கணிணி முன் அமர்ந்து கொண்டு தேவையான பணத்தை பக்காவாக பிளான் போட்டு திருடிக் கொண்டிருக்கும் காலத்தில் ஒரு துணிகர கொள்ளை சம்பவம் தில்லியில் நடந்திருக்கிறது. அதுவும் பட்டப் பகலில்
ரியலாக, சினிமாக்களில், குறிப்பாக எம்.எஸ். பாஸ்கர் நடித்த எட்டு தோட்டாக்கள் படம் போன்றே 40 லட்சம் ரூபாயை கொள்ளை அடித்திருக்கிறார்கள் கொள்ளையர்கள்.
ஆனால் வழக்கை கொள்ளையர்கள் மீது மட்டும் பதியாமல், அந்த வழியாகப் பயணித்த பள்ளி மாணவர்கள் மற்றும் அங்கே செருப்பு தைத்துக் கொண்டிருந்தவர்களைப் பற்ரி எல்லாம் இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கையில் சொல்லி இருக்கிறது தில்லி காவல் துறை.
நேற்று மதியம்
பிப்ரவரி 18, 2019 செவ்வாய்க்கிழமை மதியம் சுமார் 1.45 மணிக்கு நொய்டா செக்டார் 82-ல் உள்ள கேந்திரிய விஹார் 2 சொசைட்டி வழக்கம் போல் மதிய உணவுக்குப் பின் சோம்பல் முறித்துக் கொண்டிருந்தது. அங்கே ஆட்டோ ஓட்டுநர் முகேஷ் குமாரும் தன் மதிய உணவை முடித்துக் கொண்டு அறை தூக்கத்தில் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார்.
அந்த இரண்டு பேர்
வாகனத்தின்பெயர், மாடல்கள் மற்றும் பொதுவாக இருக்கும் இரு சக்கர வாகனங்களைப் போல் இல்லாமல் இரண்டு அதிவேகம் செல்லக் கூடிய பைக்குகள் அந்த இடத்துக்கு வருகிறது. வந்தவர்கள் தங்கள் ஹெல்மெட்டுகளை கழட்டினால் முகத்தை முழுமையாக தங்கள் கைக் குட்டைகளால் மூடி இருந்தார்கள்.
ஏடிஎம்
அந்த இருவரும் சுமார் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் போல் இருக்கிறார்கள். பார்ப்பதற்கு நன்றாகவே ஆடைகளை அணிந்திருக்கிறார்கள். கேந்திரிய விஹார் 2 சொசைட்டியில் அமைந்திருக்கும் எஸ்பிஐ ஏடிஎம்-க்கு இருவரும் செல்கிறார்கள். இவர்கள் இருவரும் உள்ளே சென்றதும் ஏதோ ஒரு பெரிய சத்தம் கேட்கிறது.
அதிர்ச்சி
தன் ஆட்டோவில் அறை தூக்கத்தில் இருந்த முகேஷ் குமார் என்ன சத்தம் ஏன ஓடிப் போய் பார்க்கிறார். முகேஷ் குமார் கண் முன்னாலேயே ஏடிஎம் இயந்திரத்தை துப்பாக்கியால் சுட்டுக் கொண்டிருக்கிறார்கள் அந்த இரண்டு இளைஞர்கள். அந்த இரண்டு திருடர்களில் ஒருவன் முகேஷ் குமாரைப் பார்த்துவிட்டான்.
ஓடிருங்க
முகேஷ் குமாரிடம் வந்த இளைஞன் தன்னிடம் இருந்த நாட்டுத் துப்பாக்கிகளைக் காட்டி முகேஷ் குமாரை ஓடச் சொல்கிறான். மிரட்டுகிறான். முகேஷ் குமாரும் பயந்து அருகிலிருந்த சிகரெட் கடைக்குள் புகுந்து கொள்கிறார். அங்கே சிகரெட் கடைக்காரரும் பயந்து கொண்டு கீழே அமர்ந்து கொள்கிறார்.
