மும்பை: காலம் ஒரு மனிதனை உச்சத்தில் கொண்டு போய் வைக்கும் அதே காலம்தான் படுபாதாளத்திற்கும் தள்ளி விடும். ஒரு காலத்தில் இந்திய பங்குச் சந்தையை தினசரி நிர்ணயம் செய்யும் சக்தியாக இருந்த அனில் அம்பானி குழுமத்தின் நிறுவன பங்குகள் தற்போது படு பாதாளத்தில் விழுந்துள்ளது பங்குச் சந்தை வல்லுநர்களை வருத்தமடையச் செய்துள்ளது. பத்தாண்டுகளுக்கு முன்பு உலகின் பணக்காரர்கள் பட்டியலில் ஆறாவது இடத்தில் இருந்த அனில் அம்பானியின் சாம்ராஜ்யம் சரிவடைய என்ன காரணம் என்று அலசலாம்.
எரிக்சன் நிறுவனத்திற்கு தரவேண்டிய கடன் தொகையை இன்னும் 4 வாரங்களுக்குள் தராவிட்டால் 3 மாத சிறைத் தண்டனை அனுபவிக்கவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், அனில் அம்பானி தன்னுடைய நிறுவன சொத்துக்களை விற்கவேண்டிய இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது.
15 ஆண்டுகளுக்கு முன்பு வந்த ஒரு தமிழ் சினிமாவில் வரும் ஒரு காமெடி காட்சியில், ஒரு பால் காரர் தன்னுடைய 500 ரூபாய் மொபைல் ஃபோனில் பேசிவிட்டு, அதை பால் கரக்கும் பாத்திரத்தில் போட்டுவிட்டு நடையை கட்டுவார். அதற்கு காரணம் அந்த மொபைல் ஃபோனின் விலை வெறும் ரூ.500 மட்டுமே. அது வரையிலும் நோக்கியா, எரிக்சன் போன்ற நிறுவனங்களின் ரூ.20000, அல்லது ரூ.30000 கொடுத்து பணக்காரர்கள் மட்டுமே வாங்கி உபயோகிக்கும் பழக்கம் இருந்து வந்தது.
ரூ.500 ரூபாய் மொபைல் போன்
பணக்காரர்கள் அதிக விலை கொடுத்து வாங்கி உபயோகித்த மொபைல் ஃபோன்களை சாதாரண மக்கள், வெறும் கண்ணால் வேடிக்கை மட்டுமே பார்த்த ட்ரெண்டை மாற்றி, சாதாரண மக்களும் வாங்கி உபயோகிப்பதற்கு வழி வகுத்தவர் அனில் அம்பானிதான். ஆம், வெறும் ரூ.500க்கு மட்டுமே மொபைல் ஃபோன் வாங்கி அளவில்லாமல் பேசுவதற்கு வழி காட்டிய வள்ளல் அனில் அம்பானி தான் என்று சொன்னால் அது மிகையில்லை.
அனில் அம்பானிக்கு சிறை
ரூ.500க்கு மட்டுமே மொபைல் ஃபோனை கொடுத்த அனில் அம்பானி இன்று ரூ.500 கோடியை அபராதத்துடன் 4 வாரங்களுக்குள் செலுத்தவேண்டும் என்றும், இல்லை என்றால் சிறை செல்லவேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தால் எச்சரிக்கப்பட்டுள்ளதும் அவரது கெட்ட நேரம்தான் என்று சொல்லவேண்டும். கடந்த 2008ஆம் ஆண்டு உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் ஆறாவது இடம் பெற்ற அனில் அம்பானி, 2009ஆம் ஆண்டு 34வது இடத்திற்கு தள்ளப்பட்டார். இவரின் சொத்து மதிப்பு 50 ஆயிரத்து 500 கோடி ரூபாயாக குறைந்தது. இவரின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்சின் மூன்றில் இரண்டு பங்கு ஷேர்கள் சரிந்ததால் அதிகளவில் நஷ்டமடைந்தார்.
