டெல்லி: நடப்பு நிதியாண்டுக்கான நிதிப் பற்றாக்குறை இலக்கு கட்டுக்குள் வைக்கப்படும் என்று மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
2018-19 நிதி ஆண்டுக்கான நிதிப் பற்றாக்குறை இலக்கை அரசு எட்டுமென பொருளாதார விவகாரத் துறை செயலர் சுபாஷ் சந்திர கார்க் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அரசின் வரி வருவாய் குறைவாக இருந்தாலும், அதை ஈடுசெய்யும் வகையில் செலவுகள் குறைக்கப்படும். நேரடி வரி வருவாயில் குறைபாடு இருக்கும் என்று தெரிகிறது. அதேநேரம் செலவுகளில் குறிப்பிட்ட அளவைச் சேமிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
2019-20 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் கூட்டத்தில் நடப்பு நிதி ஆண்டில் நிதிப் பற்றாக்குறை இலக்கு 3.4 சதவிகிதமாக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அரசு வருவாய் இந்த நிதி ஆண்டில் குறைவாக உள்ள நிலையில் நிதிப் பற்றாக்குறை நிர்ணயிக்கப்பட்ட இலக்கைத் தாண்டியே இருக்கும் என்ற அச்சம் நிலவியது.
வரி வருவாய் குறைவு
செய்தியாளர்களிடம் பேசிய சுபாஷ் சந்திர கார்க், நடப்பு நிதி ஆண்டுக்கான நிதிப் பற்றாக்குறை இலக்கு 3.4 சதவிகிதத்துக்குள் இருக்கும்படி கட்டுக்குள் வைக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த நிதி ஆண்டில் நேரடி வரி வருவாய் ரூ. 12 லட்சம் கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறைமுக வரியான ஜிஎஸ்டி வருவாய் ரூ.7.43 லட்சம் கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரூ. 6.43 லட்சம் கோடி மட்டுமே வருவாய் கிடைத்துள்ளது.
நிதிப்பற்றாக்குறை
அரசின் வரி வருவாய் குறைந்துள்ள நிலையில் இதன் மூலம் நிதிப் பற்றாக்குறையை 3.4 சதவிகிதத்துக்கு மிகாமல் பார்த்துக்கொள்ள திட்டமிடப்பட்டது. எனவே, நிதிப் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்த செலவினங்களை அரசு குறைத்துக்கொண்டுள்ளது. இதன் மூலம் நிதிப் பற்றாக்குறையை இலக்குக்குள் வைக்க முடியும் என நம்பிக்கை உள்ளது என்றார்.
இலக்கு நிர்ணயம்
நடப்பு நிதியாண்டில் மொத்தம் ரூ.12 லட்சம் கோடி நேரடி வரியாக வசூலிக்கப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ரூ.11.50 லட்சம் கோடியை வசூலிக்கவே இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் ரூ.7.43 லட்சம் கோடி வசூலிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருந்த நிலையில் ரூ.6.43 லட்சம் கோடி மட்டுமே வசூலாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மறைமுக வரி வருவாயைப் பொறுத்தவரையில், ரூ.1.30 லட்சம் கோடி வசூலாகும் என்று மதிப்பிடப்படுகிறது.
நடப்பாண்டு பற்றாக்குறை
ஜனவரி மாத இறுதியில் இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை 121.5 சதவிகிதத்தைத் தாண்டியிருந்த நிலையில் இலக்கை அடைந்துவிடலாம் என மத்திய அரசு தற்போது உறுதியளித்துள்ளது. கடந்த இரண்டு நிதி ஆண்டுகளில் பற்றாக்குறை இலக்கை எட்டுவதில் சற்று ஏற்ற இறக்க நிலை காணப்பட்டது. ஆனாலும் அவை வளர்ச்சிப் பாதையை எந்தவகையிலும் பாதிப்பதாக அமையவில்லை. அந்த வகையில் நடப்பாண்டில் பற்றாக்குறை 3.3 சதவிகித அளவுக்கு இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
இடைவெளி குறையும்
இடைக்கால பட்ஜெட்டில் 2019-20-ம் நிதி ஆண்டில் பற்றாக்குறை 3.4 சதவிகிதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அரசின் வரவு மற்றும் செலவுகளுக்கிடையிலான இடைவெளியைக் குறைப்பதற்கான நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது. 2020-21-ம் ஆண்டில் 3 சதவிகிதத்தை எட்டி முதன்மைபற்றாக்குறையை போக்க திட்டமிட்டுள்ளது. முதன்மை பற்றாக்குறை என்பது நிதிப் பற்றாக்குறை தொகைக்கு அளிக்கப்படும் வட்டி தொகையை கழித்தது போக மீதமுள்ள தொகையாகும்.
கடன்களை திரும்ப செலுத்த முடிவு
அந்த வகையில் 2018-19 ஆம் ஆண்டில்முதன்மை பற்றாக்குறை ரூ. 48,481 கோடி. இது ஜிடிபியில் 0.3 சதவிகிதமாகும். திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி முதன்மை பற்றாக்குறை ரூ. 46,828 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது ஜிடிபியில் 0.2 சதவிகிதமாகும்.
இதன்படி 2020-21 மற்றும் 2021-22ஆம் நிதி ஆண்டில் முதன்மை பற்றாக்குறை பூஜ்ஜியமாக இருக்கும் என்று பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
முதன்மை பற்றாக்குறையை குறைப்பது என்பது நல்ல அறிகுறியாகும். பெறப்பட்ட கடன் தொகை மூலம் ஏற்கெனவே உள்ள கடன்களை திரும்ப செலுத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது.