: https://artsandculture.google.com/exhibit/HQISNpIqMrcCJw
ரயில்வேயில் வேலை, அதுவும் அதிகாரி வேலை, வாழ்கை செட்டில் என ஒரு வட்டத்தில் தன்னை அடக்கிக் கொள்ளாமல் 40 ஆண்டுகளாக தன் கனவைச் சுமக்கும் வள்ளியக்கா நமக்கு எல்லாம் ஒரு ரோல்மாடல் தானே..? சல்யூட் வள்ளியக்கா..!