அம்பானி குடும்ப சொத்துக்கள்
அனில் அம்பானியின் அண்ணனான முகேஷ் அம்பானி எதைத் தொட்டாலும் லாபம் இரட்டிப்பாக திரும்ப கிடைக்கிறது. ஆனால் இவருக்கோ நஷ்டம் இரட்டிப்பாக உச்சந்தலையில் இடியாக இறங்குகிறது. 2002ஆம் ஆண்டில் திருபாய் அம்பானியின் இறப்புக்கு பின்பு சொத்துப் பிரச்சினையில் அண்ணன் தம்பிக்கு இடையே ஆன சகோதர உறவில் பெரிய இடைவெளி ஏற்பட்டது. பின்னர் ஏற்பட்ட சமரசப்பேச்சில் உடன்பாடு ஏற்பட்டு, வற்றாத அமுத சுரபியான கச்சா எண்ணை சுத்திகரிப்பு நிறுவனமான வளம் கொழிக்கும் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் (Reliance Industries Ltd) நிறுவனத்தையும் அதன் துணை நிறுவனங்களும் முகேஷ் அம்பானி எடுத்துக்கொண்டார்.
முகேஷ் அம்பானிக்கு லாபம்
அண்ணன் தானே போனால் போகட்டும், விட்டுக்கொடுத்தவர்கள் என்றும் கெட்டுபோனதில்லை என்று முன்னோர்கள் சொன்ன வாக்கை நம்பி அண்ணனுக்கு விட்டுக்கொடுத்து லாபம் குறைவான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், ரிலையன்ஸ் கேபிடல், ரிலையன்ஸ் எனர்ஜி போன்ற நிறுவனங்களை அனில் அம்பானி எடுத்துக்கொண்டார்.
செல்போன் விற்பனை
தன்னுடைய நிறுவனங்களை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும் முனைப்பில் 2004ஆம் ஆண்டில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தை பாமர மக்களும் அறிந்துகொள்ளும் வகையில் மொபைல் ஃபோன்களை ரூ.500க்கு கொடுத்து அனைவரையும் ஆனந்த அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
ரிலையன்ஸ் எனர்ஜி
2006ஆம் ஆண்டு இந்தியப் பங்குச் சந்தைக் களம் உச்சத்தை தொட்ட நேரத்தில்தான் அனில் அம்பானி புதிய முயற்சியாக ஆர்.காம், ரிலையன்ஸ் எனர்ஜி நிறுவனங்களை மேம்படுத்த இந்திய பங்குச் சந்தையில் இறங்கினார். ஆர்.காம் நிறுவனத்தின் மூலம் தொலைத் தொடர்பு துறையிலும், ரிலையன்ஸ் எனர்ஜி மூலம் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான துறையிலும் இறங்கினார். 2006ஆம் ஆண்டு இந்தியப் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட ஆர்,காம் நிறுவனம் ரூ.300க்கு வர்த்தகமானாலும், 2008ஆம் ஆண்டில் உச்சபட்சமாக ரூ.800ஐ தொட்டது. மற்றொரு நிறுவனமான ரிலையன்ஸ் எனர்ஜி ரூ.1600ஐ தொட்டது.
இயற்கை எரிவாயு நிறுவனம்
இதன் துணை நிறுவனமான ரிலையன்ஸ் இயற்கை எரிவாயு நிறுவனமான (Relaince Natural Resources Ltd-RNRL)ஆர்.என்.ஆர்.எல் நிறுவனம் ரூ.250க்கும் விற்பனையானது. (ஆர்.என்.ஆர்.எல் நிறுவனம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திடமிருந்து எரி வாயுவை வீடுகளுக்கு சப்ளை செய்ய ஒப்பந்தம் போட்டிருந்தது தனிக்கதை). டெல்லி மாநகரத்திற்கும் மற்றும் சில நகரங்களுக்கும் மின் பகிர்மான திட்டத்தை ரிலையன்ஸ் எனர்ஜி நடத்தி வந்தது. இதில் தடங்கல் ஏற்பட்டது.
