டெல்லி: இந்த 2018-19 நிதியாண்டில் நேரடி வரியாக ரூ.11.5 லட்சம் கோடியை வசூலிக்க முன்பு அரசு இலக்கு நிர்ணயம் செய்திருந்தது. ஆனால், நிதிப் பற்றாக்குறை பிரச்சினையால் வரி வசூலை உயர்த்தும் பொருட்டு, இந்த நிதியாண்டுக்கான நேரடி வரி வசூல் இலக்கை ரூ.12 லட்சம் கோடியாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
நேரடி வரிகளில் நிறுவன வரி, தனிநபர் வருமான வரி, சொத்து வரி, பங்கு பரிவர்த்தனை வரி போன்றவை அடங்கும். இந்த வரிகள் யார் மீது விதிக்கப்படுகிறதோ அவர்தான் செலுத்த வேண்டும். மறைமுக வரிகள் போல் மற்றவர்கள் மீது சுமத்த முடியாது. 2017-18ஆம் நிதியாண்டில் நேரடி வரிகள் மூலம் ரூ.9.80 லட்சம் கோடி திரட்ட மத்திய பட்ஜெட்டில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. எனினும் அந்த இலக்கைத் தாண்டி ரூ.10.03 லட்சம் கோடி வசூல் ஆனது.
2017-18 நிதியாண்டின் டிசம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில் நேரடி வரியாக ரூ.8.74 லட்சம் கோடியை மத்திய அரசு வசூலித்துள்ளது. இது 2017-18 நிதியாண்டின் இதே காலத்தில் வசூலிக்கப்பட்ட தொகையைவிட 14.1 சதவிகிதம் கூடுதலாகும். அதேபோல, ஏப்ரல் முதல் டிசம்பர் வரையில் அரசு வழங்கிய ரீஃபண்ட் தொகையின் மதிப்பு ரூ.1.30 லட்சம் கோடியாக உள்ளது. இது சென்ற ஆண்டின் மதிப்பை விட 17 சதவிகிதம் அதிகமாகும்.
வரி வசூல் இலக்கு ரூ.12 லட்சம் கோடி
இந்த 2018-19 நிதியாண்டில் நேரடி வரியாக ரூ.11.5 லட்சம் கோடியை வசூலிக்க முன்பு அரசு இலக்கு நிர்ணயம் செய்திருந்தது. ஆனால், நிதிப் பற்றாக்குறை பிரச்சினையால் வரி வசூலை உயர்த்தும் பொருட்டு, இந்த நிதியாண்டுக்கான நேரடி வரி வசூல் இலக்கை ரூ.12 லட்சம் கோடியாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
அட்வான்ஸ் டாக்ஸ்
இந்த இலக்கை அடைவது மத்திய நேரடி வரிகள் வாரியத்துக்குக் கடினமாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது. எனினும் முன்கூட்டிய வரித் தாக்கல் (advance tax) விவரங்கள் வந்த பிறகுதான் இதுகுறித்த முறையான கணக்கீடு கிடைக்கும். வரி வருவாயை உயர்த்தும் முனைப்பில், வரி செலுத்துவோர் தங்களது நான்காவது மற்றும் கடைசித் தவணையை நடப்பு நிதியாண்டுக்குள் செலுத்தும்படி நேரடி வரிகள் வாரியம் வலியுறுத்தியுள்ளது.
ரீபண்ட் தொகை
முன்கூட்டி செலுத்திய வரிகளாக (Advance Tax) ஏப்ரல்-டிசம்பர் பருவத்தில் சுமார் 3.64 லட்சம் கோடி ரூபாய் வசூலாகி உள்ளது. இது கடந்த நிதி ஆண்டைக்காட்டிலும் 14.5 சதவிகிதம் கூடுதலாகும். அதுபோலவே, ரீபண்ட் (Refund )தொகையாக சுமார் 1.30 லட்சம் கோடி ரூபாயை திரும்ப செலுத்தி உள்ளது. இது கடந்த 2017-18 ஆம் நிதி ஆண்டில் செலுத்தப்பட்ட ரீபண்ட் தொகையைக் காட்டிலும் சுமார் 17 சதவிகிதம் அதிகமாகும். மொத்தத்தில் ஏப்ரல்-டிசம்பர் காலகட்டத்தில், திரும்ப செலுத்திய ரீபண்ட் தொகை போக, சுமார் 7.43 லட்சம் கோடி ரூபாய் வசூலாகி உள்ளது.
நேரடி வரிகள் வாரியத்தலைவர்
ஆண்டுக்கு ரூ.10,000க்கு மேல் வருமானம் கொண்ட பணியாளர்கள் முன்கூட்டிய வரியைச் செலுத்தியாக வேண்டும். வரி வருவாயை உயர்த்தும் நோக்கத்தில் மூத்த வரித் துறை அதிகாரிகளுடன் மத்திய நேரடி வரிகள் வாரியத் தலைவர் பி.சி.மோடி ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தியிருந்தார். சுங்க வரி வசூல் அளவையும் ரூ.1.12 லட்சம் கோடியிலிருந்து ரூ.1.30 லட்சம் கோடியாக மத்திய அரசு சமீபத்தில் உயர்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
நான்கு காலண்டுகளில் வருமான வரி
தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளை தாக்கல் செய்யும் அனைத்து நிறுவனங்களும் ஒவ்வொரு ஆண்டும் தங்கள் நிறுவனத்தின் விற்று முதல் (Turnover) மற்றும் லாபத்தை உத்தேசமாக கணித்து அதற்கேற்ப முன்கூட்டியே வரியை (Advance Tax) செலுத்த வேண்டியது கட்டாயமாகும். அதுபோலவே, தனி நபர்களும் தங்களின் ஆண்டு வருமானத்தை உத்தேசமாக கணித்து அதற்கேற்ப வரியை முன்கூட்டியே செலுத்த வேண்டியது அவசியமாகும். இதனை ஒவ்வொரு நிதி ஆண்டிலும் நான்கு கட்டங்களாக, அதாவது முதல் தவணையாக, ஜூன் மாதமும், இரண்டாவது காலாண்டில் செப்டம்பர் மாதத்திலும், மூன்றாம் காலான்டில் டிசம்பர் மாதத்திலும், இறுதியாக நான்காவது மற்றும் இறுதி காலாண்டில் மார்ச் மாதமும் முன்கூட்டியே வரியை செலுத்துவது அவசியமாகும்.