திருட்டுப் பணம்
ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொஞ்சம் பணத்தை எடுத்துக் கொள்கிறார்கள். அப்போது கேந்திரிய விஹார் 2 எஸ்பிஐ ஏடிஎம்-க்கு பணத்தை நிரப்ப எஸ்பிஐ வங்கியில் இருந்து ரொக்கம் வண்டி (Cash Van) வருகிறது. வந்த பண வண்டியையும் சுடத் தொடங்குகிறார்கள். எப்போதும் பண வண்டியோடு ஒரு ஆயுதம் ஏந்திய காவலர் இருப்பது வழக்கம். அதனால் ஆயுதம் ஏந்தியவர்களை நோக்கி சரமாரியாக சுடுகிறார்கள் இந்த திருடர்கள். அதற்கு ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு அதிகாரியும் தன்னால் முடிந்த வரை எதிர் தாக்குதல் நடத்துகிறார்.
பண வண்டியில் இருந்து
சுட்டுக் கொண்டே முன்னேறியவர்கள், பண வண்டியில் இருந்து கொஞ்சம் பணத்தை திருடுகிறார்கள். இரண்டு திருடர்களும், அவர்கள் திருடிய தொகையினை அவரவர்கள் பைகளில் போட்டுக் கொண்டு, அவர்கள் வந்த அதிவேக பைக்குகளிலேயே ஏறிப் பறக்கிறார்கள். கேந்திரிய விஹார் - 2 பகுதியில் இருந்து நேரே மக்கள் நெரிசல் அதிகமிருக்கும் பகுதியான சந்தைக்குள் புகுந்து கொள்ள முயல்கிறார்கள்.
தடுத்த வேகனார்
கேந்திரிய விஹார் பகுதியில் இருந்து செக்டார் 110 சந்தையில் புகுந்து தப்பிக்க முயன்றார்கள் என போலீஸார் தகவல் சொல்கிறார்கள். இரு திருடர்களின் வாகனங்களையும் பின்னால் இருந்து வந்த ஒரு மாருதி வேகனார் தெரியாமல் இடித்துவிட இருவருமே நிலை குளைகிறார்கள்.
வீழ்ந்தான்
அதில் ஒரு திருடன் முற்றிலும் தடுமாறி கேந்திரிய விஹாரிலேயே கொள்ளை அடித்த பணப்பையோடு விழுந்துவிட்டான். கொள்ளையனின் பையில் இருந்த பணம் சாலை முழுக்க சிதறிவிட்டது. மற்றொரு கொள்ளையன் கீழே விழுந்தாலும் சமாளித்துக் கொண்டு ஓடிவிட்டான். ஆனால் ஒரு கொள்ளையனுக்கு பலத்த அடி காரணமாக விழுந்தவனால் எழுந்து ஓடமுடியவில்லை. போலீஸாரும் அந்த நேரத்தில் வந்து கீழே விழுந்து கிடந்தவனை பிடித்துவிட்டார்கள்.
எவ்வளவு தொகை
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஏடிஎம்-ல் இருந்து களவு போன தொகை மற்றும் ரொக்க வாகனத்தில் இருந்து திருடப்பட்ட தொகைகளை கணக்கு பார்த்து சுமார் 40,00,000 ரூபாய் கொள்ளை போய் இருப்பதாக தில்லி போலீஸாரிடம் புகார் தெரிவித்திருக்கிறது. இதில் எவ்வளவு தொகை ஏடிஎம்-ல் இருந்தும், எவ்வளவு தொகை ரொக்க வாகனத்தில் இருந்தும் களவு போனது என இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.
விசாரணை
போலீஸாரிடம் பிடிபட்ட இரண்டாம் நபரை விசாரித்த போலீஸார் "அந்தக் கொள்ளையனின் பெயர் நானே (Nanhe) என்றும், இவன் உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்தவன், வயது சுமார் 28 இருக்கும்" என தெரிவித்திருக்கிறார்கள். தப்பி ஓடிய ஆளை பிடிக்க நானே விடம் தொடர்ந்து விசாரித்து வருகிறார்களாம்.