மத்திய அரசு ஆதரவு
இதற்கு காரணம் முகேஷ் அம்பானிதான் காரணம் என்று அனில் குற்றம் சாட்டினார். ஆனாலும் இந்த விஷயத்தில் மத்திய அரசு முகேஷ் அம்பானிக்கு துணை நின்றது. இதனால் கோபமான முகேஷ் அம்பானி எரிவாயு சப்ளை செய்ய ஒப்புக்கொள்ளப்பட்ட தொகை கட்டுபடி ஆகாததால் கூடுதல் தொகை தரவேண்டும் என்று மல்லுக்கு நின்றார். வேறு வழி தெரியாத அனில் அம்பானி உச்ச நீதி மன்றத்தை நாடி நியாயம் கேட்டார்.
ரிலையன்ஸ் பவர்
உச்ச நீதிமன்றமும் இரு தரப்பு வாதத்தை கேட்டு இறுதியில், இயற்கை வளம் என்பது முற்றிலும் நாட்டின் பொதுச் சொத்து என்பதால், இருவரும் விட்டுக்கொடுத்து பேச்சு வார்த்தையின் மூலம் சுமூக தீர்வு காணவேண்டும் என்ற சொல்லிவிட்டது. இந்த விஷயத்தில் தனக்கு தோல்வி ஏற்பட்டதாக அனில் உணர்ந்தார். இடையில் 2008ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மின் உற்பத்தி பகிர்மானத்திற்காக புதிதாக ரிலையன்ஸ் பவர் (Reliance Power) என்ற நிறுவனத்தை தொடங்கி பங்குச் சந்தையிலும் நுழைந்தார். உடன் ஆர்,என்,ஆர்,எல் நிறுவனத்தை ரிலையன்ஸ் பவர் நிறுவனத்துடன் இணைத்துவிட்டார்.
பங்குச்சந்தை சரிவு
ரிலையன்ஸ் பவர் நுழைந்த நேரம் அனில் அம்பானிக்கு கெட்ட நேரம் ஆரம்பாமானது போல. ஆம், அமெரிக்க பங்குச் சந்தை தொடங்கி உலக பங்குச் சந்தைகள் எல்லாம் ஆட்டம் கண்ட நேரம். அதன் தாக்கம் இந்தியப் பங்குச் சந்தையிலும் எதிரொலித்தது. தேசிய பங்குச் சந்தை மற்றும் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட அனைத்து பங்குகளும் மிக மிக மோசமான சரிவை சந்தித்தன. (அடிக்கிற காற்றில் அம்மிக் கல்லே பறக்கும்போது இது எம்மாத்திரம்.) அந்த நேரத்தில் ரிலையன்ஸ் பவர் நிறுவனம் பங்குச் சந்தை நுழைந்ததால், பட்டியலிடப்பட்ட அன்றே ரிலையன்ஸ் பவர் நிறுவனம் படு வீழ்ச்சியை சந்தித்தது. அது போலவே, அனில் அம்பானி நிறுவன பங்குகள் அனைத்துமே கடும் சரிவை சந்தித்தன.
எரிக்சன் நிறுவன ஒப்பந்தம்
2008ஆம் ஆண்டு ஆரம்பித்த சரிவு இன்று வரையிலும் தொடர்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். ஆர்.காம் நிறுவனத்தை தொடர்ந்து நடத்துவதற்கு 2014ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தின் எரிக்சன் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டது. அதன்படி 2014ஆம் ஆண்டு தொடங்கி 7 ஆண்டுகளுக்கு ஆர்,காம் நிறுவனத்தை நிர்வகித்து தொலைத் தொடர்பு சேவையை வழங்கவேண்டும் என்று ஒப்பந்தம் போடப்பட்டது. இதற்காக எரிக்சன் நிறுவனத்திற்கு ஞரு.1600 கோடியை சேவைக் கட்டணமாக வழங்க வேண்டும் என்று ஆர்.காம் நிறுவனம் ஒப்புக் கொண்டது.
