மும்பை: நவம்பர் 08, 2016 அன்று மாலை "இனி 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது" என மோடி அறிவித்த உடனேயே பலருக்கும் முழி பிதுங்கிவிட்டது.
"இந்தியாவில் இருந்து கறுப்புப் பணம், கள்ள நோட்டுக்கள், தீவிரவாதம் ஆகிய விஷயங்களை வெளியேற்ற, நாட்டை முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு செல்ல கொஞ்ச நாள் என் நாட்டு மக்கள் இந்த சிரமத்தைப் பொறுத்துக் கொள்ள மாட்டீர்களா..?" என உணர்ச்சி வசப்பட்டார் மோடி.
இந்த Demonetization கொண்டு வரும் போது ஆர்பிஐ கவர்னராக இருந்த உர்ஜித் படேலுக்கு அத்தனை விருப்பமில்லை என்றாலும், ஆர்பிஐ இயக்குநர்களுக்கு Demonetization கொண்டு வர கொஞ்சம் மனமும் அதற்கான காரணங்களும் இருந்ததாம்.
அந்த 3 காரணங்கள்
ஏன் Demonetization வேண்டும் என்பதற்கு அரசு மூன்று முக்கிய காரணங்களை முன் வைத்தது. 1. கறுப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுக்கள் ஒழிப்பு 2. Financial Inclusion எனச் சொல்லும் இந்திய நிதி அமைப்புகளுக்குள் மக்களைக் கொண்டு வருவது 3. டிஜிட்டல் பேமென்டுகள் அதிகரிப்பது. இந்த 3 விஷயங்களும் இந்திய பொருளாதாரத்துக்கு தேவையானது என நம்பி அனுமதி கொடுத்தது ஆர்பிஐ.
நடந்ததா..?
மத்திய அரசு ஆர்பிஐ அமைப்பிடம் சொன்ன மூன்று விஷயங்களும் நடந்துவிட்டதா என ஆர்பிஐ வட்டாரத்தில் கேட்டால் கொஞ்சம் தயங்குகிறார்கள். ஒருவழியாக பேசத் தொடங்குகிறார்கள். மூன்றில் இரண்டு நடக்கவே இல்லை. ஒன்று மட்டும் சிறப்பாக நடந்திருக்கிறது என்கிறார்கள் ஆர்பிஐ அதிகாரிகள்.
வந்துவிட்டதே
இந்தியப் பொருளாதாரத்தில் இருக்கும் மொத்த பணப் புழக்கம் 19.3 லட்சம் கோடி ரூபாயில் 15.41 லட்சம் கோடி ரூபாய் தான் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களாக இருந்தன. அந்த 15.41 லட்சம் கோடி ரூபாயில் 15.31 லட்சம் கோடி ரூபாய் மீண்டும் ஆர்பிஐக்கு வந்துவிட்டது. ஆக மீதமுள்ள 10 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே ஆர்பிஐக்கு வரவில்லை.
கறுப்புப் பணம்
Demonetization என்கிற இந்தியாவை உலுக்கும் விஷயத்தை நடத்திய பின் இப்போது கறுப்புப் பணம் பணமாக இல்லை, அது தங்கத்திலோ அல்லது ரியல் எஸ்டேட்டிலோ அல்லது வெளிநாட்டுச் சொத்துக்களாகவோ எங்கோ பாதுகாப்பாக இருக்கிறது. ஆனால் உறுதியாக ரொக்கமாக இல்லை, அதுவும் மக்களுக்கு மத்தியில் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டிருக்கிறது ஆர்பிஐ.
கள்ள நோட்டுக்கள்
மொத்த Demonetization காலத்தில் ஆர்பிஐக்கு வந்த நோட்டுக்களில் வெறும் 400 கோடி ரூபாய் மட்டுமே கள்ள நோட்டுகளாக பிரித்து எடுக்கப்பட்டிருக்கிறது. மொத்த 19.3 லட்சம் கோடி ரூபாயில் 400 கோடி என்பது வெறும் 0.02 சதவிகிதம். இந்த கொசுவைப் பிடிக்க தான் 120 கோடி மக்களை மூன்று மாதங்களுக்கு நடு ரோட்டில் நிற்க வைத்து வதைத்தார்களா..? எனவும் ஆர்பிஐ இப்போது வருந்துகிறதாம்.
