டெல்லி: 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அனைத்து வீடுகள், நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மின் இணைப்புகளுக்கும் ப்ரீபெய்டு மின் மீட்டர்கள் கட்டாயம் பொருத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுபோன்று ப்ரீபெய்டு மின் மீட்டர்கள் பொருத்துவதனால் மின்விநியோக நிறுவனங்களுக்கு முன்கூட்டியே வருவாய் வரும் என்பதாலும், இதன்மூலம் மின்திருட்டை வெகுவாக குறைத்துவிடலாம் என்பது மத்திய அரசின் திட்டம்
இந்த அதிரடி திட்டத்தினால் மின் கட்டண பில் குளறுபடிகள், திருட்டு ஆகியவற்றை தடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. நாடுமுழுவதும் இந்தத் திட்டம் அறிமுகமாகிறது. மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்வது போல மின்கட்டணத்தையும் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இதனால் ரீசார்ஜ் செய்யப்பட்டவரை பயன்படுத்தியபின் மீண்டும் ரீசார்ஜ் செய்தால்தான் கரண்ட் வரும்.
இந்தத் திட்டம் நிச்சயம் மின்சாரம் திருடுபவர்களுக்கு மிகப் பெரிய 'ஷாக்' அடிக்கும். இந்தப் புதிய ப்ரீபெய்டு ஸ்மார்ட் மீட்டர்கள் அன்றாடம் ஒருவர் பயன்படுத்தும் மின் அளவு, எந்த நேரத்தில் அதிகமாக செலவாகிறது என்ற விவரத்தை தெரியப்படுத்தும். இதை வைத்து நுகர்வோர் தங்களது பயன்பாட்டை சிக்கனமாக்க திட்டமிடும் வாய்ப்பும் உள்ளது.
Also Read | "மீண்டும் இந்தியாவை ஏமாற்றிய சீனா" சீனாவால் ரூ. 4 லட்சம் கோடி அந்நிய செலாவணி போச்சா..?
மத்திய அரசு அதிரடி
ப்ரீபெய்டு திட்டத்தின் மூலம் நாம் மின் கட்டணம் செலுத்துவதால், தேவையற்ற அலைச்சல், கால விரயம், மின் இணைப்பு துண்டிப்பு அபாயம் போன்ற நடைமுறை சிக்கல்கள் எழுவது தவிர்க்கப்படுகிறது. கூடவே அரசுக்கு முன்கூட்டியே வருமானமும் கிடைக்கும் என்பதால் இத்திட்டத்தை வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமல்படுத்த மத்திய அரசு தீவிர முயற்சி எடுத்துவருகிறது. ப்ரீபெய்டு திட்டத்தில் மின்சார மீட்டர் பொருத்தும்போது வாடிக்கையாளர்கள் தாங்கள் எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தி இருக்கிறார்களோ அதற்கு உரிய கட்டணத்தை மட்டுமே செலுத்துவதால், தவிர்க்க முடியாக காரணங்களினால் வெளியூர் செல்ல நேரிட்டால் கூட, மின் கட்டணத்தை முன்கூட்டியே செலுத்திவிட முடியும்.
மின்சாரக் கட்டணம்
தற்போது நாம் பயன்படுத்தும் மின்சார மீட்டர்களில், இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே மின் கட்டணத்தை செலுத்தமுடியும். முதலில் மின்சார வாரியத்தில் இருந்து நம்முடைய வீட்டிற்கு ஆட்களை அனுப்பி இரண்டு மாத காலத்தில் உபயோகித்த மின்சாரத்தின் அளவை கணக்கிட வேண்டும். பின்னர் அதனை கம்ப்யூட்டரில் பதிவேற்றி குறிப்பிட்ட காலக் கெடுவிற்குள் மின் கட்டணத்தை செலுத்தவேண்டும் என்பது மின்சார வாரியத்தின் நடைமுறை.
