டெல்லி: வருமான வரி செலுத்துபவர்களுக்கு பெரும்பாலும் வருமான வரிச்சட்டம் 80சி பிரிவைப் பற்றி அறிந்திருந்தாலும் அதை எப்படி முழுமையாக பயன்படுத்துவது என்பது தெளிவாக தெரியாததால் தேவை இல்லாமல் ஆண்டு தோறும் ரூ.1.50 லட்சம் வரையிலும் வரி செலுத்தி அவஸ்தைப் படுகின்றனர்.
மாதச் சம்பளம் வாங்குபர்களில் வருமான வரி செலுத்தும் வரம்புக்குள் வருபவர்களுக்கு வரியை செலுத்தாமல் தவிர்ப்பது எப்படி என்பது பெரிய விஷயமாக இருக்கிறது. பல பேர் போனால் போகட்டும் போடா என்ற மனநிலையுடன் எவ்வளவு வரி பிடித்தம் செய்கிறார்கள் என்ற கவலையே இருப்பதில்லை.
சில பேர் வரி அரசுக்கு தானே செல்கிறது, சம்பளத்தில் பிடித்துக் கொள்ளுங்கள் என்று பேசாமல் விட்டுவிடுவார்கள். அவர்களுக்கு எவ்வளவு பிடித்தம் செய்கிறார்கள், ஏன் பிடித்தம் செய்கிறார்கள் என்ற சிந்தனை எழுவதில்லை. தங்களின் சம்பளத்தில் வரி செலுத்தவதை தவிர்க்க வருமான வரிச் சட்டம் 80சி பிரிவு உள்ளது என்பதும், அதனால் ரூ.1.5 லட்சம் வரையிலும் சேமிக்க முடியும் என்பதையும் அறிந்து கொள்ள முடிவதில்லை. அப்படியே தெரிந்தாலும் அதை எப்படி முழுமையாக பயன்படுத்துவது என்பது தெரியாது. அவர்களுக்காகவே இந்த கட்டுரை
வருமானவரிச்சட்டம்
வருமான வரிச் சட்டம் 80சி பிரிவு என்பது, வரி செலுத்தும் வரம்பிற்குள் வருபவர்கள், வரி செலுத்தாமல் தவிர்க்க வருமான வரிச் சட்டம் அங்கீகாரம் அளித்துள்ள சேமிப்பு திட்டங்கள், முதலீட்டுத் திட்டங்கள், பங்கு சார்ந்த முதலீட்டுத் திட்டங்கள், நீண்ட கால வைப்புத் திட்டங்கள் மற்றும் பொது சேமநல நிதித் திட்டங்கள் போன்றவற்றில் ரூ.1.50 லட்சம் வரையிலும் முதலீடு செய்தற்காக கொண்டுவரப்பட்டதாகும்.
வருமானம் இரட்டிப்பாகும்
ELSS வகையான முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்தால் குறைந்த பட்சம் 3 வருடங்களுக்கு நம்முடைய பணத்தை திரும்ப எடுக்க முடியாது. இதில் நாம் செய்யும் முதலீடுகள் அனைத்தும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படும் என்பதால் வருவாயும் அபரிமிதமானதாக இருக்கும், கூடவே ஆபத்தும் அதிகம். நம்முடைய நேரம் நல்ல நேரமாக இருக்கும் பட்சத்தில், இதில் கிடைக்கும் வருமானம் நம்முடைய முதலீட்டை விட இரட்டிப்பாகவும் ஆக வாய்ப்பு உள்ளது.
பிக்சட் டெபாசிட்
அனைத்து வங்கிகளிலும் நீண்டகால வைப்பு நிதித் திட்டங்களை நடத்தி வருகின்றன. இந்த வகையான வைப்பு நிதித் திட்டங்களில் முதலீடு செய்த பணத்தை 5 வருடங்கள் வரையிலும் தொட முடியாது. இந்த வைப்பு நிதித் திட்டங்களுக்கு பெரும்பாலான வங்கிகள் 6 முதல் 7 சதவிகிதம் வரையிலும் வட்டி அளிக்கின்றன. ஆனாலும் முதலுக்கு மோசம் வராது.
பொது சேமநல நிதித் திட்டம் (Public Provident Scheme)
பொது சேமநல நிதித் திட்டங்களில் நாம் முதலீடு செய்தால் அந்தப் பணத்தை குறைந்தது 15 வருடங்களுக் கண்ணால் பார்க்க முடியாது. 15 வருட லாக்-இன்-பீரியட்(Lock in period) முடிந்த பின்பே அறுவடை செய்ய முடியும். இதற்கு கிடைக்கும் வட்டி 8 சதவிகிதம் மட்டுமே. ஆனாலும் போட்ட முதலுக்கு பாதகமில்லை. 80சி பிரிவின் கீழ் இந்த திட்டத்திலும் முதலீடு செய்யலாம்.
செல்வ மகள் சேமிப்புத்திட்டம்
இத்திட்டங்களை பெண் குழந்தைகளின் பெயர்களில் மட்டுமே தொடங்க முடியும். இந்த திட்டங்களை வங்கிகளும் தபால் நிலையங்களும் கையாண்டு வருகின்றன. பெண் குழந்தைகளுக்கும் அவர்களின் மேற்படிப்பு, திருமணம் போன்றவற்றை எதிர்கொள்வதற்கும் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டங்களில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு 8.5 சதவிகிதம் வட்டி வழங்கப்படும்.
லைப் இன்சூரன்ஸ் பாலிசி
80சி பிரிவின் கீழ் வரி சேமிப்பு மேற்கொள்பவர்கள் முதலில் தேர்வு செய்வுது லைப் இன்சூரன்ஸ் பாலிசிதான். 80சி பிரிவின் கீழ் வரி சேமிப்புக்காக தனக்காகவும், தன்னுடைய மனைவு, குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்காகவும் (சில வரையறைகளுக்கு உட்பட்டு) இதில் முதலீடு செய்யலாம். இதில் செய்யப்படும் பாலிசி தொகையானது இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், பாலிசிக்காக நாம் செலுத்தும் பிரீமியம் (Premium) நம்முடைய பாலிசி தொகையில் 10 சதவிகிதமாக இருக்கவேண்டியது கட்டாயம்.
வீட்டுக்கடன் தவணை
80சி பிரிவினை முழுமையாக பயன்படுத்த நினைப்பவர்களின் முதல் சாய்ஸ் வீட்டுக்கடன் தான். வீட்டுக்கடன் தவணை செலுத்தும்போது, தவணைத் தொகையில் வட்டியை வருமான வரிச்சட்டத்தின் 24வது கீழ் கொண்டுவருவது போல பிரின்சிபல் தொகையில் ரூ.1.5 லட்சம் வரையிலும் 80சி பிரிவின் கீழ் கொண்டுவந்து வருமான வரி விலக்கு பெற முடியும்.
வருமான வரி சேமிப்பு
வருமான வரி செலுத்துபவர்கள் மேற்கண்ட அனைத்து முதலீட்டு அம்சங்களையும் ஆராய்ந்து பார்த்து தங்களின் முதலீட்டு ஆலோசகர்களின் உதவியுடன் 80சி பிரிவின் கீழ் முதலீடு செய்தால் அவர்களின் முதலீடு பாதுகாப்பான முதலீடாக இருக்கும். அதை விட்டு விட்டு செய்தித் தாள்களில் வரும் விளம்பரங்களைப் பார்த்து பேராசைப்பட்டு கண்ட கண்ட முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்தால் பணம் அம்போதான். எனவே முதலீட்டில் கவனம் தேவை.