நஷ்டத்தில் அனில்
எரிக்சன் நிறுவனத்திற்கு சேவைக்கட்டணமாக தர ஒப்புக்கொண்ட தொகையில் சுமார் ரு.1000 கோடியை தராமல் ஆர்.காம் நிறுவனம் இழுத்தடித்தது. பொறுத்துப் பார்த்த எரிக்சன் நிறுவனம் தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு நீதி மன்றத்திடம் முறையிட்டது. ஆர்.காம் நிறுவனம் தன்னால் முழு தொகையையும் தர முடியாது என்றும் ரூ.550 கோடி மட்டுமே தர முடியும் என்று சரணடைந்தது. இருந்தாலும் ஒப்புக்கொண்ட தொகையை தராமல் உச்ச நீதி மன்றத்தை அணுகி, தன்னுடைய நிறுவன சொத்துக்களை விற்று பாக்கித் தொகையை அடைக்கிறேன் என்று முறையிட்டது. உச்ச நீதிமன்றமும் ஆர்.காமின் நிலைமையை உணர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வரை காலக்கெடு விதித்தது.
ஜியோவிற்கு மாறிய மக்கள்
ரிலையன்ஸ் கம்யூன்கேஷன் நிறுவனத்தின் போதாக காலமாக, அண்ணன் முகேஷ் அம்பானி, தம்பிக்கு போட்டியாக ஆர்ஜியோ என்னும் தொலைத் தொடர்பு நிறுவனத்தை கடந்த 2016ஆம் ஆண்டில் தொடங்கி வெற்றிகரமாக நடத்த தொடங்கினார். ஆர்.ஜியோ ஏராளமான இலவச அறிவிப்புகளை அள்ளி வழங்கியதுடன் 4ஜி சேவையை வழங்கியதால், நாட்டின் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் ஆர்ஜியோவின் வாடிக்கையாளர்களாக மாறிக்கொண்டனர்.
கழுத்தை இறுக்கிய கடன்
ஆர்.காமின் வாடிக்கையாளர்களும் ஆர்.ஜியோவிற்கு மாறிக்கொண்தால் ஆர்.காம் பெரும் நட்டத்தை சந்தித்தது. நட்டத்தை சரிக்கட்ட கடனுக்கு மேல் கடன் வாங்கி குவித்ததால் கடன் கழுத்தை இறுக்கியது. சுமார் ரூ,45000 கோடி கடன் சுமை இருந்த நிலையில், அண்ணன் முகேஷ் அம்பானி ஆர்.ஜியோ நிறுவனத்திற்காக ஆர்,காமின் அலைவரிசை, கோபுரங்களை உள்ளிட்டவற்றை ரூ.25000 கோடிக்கு வாங்க முன்வந்தார்.
சட்டச்சிக்கல்கள்
ஆர்,காமின் கோபுரங்கள், அலைவரிசை போன்றவற்றை ஆர்.ஜியோ வாங்க முன்வந்தாலும், அதற்க முன்பாக பயன்படுத்திய அலைவரிசைக் கட்டணத்தை தொலைத் தொடர்புத் துறைக்க செலுத்தவேண்டிய தொகையை செலுத்தவிடல்லை. இதனால் சிக்கல் நீடித்தது.
இந்த நிலையில் எரிக்சன் நிறுவனத்திற்கு செலுத்தவேண்டிய தொகைக்கு ஆர்,காம் நிறுவனம் தன்னுடைய சொத்துக்களை விற்று பணத்தை திரட்ட முயன்றது. எனினும் அதிலும் நடைமுறை சிக்கல்களும் சட்டச் சிக்கல்களும் எழுந்தன. இதனால் சொத்துக்களை விற்க முடியவில்லை. இந்நிலையில் எரிக்சன் நிறுவனத்திற்கு தரவேண்டிய காலக்கெடு முடிந்தது. இதை அடுத்து எரிக்சன் நிறுவனம் நீதிமன்ற அவமதிப்பு தொடர்ந்தது.
எரிக்சன் நெருக்கடி
அனில் அம்பானியை கைது செய்யவேண்டும் என்றும் எரிக்சன் நிறுவனம் வாதிட்டது. நீதிமன்ற அவமதிப்பு செய்ததால் அனில் அம்பானியை கைது செய்யவேண்டும் என்று எரிக்சன் நிறுவனம் வாதிட்டது. ஆனாலும், அனில் அம்பானி சொத்துக்களை விற்க முயற்சி செய்துவருவதாக வாதிட்டது. இதனை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் இன்னும் 4 வாரங்களுக்குள் எரிக்சன் நிறுவனத்திற்கு தரவேண்டிய பாக்கித் தொகையை தரவேண்டும் என்று கெடு விதித்தது.
நிதி திரட்ட முவு
அனில் அம்பானியும் ஆர்.காம் நிறுவன சொத்துக்களை விற்க முயற்சி செய்துவருகிறார். இப்போதைய சூழ்நிலையில் ஆர்,காம் நிறுவனத்திற்கு வருமான வரித்துறையிடம் இருந்து வரவேண்டிய ரூ.260 கோடியை ரீஃபண்டு தொகையை பெற நடவடிக்கை எடுத்துவருகிறார். அந்தத் தொகையை எரிக்சன் நிறுவனத்திற்கு செலுத்த முயற்சி எடுத்து வருகிறார். எனினும் இன்னமும் 200 கோடி ரூபாயை அனில் அம்பானி செலுத்த வேண்டும்.
கையில் பணமில்லை
இதனை திரட்ட உடனடியாக கையில் பணம் இல்லை என கூறப்படுகிறது. இதையடுத்து தனது சகோதரரின் ஜியோ நிறுவனத்துக்கு ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் பொருட்களை விற்பனை செய்ததற்கு வர வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்துமாறு கோரியுள்ளார்.
பங்குச்சந்தையில் பாதாளம்
ஆர்.காமின் கடன் சுமையால் அதன் சந்தை மதிப்பும் சந்தை விலையும் நாளுக்கு நாள் கடும் சரிவையே சந்தித்து வருகின்றன. இன்றைய நிலையில் ஆர்.காமின் சந்தை விலை 22.02.19ஆம் தேதியில் ரூ.6.50 ஆகவும், ஆர்.பவர் நிறுவனத்தின் சந்தை விலை ரூ.11.40 ஆகவும், ரிலையன்ஸ் கேபிடல் ரூ.164 ஆகவும், ரிலையன் இன்ஃப்ரா ரூ.134 ஆகவும், நிலை கொண்டுள்ளது. இதில் ஆர்.காம் நிறுவனத்தின் சந்தை விலை படு பாதாளத்தில் விழுந்துள்ளது மிகவும் பரிதாபமான செய்தியாகும்.
சாம்ராஜ்யம் சரிந்தது
ஒரு காலத்தில் இந்திய பங்குச் சந்தையை தினசரி நிர்ணயம் செய்யும் சக்தியாக இருந்த அனில் அம்பானி குழுமத்தின் நிறுவன பங்குகள் தற்போது படு பாதாளத்தில் விழுந்துள்ளது பங்குச் சந்தை வல்லுநர்களை வருத்தமடையச் செய்துள்ளது. இளைய சகோதரனின் நிலையை உணர்ந்து சகோதரனை கை தூக்கிவிட்டு காப்பாற்றுவாரா அல்லது வியாபாரம் என்ற சறுக்கு மரத்தில் ஏற்றம் இறக்கம் எல்லாம் சகஜம் என்று ஒதுங்கி நின்று கை கட்டி வேடிக்கை பார்ப்பாரா என்பது காலத்தின் கையில் தான் உள்ளது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு உலக பணக்காரர்கள் பட்டியலில் ஆறாவது இடத்தில் இருந்த அனில் அம்பானியை காலம் சிறைக்குள் தள்ளுமா அல்லது இந்த நெருக்கடியில் இருந்து தப்பிக்க கை கொடுக்குமா என்பதை பார்க்கலாம்.