ப்ரீபெய்டு மின்சார மீட்டர்
குறிப்பிட்ட காலக் கெடுவிற்குள் மின்சார கட்டணத்தை நாம் கட்டவில்லை என்றால், உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்படும் அபாயமும் உள்ளது. பின்னர் திரும்பவும் மின் இணைப்பு பெற மின்சார வாரிய அலுவலகத்திற்கு நடையாய் நடந்து அலைந்து திரிந்து, அதன்பிறகு தான் திரும்பவும் மின் இணைப்பு பெறமுடியும். அலுவலகங்களில் பணியாற்றும் நபர்களுக்கு இது ஒரு பெரிய இடைஞ்சலாகும். இதற்காகவே அலுவலகத்திற்கு ஒருநாள் விடுமுறைகூட எடுக்க நேரிடும். அப்போது அவர்கள் மனதில் நினைப்பது, என்னடா இது, பெரிய ரோதனை, இதற்கு பேசாமல் மொபைல் ப்ரீபெய்டு ரீசார்ஜ் செய்வது போல இதற்கும் ப்ரீபெய்டு மின் கட்டண வசதி இருந்தால் எப்போது தேவையோ அப்போது மட்டுமே மின்சார கட்டணத்தை கட்டி தொலைக்கலாம் என்பது தான்.
நாடு முழுவதும் மின் மீட்டர்கள்
பொதுமக்கள் நினைப்பதை செயல்படுத்த தற்போது மத்திய அரசும் முன்வந்துள்ளது. தேவைப்படும்போது மின்சார கட்டணம் செலுத்த தேவையான ப்ரீபெய்டு மின்சார மீட்டர்களை நாடு முழுவதும் பொருத்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தை வரும் 2019-20ஆம் நிதியாண்டு முதல் செயல்படுத்த மத்திய அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. இதற்கான ப்ரீபெய்டு மின்சார மீட்டர்களை வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும் பொருத்தும் பணிகள் நடைபெறும் எனத் தெரிகிறது. ப்ரீபெய்டு மின்சார மீட்டர்களை பொருத்திவிட்டால், வாடிக்கையாளர்கள் தாங்கள் உபயோகித்த மின்சார அளவு(Unit) வரையில் கணக்கிட்டு முன்கூட்டியே மின் கட்டணத்தை செலுத்திவிட முடியும். கால தாமதத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்படும் அபாயமும் கிடையாது.
மின்சார செலவுக்கு பணம்
ப்ரீபெய்டு மின்கட்டணத் திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் கட்டணத்தை முன்கூட்டியே செலுத்தி விடுவதால் மின்சார வாரியம் வாடிக்கையாளர்களுக்கு மின்சேவை வழங்குவதற்கு முன்பே முன்கூட்டியே பணமும் வந்துவிடுகிறது. இதற்காக ஆட்களை அனுப்பி எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தி உள்ளனர் என்பதை குறித்து வைத்து அதை பராமரிக்க வேண்டிய அவசியமும் இல்லாமல் போய்விடும். இதனால் கால விரயம் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது.
மின்சார பயன்பாடு
ப்ரீபெய்டு மின்சார மீட்டர் பொருத்தப்பட்டால் மொபைல் ஃபோன்களுக்கு நாம் தேவைக்கு ஏற்ப ரீசார்ஜ் செய்வது போன்று தேவையான அளவிற்கு மட்டும் கட்டணத்தைச் செலுத்தி மின்சாரப் பயன்பாட்டைக் குறைக்கலாம். அது மட்டுமில்லாமல் எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தியுள்ளோம் என்ற தரவுகளையும் துல்லியமாக பராமரித்து கண்காணிக்கவும் முடியும். கூடவே ஒவ்வொரு மாதமும் குறைந்த பட்ச கட்டணத்தை செலுத்தவேண்டும் என்ற கட்டாயமும் இருக்காது.
ஊழியர்களின் எண்ணிக்கை குறையும்
ப்ரீபெய்டு மின்சார மீட்டர்கள் பொருத்தப்பட்டால், மின் தேவை குறையும் என்பது ஒரு பக்கம் என்றால், மறுபக்கம் மின்சார வாரியத்தால் மின் அளவீட்டு கட்டண கணக்கெடுப்பு மற்றும் வசூல் போன்றவற்றுக்கு ஊழியர்கள் நேரத்தைச் செலவிடுவதைத் தவிர்த்து சேவையைச் சிறப்பாக வழங்குவதில் கூடுதல் கவனம் செலுத்த முடியும் என்று மத்திய அரசு அதிகாரிகள் கூறுகிறார்கள். ஆனால் அதே நேரத்தில், மின்சார வாரியத்தில் ஊழியர்கள் எண்ணிக்கை குறைக்கப்படும், பணி நீக்கம் அல்லது விருப்பு ஓய்வு அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக மின்சார வாரிய ஊழியர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்