சுவிட்சர்லாந்தில் கிம்மெல்வல்ட் (Gimmelwald) என்கிற பகுதியில் ஒரு கடை இருக்கிறது. இந்த கடையில் கண்காணிப்புப் கேமராக்களோ, கடைக்காரர்களோ, ஆட்களோ இருக்க மாட்டார்கள்.
நேரே உள்ளே சென்று தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு கல்லாபோட்டியில் நாமே பணத்தை வைத்துவிட்டு வரலாம். யாரும் எடுத்த பொருட்களுக்கு எல்லாம் காசு வைத்து விட்டாரா என எல்லாம் சோதனை செய்ய மாட்டார்கள்.
இதுவரை பொருட்கள் திருட்டு அல்லது பணத்திருட்டு அந்த கடையில் நடந்ததே இல்லை என்பது தான் ஆச்சர்யம். அதனால் தான் அதை சுவிட்சர்லாந்து மக்கள் ஹானஸ்டி ஷாப் (Honesty Shop) நேர்மைக் கடை என அழைக்கிறார்கள். இப்படி எல்லாம் இந்தியாவில் வைத்தால்...?
தமிழ் சினிமா
நாலு போலிஸும் நல்லா இருந்த ஊரும் என்கிற தமிழ் சினிமாவில் 2 நாட்களுக்கு மேல் தங்கச் செயின் இருக்கும் இடத்திலேயே கிடப்பது, மளிகை கடைக்காரரின் நேர்மை என சுவிட்சர்லாந்தின் கடை அமைப்பையே ஒரு கிராமமாக பார்த்தது போல இருக்கும். ஆனால் அப்படி உண்மையாக ஒரு கடை இந்தியாவில் இருந்தால்...? இருக்கிறதே..!
கேரளத்தில்
கேரளாவில் கண்ணூர் மாவட்டத்தில் ஆழிக்கோடு எனும் தாலுகாவில் இருக்கும் வன்குளத்துவாயல் என்கிற கிராமத்தில் அப்படி ஒரு கடை இருக்கிறது. இதை இந்தியாவின் Gimmelwald-எனவும் மலையாளிகள் செல்லமாக அழைக்கத் தொடங்கி இருக்கிறார்கள். மேலே இந்த நேர்மைக் கடையை வர்ணிக்கப்பட்டது போலவே இந்த கடைகளிலும் யாரும் இருக்க மாட்டார்கள். காலையில் கடை திறப்பார்கள். மாலை இருட்டிய பின் கடையை மூடி விடுவார்கள். வாரம் ஒரு முறை அல்லது 10 நாட்களுக்கு ஒரு முறை தான் கணக்கு சரி பார்ப்பார்களாம்.
இல்லவே இல்லை..!
இந்த கடையை கடந்த ஜனவரி 01, 2019-ல் திறந்து இருக்கிறார்கள். இதுவரை ஒரு ரூபாய்க்கு கூட கணக்கு இடித்ததில்லையாம். 10,000 ரூபாய்க்கு சரக்கு இல்லை என்றால் அது அப்படியே பணமாக இருக்குமாம். அத்தனை மகிழ்வோடு சொல்கிறார்கள். வன்குளத்துவாயல் கிராமத்தினர்கள்.
எந்த அமைப்பு
ஜனசக்தி அறக்கட்டளை என்னும் என்ஜிஓ இந்தக் கடையை நிர்வகித்து வருகிறது. இந்த அமைப்பைச் சேர்ந்த சுகுணன் நமக்கு விளக்குகிறார். "இப்போது கடை இருக்கும் இடத்தில் மக்களுக்குக் கல்வி கற்பித்துக் கொண்டிருந்தோம். அதன் பின் தன்னார்வலர்கள் மூலம் வயதானவர்களுக்கும் நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் மருந்து வாங்கிக் கொடுக்கும் இடமாக இருந்தது. அப்படி ஒரு நபருக்கு மருந்து வாங்க சுமார் 1,000 ரூபாயாவது தேவைப்பட்டது. அந்த வயதானவர்கள் மற்றும் நோய்ப்பட்டவர்களுக்குள்ளும் ஒரு சின்ன திறமை ஒளிந்து இருந்தது. அவர்களால் சில கை வேலைகள் செய்ய முடிந்தது. வித்தியாசமான, அழகிய வடிவங்களில் சோப்களை தயாரிப்பது, அழகு சாதனப் பவுடர்களை உருவாக்குவது என ஒரு நல்ல திறமையை பார்கக் முடிந்தது..
