டெல்லி: லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களின் சுய விபரங்களுடன் கடந்த 5 ஆண்டுகளுக்கான வருமானவரி கணக்கு தாக்கல் செய்துள்ள விபரங்களையும் பான் கார்ட் விபரங்களையும் கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்றும் மத்திய அரசு புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வழக்கமாக வேட்புமனு தாக்கல் செய்யும் போது வேட்பு மனுவுடன் இணைத்து அபிடவிட் (பார்ம் 26)தாக்கல் செய்ய வேண்டும், அபிடவிட் பூர்த்தி செய்யும் போது அதில் சுய விபரம், கல்வித்தகுதி சொத்து மதிப்பு விபரம்,கடன் பற்றிய விபரம், வங்கி கணக்கில் உள்ள தொகை பற்றிய விபரம், (வேட்பாளர் மற்றும் அவரின் வாழ்க்கை துணை மற்றும் குடும்ப உறுபினர்களின் சொத்து மதிப்பு விபரம் கடன் பற்றிய விபரம், வங்கி கணக்கில் உள்ள தொகை பற்றிய விபரம் வழக்கு விபரம் முழுமையாக தெரிவிக்க வேண்டும்.
வேட்பாளர் அவரின் குடும்பத்தினரின் அசையும் அசையா சொத்து விபரம் குறிப்பிட வேண்டும், கையிருப்பு ரொகம் நகைகள் உள்ளிட்ட அசையும் சொத்துகள் பற்றிய விபரம் தோராயமாக குறிப்பிடாலாம். அசையா சொத்து பற்றிய விபரம் சரியாக தெளிவாக குறிப்பிட வேண்டும். குடும்ப சொத்து தனி சொத்து வீடு நிலம் பிளாட் ஆகியவறின் சர்வே எண் சந்தை மதிப்பு வாங்கிய மதிப்பு ஆகியவை குறிப்பிட வேண்டும் என்பது வழக்கமான நடைமுறை.
இந்த நிலையில் இந்த ஆண்டு முதல் வேட்பாளர்கள், கடந்த 5 ஆண்டுகளில் தாக்கல் செய்த வருமானவரி கணக்கு விபரங்களையும் வேட்புமனு தாக்கல் செய்யும் போது சமர்பிக்க வேண்டும் என்று புதிய உத்தரவு ஒன்றை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. வேட்பாளர் மட்டுமின்றி அவரது மனைவி, குடும்பத்தினரின் வருமானவரி கணக்கு தாக்கல் செய்த விபரங்களையும், சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
[Read more: பெல் நிறுவனம் 15வது ஆண்டாக 40% டிவிடெண்ட் வழங்கி சாதனை - முதலீட்டாளர்களுக்கு லாபம்]
வேட்பாளர் மற்றும் அவரது குடும்பத்தினரின் பான் கணக்கு விபரங்களையும், வெளிநாடுகளில் செய்துள்ள முதலீடுகள், வெளிநாடுகளில் வாங்கியுள்ள சொத்து விபரங்களையும் குறிப்பிட வேண்டும் என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பான் எண்ணை குறிப்பிடாமல் சொத்து விபரங்கள் அளிக்கப்பட்டிருந்தால் பான் எண் இல்லை என்பதை தெளிவாக அதற்குரிய காலத்தில் தெரிவிக்க வேண்டும்.
இதுநாள் வரை சமர்பிக்கப்படும் அபிடவிட் படிவத்தில் இந்த விபரங்கள் கேட்கப்படுவதில்லை. நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் புதிய விதிமுறைகளை தேர்தல் ஆணையம் வகுத்துள்ளது. படிவம் 26ல் புதிய விதிமுறைகளை இணைக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதை அடுத்து இந்த அறிவிப்பினை மத்திய அரசு சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
1961ஆம் ஆண்டுக்கான தேர்தல் விதிமுறையில் மாற்றம் செய்து படிவம் 26ல் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் பற்றியும் கடந்த பிப்ரவரி 13ஆம் சட்ட அமைச்சகத்திற்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. இதனையடுத்தே சட்ட அமைச்சகம் புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் வேட்பாளர்களின் சொத்து விபரங்கள், வெளிநாட்டு முதலீடுகளை நேரடி வரிகள் வாரியம் மூலம் எளிதில் சரிபார்க்க முடியும் என்றும் தேர்தல் ஆணைய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.