லண்டன்: பெரும்பான்மையான மக்களின் கவலைகளைத் தீர்ப்பதற்கு பதில் புறக்கணிப்பதால்தான் அவர்கள் விழும்போது மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு விடுகிறார்கள். இதனால் முதலாளித்துவத்திற்கு எதிரான புரட்சி ஏற்படும் அபாயம் உள்ளதாக முன்னால் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்தார்.
சாதாரண மக்களின் அன்றாட பொருளாதாரக் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு இன்றைய முதலாளித்துவ வர்க்கம் முன்வருவதில்லை. இதனால் குற்றங்கள் அதிகரிக்கின்றன, குற்றங்கள் பெருகி சமூக பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இவை முதலாளித்துவத்திற்கு விடும் எச்சரிக்கையாகும்.
முன்பெல்லாம் சாதாரண படிப்பின் மூலம் ஒரு நடுத்தர குடும்பத்திற்கு வேலை வாய்ப்பு மிக எளிதாக கிடைத்துவந்தது. ஆனால் இன்றைக்கு அது முடியாத காரியமாகிவிட்டது. அதற்கு காரணம் இன்றைக்கு இருக்கும் கல்வி சூழல்தான் என்று ரகுராம் ராஜன் தெரிவித்தார்.
சமூக சமத்துவமின்மை
சிகாகோ பல்கலை கழக பேராசிரியராக இருக்கும் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநரும், பொருளாதார நிபுணரும் ஆன ரகுராம் ராஜன் பிபிசி ரேடியோ4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசும்போது உலகம் முழுதும் உள்ள அரசுகள் சமூக சமத்துவமின்மை என்ற ஒரு பெரிய விவகாரத்தை புறக்கணிக்கலாகாது என்றார்.
முதலாளித்துவத்துக்கு எதிரான புரட்சி
இன்றைய சூழலில் முதலாளித்துவம் மிகப்பெரிய அச்சுறுத்தலில் உள்ளது. பெரும்பான்மையோரின் பொருளாதாரக் கவலைகளைத் தீர்க்கவும் சம வாய்ப்புகளை வழங்கவும் மறுக்கின்றது, புறக்கணிக்கிறது. இதனால் வீழும் மனிதர்கள் இன்னும் படுமோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு வருகின்றனர். இது நாளடைவில் முதலாளித்துவத்துக்கு எதிரான புரட்சி ஏற்படுத்தும் நிலைக்கு தள்ளப்படுகிறது.
தரமான கல்வி
உற்பத்தி வழிமுறைகளை சமூகமயமாக்கும்போது உண்மையான சமச்சீர் தன்மை தேவை, இதில் பாகுபாடு கூடாது. வாய்ப்புகளை மேம்படுத்த வேண்டிய தேவை உள்ளது. ஒரு காலத்தில் சாதாரண படிப்பின் மூலம் ஒரு நடுத்தர வேலை வாய்ப்பு இருந்தது. அவனுடைய தினசரி தேவையை பூர்த்தி செய்ய போதுமானதாக இருந்தது. ஆனால் மாறிவிட்ட இன்றைய சூழலில் ஒருவன் சமுதாயத்தில் வெற்றி பெற வேண்டுமெனில் நல்ல கல்வி தேவைப்படுகிறது.
உலக பொருளாதார நெருக்கடி
2008ஆம் ஆண்டு உலகப் பொருளாதார நெருக்கடிக்குப் பிறகே அனைத்தும் தலைகீழாக மாறிவிட்டது. பள்ளிகள் சீரழிந்து வருகின்றன, குற்றங்கள் அதிகரிக்கின்றன, குற்றங்கள் கூடக் கூட சமுதாய பாதிப்புகள் அதிகமாகிறது. இந்தப் பாதிப்பினால் உலகப் பொருளாதாரத்துக்கு ஏற்றவாறு சமுதாயம் தங்கள் உறுப்பினர்களைத் தயார்ப்படுத்த முடியவில்லை." என்கிறார் ரகுராம் ராஜன்.
பொருளாதார வீழ்ச்சி
கடந்த 2008ஆம் ஆண்டிலிருந்தே மத்திய அரசின் கடன் 77 சதவிகிதம் அதிகரித்துள்ளது, கார்ப்பரேட் கடன் 51 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அடுத்த பொருளாதார வீழ்ச்சி 2008ஆம் ஆண்டை விட மிக மோசமாகவே இருக்கும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
வர்த்தக தடை
சரக்கு வர்த்தகத்தில் தடைகள் ஏற்படுத்துவது பற்றி ரகுராம் ராஜன் கூறும்போது, "நாம் அவர்களுடைய பொருட்களுக்கு தடைக் கற்களை ஏற்படுத்தினால் அவர்களும் பதிலுக்கு நம்முடைய பொருட்களுக்கும் தடைக் கற்களை ஏற்படுத்தும். அப்படி இருக்கும்போது நீங்கள் எப்படி எல்லைகளைக் கடந்து உங்கள் பொருட்களை வர்த்தகம் செய்ய முடியும்? என்றார் ரகுராம் ராஜன்.