கடையான கதை
"ஆனால் அவர்கள் உற்பத்தி செய்யும் நல்ல பொருட்களை, சாதாரண மக்கள் பயன்படுத்தும் தரமான பொருட்களை முறையாக விற்க முடியவில்லை. ஆக இத்தனை நாட்கள் பல வேலைகளுக்கு பயன்படுத்தி வந்த இந்த இடத்தைக் கடையாக போட்டு விற்கத் தொடங்கினோம். அப்படித் தான் இந்த கடை உருவானது" எனச் சிரிக்கிறார் சுகுணன்.
அதான எல்லாம்..!
"இந்தக் கிராமத்தில் உள்ள பெரியவர்கள் முதல் நேற்று பிறந்த குழந்தைகள் வரை இருக்கும் 1500 பேரையும் நன்றாகத் தெரியும். அவர்களை நம்பினோம் விற்பனைக்காக மட்டும் அல்ல. அவர்களின் நேர்மைக்காகவும். அதனால் கடைக்காரர் அல்லது காவலர்களை நியமிப்பது குறித்து யோசிக்கவே இல்லை. இன்று வரை எல்லாம் ஓகே என்கிறார்கள் ஜனசக்தி அமைப்பினர்கள். காய்கறி வியாபாரி சதானந்தன் தான் தினந்தோறும் காலையில் கடையைத் திறந்து, மாலையில் மூடுகிறார். இது மட்டும் தான் இவர் வேலை." என்கிறார்கள் ஜனசக்தி அமைப்பினர்கள்.
யார் எல்லாம்
"இந்த திட்டத்தின் முதல் படியாக இப்போதைக்கு சக்கர நாற்காலியில் இருப்போர் மற்றும் நடக்க முடியாத சிலரின் பொருட்களை மட்டும் விற்பனை செய்கிறோம். வளைகுடா நாடுகளில் பணியாற்றி முதுகு உடைந்து நாடு திரும்பி தன் வாழ்கையை இழந்த கலீல், பிறந்ததில் இருந்தே நடக்க முடியாமல் இருக்கும் சுபைதா, சக்கர நாற்காலியில் வாழ்க்கையை நகர்த்தும் சுகுமாரன், கால்பந்து விளையாட்டில் காயம் பட்ட வினோத் மற்றும் ஸ்ரேயா இல்லத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சிலரின் பொருட்களை இப்போது விற்று வருகிறோம். இனி கொஞ்சம் கொஞ்சமா இவர்களைப் போன்ற திறனாளிகளைத் தேடிப் பிடித்து விற்பனையை அதிகரிக்கலாம் எனவும் ஒரு யோசனை இருக்கிறது பார்ப்போம்" என்கிறார் சுகுணன்.
என்ன பொருட்கள்
சோப்புகள், சலவை பொடிகள், சட்டைகள், மெழுகுவர்த்திகள், தேங்காய் ஓடு ஸ்பூன்கள் என பல கைவினைப் பொருட்களை விற்பனை செய்கிறார்கள். கடை தொடங்கிய சில நாட்களில் புதிதாக முயற்சி செய்யும் விதத்தில் பல மக்களும் ஆர்வமாக வந்து பொருட்களை வாங்கினார்கள். ஜனவரி மாதங்களில் ஒரு நாளுக்கு சுமார் 1000 ரூபாய்க்கு விற்பனை ஆனது. இப்போது சராசரியாக நாள் ஒன்றுக்கு 750 ரூபாய் வரை வியாபாரம் நடக்கிறது.
சரி பார்ப்புகள்
10 நாட்களுக்கு ஒருமுறை அல்லது வாரம் ஒரு முறை மட்டுமே பணத்தை எடுத்துவருவோம். இதுவரை மக்கள் அன்பினாலும் அவர்கள் நேர்மையாலும் ஒரு ரூபாய் கூட திருடு போனதில்லை. எங்களுக்கும் கணக்கு இடித்ததில்லை. சொல்லப்போனால் 5 ரூபாயோ, 10 ரூபாயோ விற்பனையான பொருட்களை விட அதிகமாகத்தான் கிடைத்து வருகிறது'' என்று நெகிழ்ச்சியுடன் பகிர்கிறார் சுகுணன்.
ஒரு வரி
"இந்த மனித உலகமே அன்பினாலும் நல்ல குணங்களாலும் நிறைந்தது. ஒரு மனிதன் இன்னொரு மனிதனின் அன்பை மதித்தாலே உலகின் எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு வந்துவிடும்." என ஒரு எழுத்தாளன் சொன்னது நினைவுக்கு வருகிறது. வாழ்த்துக்கள் சேட்டாஸ்.