சென்னை: தஞ்சாவூர் மாவட்டத்தின் பாரம்பரிய புகழ்பெற்ற திருபுவனம் பட்டு சேலைக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்துள்ளது. நீண்ட சட்டப் போராட்டத்திற்கு பின்பு திருபுவனம் பட்டு சேலைகளுக்கு மத்திய அரசின் அங்கீகாரம் கிடைத்துள்ளதால், இனிமேல் திருபுவனம் கைத்தறி பட்டு நெசவாளர்களைத் தவிர யாரும் நேரடியாகவோ இணையதளம் வாயிலாகவோ திருபுவனம் பட்டு சேலைகளை போலியாக விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும்.
பாரம்பரிய பெருமையும் புகழும் பெற்ற திருபுவனம் கைத்தறி நெசவு பட்டு சேலைகளுக்கு மத்திய அரசு உரிய அங்கீகாரம் அளிக்கவேண்டும் என்று கைத்தறி நெசவாளர்கள் நீண்டகாலமாகவே கோரிக்கை விடுத்த வண்ணம் இருந்தனர். இதற்கு காரணம் சில மோசடி விற்பனையாளர்கள் தரமற்ற பட்டு சேலைகளை பிற ஊர்களில் நெய்து அதற்கு திருபுவனம் பட்டு சேலைகள் என்று சொல்லி பிற ஊர்களிலும், இணையதள மூலமாகவும் விற்று கொள்ளை லாபம் பார்த்து வந்தனர்.
நலிந்த கைத்தறி பட்டு நெசவாளர்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றும் வகையில் இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளதால், அவர்களும் சர்வதேச சந்தையில் போட்டி போடும் வகையில் மேலும் கூடுதல் தரத்தில் கைத்தறி பட்டு சேலைகளை உருவாக்குவதில் அதீத அக்கரை காட்ட முடியும்.
தமிழர்களின் பாரம்பரியம்
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்த குடிகள் என்பது பழங்காலத்தில் இருந்தே தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரத்தை கூறும் முதுமொழி. அன்றைய காலம் தொட்டே தமிழர்கள் சிற்பக்கலை, கைத்தறி நெசவுத் தொழில்களில் முன்னோடிகளாக இருந்து வருகின்றனர். தமிழர்களின் சிற்பக் கலையை பறைசாற்றும் விதமாக மாமன்னர் ராஜராஜசோழன் கட்டிய தஞ்சை பெருவுடையார் கோவில் இன்றைக்கும் கம்பீரமாக நிற்பதே அதற்கு சான்று.
கலை நயம் மிக்க கைத்தறி பட்டு சேலைகள்
சிற்பக்கலையைப் போலவே, தமிழர்கள் கைத்தறி நெசவுத் தொழிலிளும் சிறந்து விளங்குவதற்கு சான்றாக இருப்பது திருபுவனம் பட்டு சேலைகள், காஞ்சிபுரம், ஆரணி, பட்டு சேலைகள் தான். அதிலும் திருபுவனம் பட்டு சேலைகள் சுமார் 1000 ஆண்டுகளாக பழமை மாறாமல் அதே நேர்த்தியுடனும் கலை நயத்துடனும் தரத்துடனும் நெய்யப்பட்டு வருவதால் தான் இன்றும் அதற்கு மதிப்பு உள்ளது.
ஐயாயிரம் ஆண்டு பழமை
மத்திய கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சரால் நிறுவப்பட்ட அகில இந்திய கைப்பணிக் கழகம் வெளியிட்ட இந்திய அச்சுப் புடவைகள் என்ற நூலில் ‘ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மொகஞ்சதாரோவில் காணப்படும் அழகிய ஆடைகளைக் கொண்டு தமிழகத்தில் மிகத்தொன்மையான காலத்திலே அரும்பி மிகச் சீரும் சிறப்புமாய் வளர்ந்துள்ளது' என்று திட்டவட்டமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
திருபுவனம் என்ற பெயர் ஏன் வந்தது
சோழர்களின் கடைசிப் பேரரசரான மூன்றாம் குழோத்துங்க சோழன் தனக்கு மூவுலக சக்கரவர்த்தி எனப்பொருள்படும் திரிபுவன சச்சரவர்த்தி என்ற பட்டத்தை சூட்டிக்கொண்டான். இதற்காக தனது பெயரில் கும்பகோணத்திற்கு கிழக்கே 5 மைல் தொலைவில் ஒரு ஊரை நிர்மாணித்தான். அதுதான் திருபுவனம் ஆகும்.
தைத்தறி பட்டு சேலை விற்பனையில் சாதனை
திருபுவனத்தில் சுமார் 1000 ஆண்டுகளாகவே கைத்தறி பட்டு நெசவு தொழில் நடந்து வருகிறது. இங்குள்ள திகோ சில்க்ஸ் என்றழைக்கப்படும் திருபுவனம் பட்டு நெசவாளர் கூட்டுறவு சங்கம் தான் இந்தியாவில் கைத்தறி நெசவு பட்டு சேலைகளை அதிக அளவில் விற்பனை செய்யும் கூட்டுறவு சங்கமாகும். நடப்பு 2018ஆம் ஆண்டில் மட்டும் 34 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.