100 மற்றும் 50 ரூபாய்
இந்தியாவின் தலைமை வங்கியான ஆர்பிஐ 2018-ல் வெளியிட்ட ஒரு அறிக்கையிலேயே "இந்தியாவில் 100 ரூபாய் நோட்டுக்கள் மற்றும் 50 ரூபாய் நோட்டுக்கள் தான் அதிக அளவில் கள்ள நோட்டுக்களாக புழங்குகிறது. ஆர்பிஐ வெளியிட்ட முறையான புழக்கத்தை விட 35% கூடுதலாக 100 ரூபாய் நோட்டுக்களும், 150 சதவிகிதம் கூடுதலாக 50 ரூபாய் நோட்டுக்களும் புழங்குகிறது. இன்னும் 10 ரூபாய், 20 ரூபாய் நோட்டுக்களில் கள்ளப் பணம் புழங்குகிறதா..? என விசாரிக்கவில்லை" என சொல்லி இருக்கிறது. இப்படி கள்ளப் பணமாக புழங்கு தொகையின் தோராய மதிப்பு 2 லட்சம் கோடி ரூபாயாம். மத்திய அரசு சொன்ன முதல் விஷயம் கறுப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுக்கள் அடிபட்டு விட்டது.
Financial Inclusion
Demonetization-க்கு முன் இந்திய மக்களில் சுமார் 30 கோடி பேர் மட்டுமே வங்கிக் கணக்கு வைத்திருந்தார்கள். மற்றவர்களுக்கு வங்கி சேவை தேவையற்றதாகவும் பெற முடியாததாகவும் இருந்தது. அதை தீர்க்க ஜன் தன் திட்டம் கொண்டு வந்தார்கள். இப்போது ஜன் தன் திட்டத்தின் கீழ் மட்டும் சுமார் 34 கோடி வங்கிக் கணக்குகள் ஏழை எளிய மக்களால் தொடங்கப்பட்டிருக்கின்றன. ஒரு பக்கம் மகிழ்ச்சி என்றாலும் மறு பக்கம் அது பெரிய அளவில் பயன்படாமலேயே இருக்கிறது என்பது தான் ஆர்பிஐ-ன் வேதனை.
ஏன் பயன் இல்லை
ஜன் தன் மூலம் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டாலும் இதுவரை அத்தனை பேரும் அந்த கணக்கை முழுமையாகப் பயன்படுத்தவில்லை. Demonetization கொண்டு வந்த பின் இந்தியப் பொருளாதாரத்தில் ரொக்கத்தின் மூலம் நடக்கும் வியாபாரங்கள் அதிகரித்திருப்பதாக ஆர்பிஐயே கணக்கு சொல்கிறது. ஆக மத்திய அரசு சொன்ன இரண்டாவது விஷயம் இந்த financial inclusion நடந்தது ஆனால் இன்னும் முழு பயனைக் கொடுக்கவில்லை.
டிஜிட்டல் பேமெண்டுகள்
ஆன்லைனிலேயே அனைத்து பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் வழக்கம் Demonetization-க்கு பிறகு பயங்கரமாக அதிகரித்திருக்கிறது. இது ஒன்று தான் கொஞ்சம் ஆறுதலாக விஷயம். நவம்பர் 2016-ல் வெறும் 1,420 கோடி ரூபாயாக இருந்த டிஜிட்டல் பர்வர்த்தனைகள் (UPI + Digital Wallets (Paytm, mobikwik)) பிப்ரவரி 2018-ல் 22,750 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறதாம். இந்த ஒரு விஷயத்துக்காக என்ன எல்லாம் இழந்திருக்கிறோம் என்பதையும் ஆர்பிஐ மதிப்பிட்டிருக்கிறது.
இழப்புகள்
வேலை வாய்ப்புகள், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களுக்கான தொழில்கள், அன்றாடம் வியாபாரம் செய்து பிழைப்பவர்களின் கையில் கிடைக்க வேண்டிய ரூபாய் நோட்டுக்கள் (Working Capital), சிலரின் உயிரிழப்பு (அதிகார பூர்வமாக ஆர்பிஐ சொல்லவில்லை), இந்தியப் பொருளாதார மந்த நிலை என Demonetization ஆல் பெற்றதை விட இழந்தது கொஞ்சம் அதிகம் என வருத்தப்படுகிறார்கள் ஆர்பிஐ இயக்குநர்கள்.