டெல்லி: நாட்டில் உள்ள விமான நிலையங்களை பராமரிக்கும் முழு பொறுப்பையும் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் திட்டத்தின் முதற்கட்டமாக 5 விமான நிலையங்களை நிர்வகிக்கும் பொறுப்பை அதானி நிறுவனம் கைப்பற்றி உள்ளது.
நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்கள் அனைத்தையும் தற்சமயம் மத்திய சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள விமான போக்குவரத்துத் துறை ஆணையம் (Airports Authority of India-AAI) வசம் இருந்து வருகிறது. அனைத்து விமான நிலையங்களையும் நிர்வகிப்பதை பெரும் சவாலாகவும் சுமையாகவும் இருப்பதாக மத்திய அரசு உணர்ந்தது.
அனைத்து விமான நிலையங்களையும் நிர்வகித்தல் மற்றும் பராமரிக்கும் பணியில் தனியார் நிறுவனங்களையும் இணைத்துக்கொண்டால் நிர்வாகத் திறமையும் விமான நிலையங்களின் தரமும் கூடும். அதனால் விமான பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும், அதனால் வருமானமும் கூடும் என்பதை உணர்ந்த மத்திய அரசு, இத்திட்டத்தில் தனியார் நிறுவனங்களையும் இணைத்துக்கொள்ள சில மாதங்களுக்கு முன்பு முடிவெடுத்தது.
விமான நிலையங்களை நிர்வகிக்கவும், பராமரிக்கவும் தேவைப்படும் 100 சதவிகித முதலீட்டை தனியார் நிறுவனங்களே ஏற்றுக்கொள்ளும். அதே சமயம் கிடைக்கும் லாபத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை விமான போக்குவரத்துத் துறை ஆணையத்திற்கு செலுத்தும். (அதாவது, நான் உமி கொண்டு வர்றேன், நீ நெல் கொண்டு வா, ரெண்டு பேரும் சேர்ந்து ஊதி ஊதி தின்போம் என்பது போல் உள்ளது இந்தக் கதை). அரசு மற்றும் தனியார் துறை பங்களிப்புடன் விமான நிலைய நிர்வாகம் மற்றும் பராமரிப்புப் பணி நடைபெறும் என்று மத்திய அரசு திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது.
அரசு-தனியார் துறை இணைந்து பராமரிக்கும் இத்திட்டத்தின் முதல் கட்டமாக 6 விமான நிலையங்களுக்கு ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டன. இதில் அகமதாபாத், லக்னோ, ஜெய்ப்பூர், குவஹாத்தி, மங்களூரு மற்றும் திருவனந்தபுரம் ஆகிய 6 விமான நிலையங்களில் 5 விமான நிலையங்களை பராமரிப்பதற்கு அதானி நிறுவனம் குறைந்த தொகைக்கு ஒப்பந்தத் தொகை கோரி இருந்தது. இதனையடுத்து 5 விமான நிலையங்களை நிர்வகித்தல் மற்றும் பராமரிக்கும் பொறுப்பை அதான நிறுவனம் ஏற்றுக்கொள்ளும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதன்படி, அகமதாபாத், லக்னோ, ஜெய்ப்பூர், மங்களூரு மற்றும் திருவனந்தபுரம் ஆகிய 5 விமான நிலையங்களையும் அடுத்த 50 ஆண்டுகளுக்கு நிர்வாகம் மற்றும் பராமரிக்கும் உரிமையை அதானி நிறுவனம் ஏற்றுக்கொள்ளும். குவகாத்தி விமான நிலையத்துக்கான ஒப்பந்தப் புள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை.
மத்தியில் மோடி அரசு பதவி ஏற்றபின்பு, மோடி மற்றும் பாஜக தலைவரான அமித்ஷா ஆகியோரின் மிக நெருங்கிய நண்பராக கருதப்படும் அதானி ஏற்கனவே சோலார் மின் உற்பத்தி மற்றும் விநியோகம், காற்றாலை மின் உற்பத்தி மற்றும் விநியோகம், துறைமுக பராமரிப்பு போன்ற துறைகளில் நுழைந்துவிட்டது. தற்போது விமான பராமரிப்பிலும் காலடி எடுத்துவைத்துள்ளது.