மோசடி விற்பனை
இவ்வளவு பாரம்பரிய பெருமையும் புகழும் பெற்ற திருபுவனம் கைத்தறி நெசவு பட்டு சேலைகளுக்கு மத்திய அரசு உரிய அங்கீகாரம் அளிக்கவேண்டும் என்று கைத்தறி நெசவாளர்கள் நீண்டகாலமாகவே கோரிக்கை விடுத்த வண்ணம் இருந்தனர். இதற்கு காரணம் சில மோசடி விற்பனையாளர்கள் தரமற்ற பட்டு சேலைகளை பிற ஊர்களில் நெய்து அதற்கு திருபுவனம் பட்டு சேலைகள் என்று சொல்லி பிற ஊர்களிலும், இணையதள மூலமாகவும் விற்று கொள்ளை லாபம் பார்த்து வந்தனர்.
புவிசார் குறியீடு
மோசடி விற்பனையை தடுக்கவும், திருபுவனம் கைத்தறி நெசவு பட்டு சேலைகளின் தரத்தையும் புகழையும் காக்கவும் திருபுவனம் கைத்தறிப் பட்டு நெசவாளர்கள் சட்டப்போராட்டத்தை கையில் எடுத்தனர். தங்களின் கைத்தறி நெசவு பட்டு சேலைகளுக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் வேண்டும் என்று வழக்கு தொடுத்தனர். இதில் 5 ஆண்டு சட்டப்போராட்டத்திற்கு பின்பு தற்போது திருபுவனம் கைத்தறி நெசவு பட்டு சேலைகளுக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்துள்ளது.
நீண்ட சட்ட போராட்டம்
இதுகுறித்து அறிவுசார் சொத்துரிமை கழக வழக்கறிஞர் சஞ்சய் காந்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், 5 ஆண்டு சட்ட போராட்டத்திற்குப் பின் திருபுவனம் பட்டுக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்துள்ளது. திருபுவனம் கைத்தறி பட்டு நெசவாளர்களை தவிர வேறு யாராவது நேரடியாகவோ, இணையதளம் மூலமாகவோ போலியாக விற்பனை செய்தால் சட்டப்படி குற்றம். தஞ்சாவூர் ஓவியம், தஞ்சாவூர் வீணை, தஞ்சாவூர் கலைத்தட்டு, நாச்சியார் கோயில் குத்துவிளக்குக்கும் புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்த நிலையில், திருபுவனம் பட்டுக்கும் புவிசார் அங்கீகாரம் கிடைத்துள்ளது தஞ்சை கலைகளுக்கு மேலும் பெருமை சேர்ந்துள்ளதாக வழக்கறிஞர் சஞ்சய் காந்தி கூறினார்.
கைத்தறி நெசவுக்கு அங்கீகாரம்
பாரம்பரியமாகவும் தனித்தன்மையுடன் பொருட்களை தயாரிக்கும் கலைஞர்களின் வாழக்கையை மேம்படுத்தவும், கலைநயமிக்க பொருட்களின் உற்பத்தி நலிவடையாமல் இருக்கவும், போலிகளை தடுத்திடவும் மத்திய அரசு புவிசார் குறியீடு அங்கீகாரம் வழங்கி கௌரவிக்கிறது. சர்வதேச சந்தைகளில் புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின சந்தை மதிப்பு உயர்ந்து, நலிந்த கலைஞர்களுக்கு நல்ல வருவாய் ஏற்படுத்திடவும் புவிசார் குறியீடு அங்கீகாரம் வழங்கப்படுகிறது. அந்தவகையில் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்துள்ள திருபுவனம் பட்டுப்புடவை பாரம்பரியமாக சோழ மன்னர்கள் காலத்திலிருந்து, கலை நயத்துடன் அழகுற கைத்தறியால் உருவாக்கப்படுவதால் மத்திய அரசு திருபுவனம் பட்டுப் புடவைக்கு புவிசார் குறியீடு அங்கீகாரத்தை வழங்கி கெளரவித்துள்ளது.
புவிசார் குறியீடுக்கு அடையாள சின்னம்
ஒரு குறிப்பிட்ட இடத்தில் தனித்துவமாக தயாரிக்கப்படும் பொருட்களுக்கு புவிசார் குறியீடு தகுதி வழங்கப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை தஞ்சாவூர் கலை தட்டு, காஞ்சிபுரம் பட்டு, நாச்சியார் கோயில் குத்துவிளக்கு, பவானி ஜமுக்காலம், சேலம் வெண்பட்டு வேஷ்டி, பத்தமடை பாய் உள்ளிட்ட 28 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த பொருட்களை எளிதில் அடையாளம் காணும் வகையில் அடையாள சின்னம் முதல் முறையாக வெளியிடப்பட்டுள்ளதாக அறிவுசார் சொத்துரிமை அட்டர்னி சங்க தலைவர் சஞ்சய் காந்தி தெரிவித்துள்ளார். இந்தியாவை பொறுத்தவரை 320 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இனி புவிசார் குறியீடு சான்று பெற்றவர்கள் மட்டுமே இதற்கான பிரத்யேக லோகோவை பயன்படுத்த முடியும். உள்ளூர் மற்றும் வெளியூர் விமான நிலையங்களில் புவி சார் குறியீடு பெற்ற பொருட்கள் விற்பனை செய்ய மத்திய அரசு தீர்மானித்துள்ளது. தமிழ்நாட்டுக்கு புவிசார் குறியீடு கேட்டு பல பொருட்களுக்கு விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.