பதஞ்சலி நாம் காலையில் பல் விளக்க பயன்படுத்தும் பேஸ்ட் தொடங்கி சமையல் எண்ணெய் வரை அனைத்தையும் தயாரிக்கத் தொடங்கிவிட்டார்கள். FMCG என்றழைக்கப்படும் நுகர் பொருள் துறையில் அழுத்தமாக கால் பதித்துவிட்டார்கள் என்பது நமக்குத் தெரியும்.
ஆனால் இத்தனை ஆழமாக, பதஞ்சலியின் தலைவர் இந்தியாவின் டாப் பணக்காரர்களில் ஒருவராக வளம் வரும் அளவுக்கு அவர்கள் வளர்ந்துவிட்டார்கள் என்பது இப்போது தான் தெரிய வந்திருக்கிறது. இந்தியா முழுமைக்கும் தன் பக்த கோடிகளை வைத்துக் கொண்டு அதிக சிரமம் இல்லாமல் பதஞ்சலி நிறுவன பொருட்களை விற்றும் வருகிறார்கள்..
இன்று பெரிய பெரிய பிராண்டெட் கம்பெனிகளுக்கு தனி அவுட் லெட் இருப்பது போல, பதஞ்சலி நிறுவன பொருட்களுக்கும் இந்த்யாவின் மெட்ரோ நகரங்கள் தொடங்கி டயர் 3 நகரங்களை வரை அவுட் லெட்டுகள் இருக்கின்றன. அதில் விற்பனையும் ஆகின்றன.
ஆச்சார்யா பால்கிருஷ்ணா
நேபாளத்தில் பிறந்து இன்று ஹரித்வாரில் பாபா ராம்தேவின் ஆஸ்தான சீடராக பதஞ்சலி நிறுவனத்தின் தலைவராக வலம் வருகிறார். இதுவரை 31 பேட்டண்டுகளையும் (Patent) வாங்கி இருக்கிறாராம். எல்லாம் மருத்துவம் தொடர்பாகவாம். 100-க்கும் மேற்பட்ட மருத்துவம் தொடர்பான ஆராய்ச்சிக் கட்டுரைகளை உலகின் பல மருத்துவ பத்திரிகைகளில் வெளியிட்டு இருக்கிறார்களாம்.
இந்தியாவில் 15-வது இடம்
இந்தியாவின் டாப் 20 பணக்காரர்கள் பட்டியலில் இந்த சாமியார் சுமார் 35,000 கோடி ரூபாய் சொத்துக்களுடன் 15-வது இடத்தில் இருக்கிறார். இதில் ஆச்சர்யமான விஷயம் என்ன தெரியுமா..? பிசினஸ் செய்வதாகவே சொல்லி ராப் பகலாக பிசினஸ் செய்யும் பஜாஜ் நிறுவனத்தின் ராகுல் பஜாஜ், ரியல் எஸ்டேட் துறையில் பல சாதனைகளைப் படைத்து ரியாலிட்டி துறையில் தன் பிசினஸ் சாம்ராஜ்யத்தை கட்டமைத்த குஷல் பல் சிங் போன்றவர்கள் எல்லாம் கூட நம் பதஞ்சலி பால் கிருஷ்ணாவுக்குப் பின் தான்.
உலக அளவில்
இந்தியாவின் டாப் பணக்காரர்கள் பட்டியலில் நம் சாமியார் பால் கிருஷ்ணாவுக்கு 15-வது இடம் என்றால், உலக அளவில் 365-வது இடத்தில் இருக்கிறாராம். இதை சக பணக்காரர்களும் கொஞ்சம் பெருமூச்சு விட்டுப் பார்க்கிறார்களாம். காரணம் சாமி, பேய் பிசாசு, புண்ணியம், பாவங்களைச் சொல்லியே வியாபாரம் செய்துவிடுகிறார்கள் என ஆதாரங்களோடு பேசுகிறார்கள் கடின உழைப்பில் காசு பார்க்கும் சக பில்லியனர்கள்.
எப்படி..?
இந்த மருத்துவ சாமியார் தான் பதஞ்சலி நிறுவனத்தின் 98.6% பங்குகளை வைத்திருக்கிறாராம். அதனால் தான் இந்த அளவுக்கு சொத்துக்கள் அதிகமாக இருக்கிறதாம். தற்போது ஆண்டுக்கு சுமார் 11,200 கோடி ரூபாய் வரை பதஞ்சலி நிறுவன பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதாம். இதையும் ஃபோர்ப்ஸ் நிறுவனம் அவர்களின் சோர்ஸ்கள் வழியாக கண்டு பிடித்துச் சொல்லி இருக்கிறார்கள்.
அமேஸான் உடன் ஒப்பந்தமா..?
ஆனால் இன்று சந்தையில் அதிகரித்திருக்கும் அழுத்தம் மற்றும் போட்டி போன்றவைகளைக் காரணம் காட்டி அமேஸான் நிறுவனத்துடன் ஆன்லைனில் பதஞ்சலியின் பொருட்களை விற்பனை செய்ய ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறது. ஆக வெளிநாட்டு நிறுவனத்தை விரட்ட வேண்டும் என்றால் கூட வெளிநாட்டு நிறுவனத்தின் உதவி வேண்டும் தானே..? என சமூக வலைதளங்களில் சில கருத்துக்கள் வந்த வண்ணமே இருக்கின்றன.
நாங்கள் இல்லை
இதை எல்லாம் பாபா ராம்தேவிடம் கேட்டால் "பதஞ்சலி நிறுவனப் பொருட்களை நாங்கள் உள்நாட்டினருக்கு எங்கள் அவுட் லெட்டுகள் வழியாக மட்டுமே விற்கிறோம். எங்களிடம் மொத்த விலைக்கு வாங்கும் சில டீலர்கள் தான் பதஞ்சலி பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்கிறார்கள். ஆக பதஞ்சலி நிறுவனம் அமேஸானோடு எந்த ஒரு ஒப்பந்தமும் செய்து கொள்லவில்லை" என சமாளித்திருக்கிறார்.
அடுத்த அம்பானி தானா
சமீபத்தில் தான் பதஞ்சலி ஜூன்ஸ் பேண்டுகளை எல்லாம் கொண்டு வருவதாக அறிவித்தது இப்படியே விரிவாக்கம் செய்து கொண்டே போனால் அடுத்த சில வருடங்களில் இந்தியாவின் டாப் 5 பணக்காரர்களில் ஒருவராக கூட வளம் வர வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள் சர்வதேச பிசினஸ் மதிப்பீட்டு நிறுவனங்கள். பிறகு என்ன அம்பானி தான் அடுத்த டார்கெட்டா பாபாஜி..?