டெல்லி: வீடியோகான் நிறுவனத்திற்கு ரூ. 3,250 கோடி கடன் வழங்கப்பட்ட விவகாரத்தில் சிக்கியுள்ள சாந்தா கோச்சார் வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில் அனைத்து விமான நிலையங்களுக்கும் சிபிஐ லுக்அவுட் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. சாந்தா கோச்சரின் கணவர் தீபக் கோச்சர், வீடியோகான் நிறுவனத்தின் தலைவர் வேணுகோபால் தூத்திற்கு எதிராகவும் லுக் அவுட் சர்க்குலர் அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் மாதத்தின்போது ஐசிஐசிஐ தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பொறுப்பில் இருந்து சாந்தா கோச்சார் விலகினார். அந்த வங்கியில் இருந்து வீடியோகான் குழுமத்திற்கு ரூ. 3,250 கோடி கடனை சாந்தாவின் கணவர் பெற்றுத்தந்தார் என்பது குற்றச்சாட்டு.
ஐசிஐசிஐ வங்கியில் இருந்து வீடியோகான் நிறுவனத்திற்கு கடந்த 2012ஆம் ஆண்டின்போது ரூ. 3,250 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. அப்போது வங்கியின் தலைவராக சாந்தா கோச்சார் இருந்தார்.
கடனால் சிக்கிய சாந்தா கோச்சர்
சாந்தா கோச்சரின் கணவர் தீபக் கோச்சர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது, 2008ஆம் ஆண்டில் நியூ பவர் என்கிற நிறுவனத்தை ஆரம்பித்தார். வீடியோகான் நிறுவனத்தின் தலைவரும் வேணுகோபால் தூத் உடன் சேர்ந்து இந்த நிறுவனத்தை ஆரம்பித்தார் தீபக் கோச்சர். இந்த நிறுவனத்தை ஆரம்பித்த ஒரு மாதத்திலேயே வேணுகோபால் அந்த நிறுவனத்திலிருந்து விலகிவிட்டார். அப்படி விலகும்போது அவருக்கு சொந்தமான 24,999 பங்குகளை தீபக் கோச்சருக்கு மாற்றினார்.
சாந்தா கோச்சரின் கணவர்
கடந்த 2010ஆம் ஆண்டில் நியூ பவர் நிறுவனம் சுப்ரீம் எனர்ஜி பிரைவேட் லிமிட்டெட் என்கிற நிறுவனத்திடமிருந்து 64 கோடி ரூபாய் கடன் வாங்கியது. வீடியோகான் நிறுவனத்தின் துணை நிறுவனம்தான் இந்த சுப்ரீம் எனர்ஜி பிரைவேட் லிமிட்டெட். இந்தக் கடனுக்குப் பதிலாக நியூபவர் நிறுவனத்தின் 94.9 சதவிகிதப் பங்குகளை வேணுகோபாலுக்கு அளித்தார் தீபக் கோச்சர்.
வீடியோகான் நிறுவனம்
சாந்தாவின் கணவர் தீபக் கொச்சார் நுபவர் ரின்யூபிள்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதில் வீடியோகான் நிறுவனத்தின் வேணுகோபால் தூத் முதலீடு செய்திருக்கிறார். இந்த நிலையில் வீடியோகான் நிறுவனத்திற்கு தீபக் கொச்சார் தன் மனைவி மூலமாக ரூ. 3,250 கோடி கடனை பெற்றுத் தந்ததாகவும், இதன் மூலம் சாந்தா கொச்சார், தீபக் கோச்சார் உள்ளிட்டோர் பலன் பெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
சாந்தா கோச்சர் ராஜினாமா
இந்த புகார்கள் வலுவடைந்ததை தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம் சாந்தா கோச்சார் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் மும்பையில் உள்ள வீடியோகான் அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். இதைத் தொடர்ந்து சோதனை நடத்தியது தொடர்பாக வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ரூ. 40 ஆயிரம் கோடி கடன்
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி தவிர வீடியோகான் நிறுவனம் கிட்டத்தட்ட இருபது வங்கிகளில் ரூ.40,000 கோடி கடன் வாங்கியது. இந்தக் கடன் எஸ்.பி.ஐ வங்கியின் தலைமையில் அளிக்கப்பட்டது. வீடியோகான் நிறுவனம் இந்தக் கடன் வாங்கியபின், அதன் பிசினஸ் நன்றாக செயல்படாமல் போக, அந்தக் கடன் வாராக் கடனாக மாறியது. திவால் நிலைக்கு வந்திருக்கும் வீடியோகான் நிறுவனம், இந்தக் கடனை திரும்பக் கட்ட முடியாது என்று சொல்லிவிட்டது.
தீபக் கோச்சர் முதலீடு
தீபக் கோச்சரும், வேணுகோபால் தூத்தும் ஒரு நிறுவனத்தை ஆரம்பித்தபின், ஒரே மாதத்தில் அந்த நிறுவனத்திலிருந்து வேணுகோபால் விலகிக்கொள்ள என்ன காரணம், தீபக் கோச்சர் நடத்திய நிறுவனத்துக்கு வேணுகோபால் ரூ.64 கோடி கடனாகத் தந்து பின் தீபக் நிறுவனத்தில் 94.99 சதவிகித பங்குகளைப் பெற்று, அதே பங்குகளைப் பல பரிவர்த்தனைகளுக்குப் பின், தீபக்கின் டிரஸ்ட்டுக்கு 9 லட்சத்துக்கு மாற்றியது ஏன் என்பது உள்ளிட்ட பல கேள்விகள் எழுந்தன.
சிபிஐ வழக்குப் பதிவு
கடன் வழங்கிய விவகாரத்தில் வங்கி நடத்தை விதிமுறைகளை மீறப்பட்டிருப்பதாக நீதிபதி பி.என்.ஸ்ரீகிருஷ்ணா குழு குற்றம்சாட்டியதை அடுத்து, ஐசிஐசிஐ வங்கியின் மேலாண் இயக்குநர் மற்றும் சிஇஓ பொறுப்பில் இருந்து சாந்தா கோச்சார் நீக்கப்பட்டார். மேலும் வீடியோகான் கடன்முறைகேடு வழக்கில், சாந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் கோச்சார், வீடியோகான் குழும மேலாண் இயக்குநர் வேணுகோபால் தூத் உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
லுக் அவுட் சுற்றறிக்கை
பணப் பரிவர்த்தனைகளில் முறைகேடு நடைபெற்றிருக்கிறதா என ஆய்வு மேற்கொண்ட அமலாக்கத்துறையும், சாந்தா கோச்சார் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. தீபக் கோச்சார், வேணுகோபால் தூத் ஆகியோருக்கு எதிராக கடந்த ஆண்டே, அனைத்து விமான நிலையங்களுக்கும் சிபிஐ சார்பில் லுக்அவுட் சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டன. வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில், அனுப்பப்பட்ட இந்த சுற்றறிக்கைகள் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளதுடன், சாந்தா கோச்சாருக்கு எதிராக முதல்முறையாக, சிபிஐ லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.