மும்பை: அங்கீகரிக்கப்படாத பலவிதமான மறைமுக கட்டணங்களினால் தான் மக்களுக்கு ஆன்லைன் பரிவர்த்தனை என்னும் பணமில்லா பரிவர்த்தனைகள் மீதான ஆர்வம் குறைந்துபோனதற்கு காரணம் என்று மும்பை ஐஐடி செய்துள்ள ஆய்வில் தெரியவந்துள்ளது.
ரொக்கமில்லாத பண பரிவர்த்தனைகள் மேற்கொள்வதால் மட்டுமே நாட்டின் பொருளாதாரம் வலுப்பெரும் என்றும் கருப்புப் பணப் பரிமாற்றத்தை ஒழிக்க முடியும் என்றும் சொல்லி பணமில்லா பரிமாற்றத்தை ஊக்குவிக்க நினைக்கும் மத்திய அரசுக்கு இந்த ஆய்வு முடிவு கவலை அளிப்பதாக உள்ளது.
ஆன்லைன் பரிவர்த்தனை மேற்கொள்வதற்கு ஊக்குவிப்பதற்காக மத்திய அரசு கொண்டுவந்த பரிசுத் திட்டமும் முழு அளவில் செயல்படாததால் மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆன்லைன் பரிவர்த்தனையை மேற்கொள்ளும் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் மத்திய அரசு ஏதேனும் சிறப்பு திட்டம் கொண்டுவந்தால் மட்டுமே இத்திட்டம் வெற்றி அடையும். இல்லை என்றால் மத்திய அரசுக்கு வெறும் கனவுத்திட்டமாகவே இருக்கும் என்பது ஆய்வாளர்களின் எண்ணமாகும்.