மும்பை: செப்டம்பர் 2017-ல் ஆதித்யா பிர்லா நுவோ நிறுவனம் கிராசிம் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டது. ஆதித்யா பிர்லா நுவோ நிறுவனம் கிராசிம் நிறுவனத்துடன் இணைத்த பின், ஆதித்யா பிர்லா ஃபைனான்ஷியல் சர்வீசஸ் நிறுவனத்தை தனியாக பிரித்து, பங்குச் சந்தையில் பட்டியலிட்டார்கள்.
குறிப்பு: ஆதித்யா பிர்லா ஃபைனான்ஷியல் சர்வீசஸ் என்கிற நிறுவனத்தின் 100 சதவிகிதப் பங்குகளையும், ஆதித்யா பிர்லா நுவோ நிறுவனம் தான் வைத்திருந்தது..
இப்படி முதலில் சேர்ப்பது, பிறகு பிரிப்பது (Merger and Demerger) போன்ற நிகழ்வுகள் இந்தியாவில் நடப்பது அரிதிலும் அரிது. ஆனால் நடந்தது. அதற்கு அகமதாபாத் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயமும் (National Company Law Tribunal (NCLT)) அனுமதி கொடுத்தது.
கடந்த பிப்ரவரி 11, 2019 அன்றே வருமான வரித்துறையில் இருந்து க்ராசிம் நிறுவனத்துக்கு ஒரு விசாரணை நோட்டீஸ் வந்திருக்கிறது. அதன் பின் மீண்டும் மார்ச் 01, 2019 அன்று திருத்தப்பட்ட விசாரணை நோட்டீஸை இந்த க்ராசிம் நிறுவனத்துக்கு அனுப்பி இருக்கிறார்கள்.
இறுதியாக மார்ச் 14, 2019 அன்று க்ராசிம் நிறுவனத்துக்கு வருமான வரித் துறை இணை ஆணையர் அலுவலகத்தில் இருந்து 5,872 கோடி ரூபாய் ஈவுத்தொகை வழங்குதலுக்கான வரியைச் (Dividend Distribution Tax) செலுத்தச் சொல்லி நோட்டிஸ் அனுப்பி இருக்கிறார்களாம்.
இதில் பல்வேறு வருமான வரிச் சட்டப் பிரிவுகளைச் சொல்லி அவைகள் எல்லாம் ஏன் ஆதித்யா பிர்லா குழும நிறுவனங்களுக்கு பொருந்தாது. ஏன் அந்த சட்டப் பிரிவுகள் படி வரி செலுத்தவில்லை எனவும் கேட்டிருக்கிறார்களாம்.
பிர்லா குழும நிறுவனங்கள் உடனடியாக வருமான வரித்துறைக்கு தேவையான விளக்கங்களைக் கொடுத்திருப்பதாக க்ராசிம் நிறுவனம் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசி இருக்கிறார்களாம்.
பிர்லா குழும நிறுவனங்களுக்கு வருமான வரி நோட்டீஸ், 5800 கோடி ரூபாய் வரி பாக்கியாம்..!