திருச்சி: மத்திய அரகின் கனரக மின் உற்பத்தி நிறுவனமான பெல் 2018-19ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால ஈவுத் தொகையாக 40 சதவிகிதமான ரூ.279 கோடியை பங்குதாரர்களுக்கு வழங்கியுள்ளது. முதலீட்டாளர்களின் நம்பிக்கையை முழுமையாக பெற்றுள்ள நம்பகமான பொதுத்துறை நிறுவனமாக விளங்குவதாலேயே தொடர்ந்து 15 ஆண்டுகளாக டிவிடெண்ட் வழங்கி சாதனை படைத்து வருகிறது. இதன் காரணமாகவே நிறுவன முதலீட்டாளர்களுக்கும் அந்திய நேரடி முதலீட்டாளர்களுக்கும் ஆல் டைம் ஃபேவரைட் முதலீட்டு பங்கு நிறுவனமாக பெல் விளங்குகிறது.
இந்திய அரசின் மகாரத்னா விருதுபெற்ற பொதுத்துறை நிறுவனங்களில் பாரத மிகு மின் நிறுவனம்(BHEL) அடங்கும். இந்தியா மற்றும் வெளிநாடுகளிலும் மின்னாக்கி நிலையங்களை உருவாக்க தேவைப்படும் கொதிகலன்கள்(Boiler), சுழலிகள் (Turbine) மற்றும் பெருவகை மின்னுருவாக்கத்திற்கு தேவைப்படும் துணைக்கருவிகளையும் உற்பத்தி செய்து வருகிறது.
தமிழகத்தில் பெல் நிறுவனத்திற்கு சென்னை, திருச்சி, ராணிப்பேட்டை ஆகிய ஊர்களில் கிளைகள் உள்ளன. தற்போது மற்றொரு உற்பத்திப் பிரிவாக புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்திலும் கிளையை அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.
பெல் நிறுவனம் 2003ஆம் ஆண்டில் இருந்து தேசிய பங்குச் சந்தையிலும் மும்பை பங்குச் சந்தையிலும் பட்டியலிடப்பட்டு பங்குவர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பானது (Market Capital) இன்றைய மதிப்பின் படி சுமார் ரூ.22,911 கோடி ஆகும். இந்நிறுனம் பட்டியலிடப்பட்ட ஆண்டு முதலே தொடர்ந்து இடைக்கால டிவிடெண்ட் (Interim Dividend) மற்றும் இறுதி டிவிடெண்ட்டையும்(Final Dividend) வழங்கி சாதனை படைத்து வருகிறது.
[Read more: தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் 5 ஆண்டு வருமானவரி கணக்கை சமர்பிக்க உத்தரவு - பான் கட்டாயம்]
நடப்பு 2018-19ஆம் ஆண்டிலும் தற்போது வழக்கமாக வழங்கும் இடைக்கால டிவிடெண்டாக 40 சதவிகிதம் (ரூ.279 கோடி) வழங்கியுள்ளது. இறுதி டிவிடெண்டை வரும் 2019-20ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் நடக்கும் ஆண்டு பொதுக்குழு கூட்டத்திற்கு பின்னர் வழங்கும் என்று தெரிகிறது. கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து இடைக்கால டிவிடெண்டாக 40 சதவிகிதம் வழங்கி வருகிறது.
பெல் நிறுவனம் பொதுத்துறை நிறுவனமாதலால் இந்நிறுவனத்தின் 63.17 சதவிகித பங்குகளை மத்திய அரசே வைத்துள்ளதால், இடைக்கால டிவிடெண்டாக அறிவித்துள்ள ரூ.279 கோடியில் ரூ.176 கோடியை மத்திய அரசே எடுத்துக்கொள்ளும். மீதமுள்ள 36.83 சதவிகித (ரூ.103 கோடி) தொகையை பங்குச் சந்தையில் வாங்கிய நிறுவன முதலீட்டாளர்கள், நேரடி அந்நிய முதலீட்டாளர்கள் மற்றும் சாதாரண பங்குதார்களுக்கு வழங்கும்.
இதுதொடர்பாக, பெல் நிறுவனத்தின் மக்கள் தொடர்புத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
பெல் நிறுவனத்தின் 2018-19ஆம் நிதி ஆண்டுக்கான இடைக்கால ஈவுத் (Interim Dividend) தொகையாக 40 சதவிகிதம் (ரூ,279 கோடி) அளித்துள்ளது. இது, கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஒரே ஆண்டில் வழங்கப்பட்ட மிகக் கூடுதல் ஒட்டுமொத்த ஈவுத் தொகை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், மத்திய அரசின் பங்கான 63.17 சதவிகிதத்திற்கு இடைக்கால டிவிடெண்ட் ரூ.176 கோடியை பெல் குழுமம் வழங்கியுள்ளது. இதற்கான காசோலையை கனரக தொழில்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கான மத்திய அமைச்சர் அனந்த் கீத்தேவிடம் கனரக தொழிற்துறை செயலர் ஏ.ஆர். சிஹாக் முன்னிலையில், பெல் குழுமங்களின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் அதுல் சோப்தி, டெல்லியில் வழங்கினார்.
குழும நிர்வாகக் குழுவின் இயக்குநர்கள் மற்றும் கனரகத் தொழிற்துறையின் மூத்த அலுவலர்கள் உடனிருந்தனர். தனது வளர்ச்சி மற்றும் உற்பத்தி வேகத்தைக் கூட்டியுள்ள பெல் நிறுவனம் நடப்பு 2018-19ஆம் நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டு வரையிலான லாபத்திலும், வருவாயிலும் அதிக ஏற்றத்தைப் பதிவு செய்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.