பணம் மீட்பு
ஓடிப் போன திருடன் பையில் இருந்து சுமார் 19.65 லட்சம் ரூபாயை மீட்டிருக்கிறார்களாம். மீதமுள்ள 20.35 லட்சம் ரூபாயை மீட்க முடியவில்லை. ஆனால் திருடப்பட்டது எனச் சொல்கிறார்கள் காவலர்கள். யார் திருடினார்கள் எனக் கேட்டால் அசந்தே போய்விடுவீர்கள்.
போலீஸ் தரப்பு
இந்த வழக்கில் மீதத் தொகையை யார் பெயரில் எழுதுவது என இன்னும் தெளிவு படுத்தப்படவில்லை. உயர் அதிகாரிகளிடம் இது குறித்து பேசி இருக்கிறார்களாம். ஐபிசி பிரிவு 394-ன் கீழ் வழக்கு பதிவுச் எய்திருக்கிறார்களாம். மேற்கொண்டு விசாரித்து வருவதாகச் சொல்லி இருக்கிறார்கள்.இதுவரை கேந்திரிய விஹார் பகுதிகளில் இப்படி ஒரு கொள்ளை நடந்ததே இல்லை. ஆகையால் தப்பித்துப் போனவனைத் தேட தனிப் படையையும் அமைத்திருக்கிறார்களாம்.
குண்டுகள்
இரு கொள்ளையர்கள் மற்றும் பண வாகன பாதுகாப்பு அதிகாரிகளுக்கு மத்தியில் சுமார் 12 குண்டுகள் மாறி மாறி சுட்டுக் கொண்டதாக காவல் துறை அதிகாரிகள் சொல்கிறார்கள். இதில் 8 குண்டுகளில் செதில்கள் கிடைத்துவிட்டதாம். ஆனால் மீதமுள்ல குண்டுகளில் செதில்களை தேடி வருகிறார்களாம்.
முதல் தகவல் அறிக்கை
காவலர்களின் முதல் தகவல் அறிக்கையில் ஒரு திருடனின் பணப் பை அவன் கிழே விழுந்ததும் திறந்து கொண்டு சாலை முழுக்க பணம் சிதறி விட்டதாம். அப்போது பள்ளி விட்டிருந்த காரணத்தால் ஏகப்பட்ட மாணவர்களும், மாணவிகளும் தங்களுக்கு கிடைத்த வரை பணத்தை எடுத்துக் கொண்டு போவதை கேந்திரிய விஹார் பகுதியின் பாதுகாப்பு அதிகாரி பானு செளபே சாட்சியமாக நின்று சொல்கிறார். ஒரு சில சிறுவர்கள் கட்டு கட்டாக 500 ரூபாய் நோட்டுக்களை கொண்டு செல்வதையும் பார்த்ததாக முதல் தகவல் அறிக்கையில் சொல்லி இருக்கிறார்கள். இந்த சம்பவத்தை முதல் தகவல் அறிக்கையில் சொன்னாலும், எந்த ஒரு குழந்தை மீதும் தனிபட்ட முறையில் வழக்கு பதியவில்லை. ஆக மீதமுள்ள 20 லட்சம் ரூபாயை குழந்தைகள் திருடினார்கள் எனச் சொல்லாமல் சூசகமாகச் சொல்லி இருக்கிறது தில்லி போலீஸ்
ஆனால்
அங்கு அருகில் செருப்பு தைத்துக் கொண்டிருந்தவர் மட்டும் 75,000 ரூபாயை தன் சொந்தக் கடன் அடைக்க எடுத்துக் கொண்டாராம். அதைக் கண்டு பிடித்த போலீஸார் பேசி விசாரித்து அவர் மீது மட்டும் சின்ன திருட்டு வழக்கை போட்டிருக்கிறார்களாம். அதோடு ஏகப்பட்ட ரூபாய் நோட்டுக் கட்டுகள் சாக்கடைகளில் விழுந்திருப்பதையும் படம் பிடித்துக் காட்டுகிறார்கள். ஒட்டு மொத்தத்தில் பணத்தை யார் கணக்கில் காட்டி வசூலிப்பது எனத் தெரியாமல் தவிக்கிறது போலீஸ். வங்கியோ காசு எப்போது கிடைக்கும் என காத்திருக்கிறது.