டெல்லி: எரிக்சன் நிறுவனத்திற்கு தரவேண்டிய பாக்கியை மார்ச் 19ஆம் தேதிக்குள் செலுத்தாவிட்டால் சிறை செல்லவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கெடுவிதித்த நிலையில் அண்ணன் முகேஷ் அம்பானி உதவியால் எரிக்சன் நிறுவனத்திற்கு செலுத்தவேண்டிய மொத்த தொகையான ரூ. 550 கோடியையும் வட்டியோடு சேர்த்து செலுத்திவிட்டார்.
மார்ச் 19ஆம் தேதி கெடு என்ற நிலையில் புதிய திருப்பமாக யாரும் எதிர்பாராமல் அண்ணன் முகேஷ் அம்பானி தோள் கொடுக்க அனில் அம்பானி சிறை செல்வதில் இருந்து தப்பித்தது புதிய திருப்பமாகும்.
முகேஷ் அம்பானி கை கொடுத்து காப்பாற்றியதால், வேற்றுமையை மறந்து மீண்டும் இருவருக்கும் இடையில் உறவு மலர வேண்டும் என்று பெரும்பாலான தொழில் துறையினரின் எதிர்பார்பபாகும்.
சினிமா க்ளைமாக்ஸ்
தமிழ், ஹிந்தி சினிமாவில் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியில் தம்பியை வில்லன் கூட்டத்தினர் கட்டிப்போட்டு அடித்து துவைத்து எடுப்பார்கள். தம்பியின் உடம்பெல்லாம் ரத்தக் காயத்துடன் மயக்க நிலையில் இருப்பார். படம் பார்ப்பவர்கள் என்னவோ, தங்களுடைய குடும்பத்தில் நடக்கும் நிகழ்ச்சியைப் போல உச் கொட்டி தம்பியை காப்பாற்ற அண்ணன் நிச்சயம் வருவார் என்று பார்த்துக்கொண்டு இருப்பார்கள். இறுதியில் அண்ணன் வந்து அனைவரையும் துவைத்து எடுத்து தம்பியை காப்பாற்றி தோளில் தூக்கிக்கொண்டு நடப்பார். படம் பார்ப்பவர்களின் கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்தோடும்.
இருவர் ஒன்றானோம்
சினிமாவில் நடப்பது அப்படியே நிஜத்தில் நடந்தால் எப்படி இருக்கும். ஆமாம், நிஜத்திலும் அது நடந்துவிட்டது தான் திருப்பம். இனிமேல் இது நடக்கவே நடக்காது, சான்ஸே கிடையாது. இவர்கள் இருவரும் சேரவே மாட்டார்கள் என்றுதான் நம்மில் பெரும்பாலானவர்கள் நினைத்தனர். அவர்களின் நினைப்பிற்கு மாறாக யாரும் எதிர்பாராத விதமாக இருவரும் ஒன்று சேர்ந்து விட்டனர்.
பாகப் பிரிவினை
தந்தை திருபாய் அம்பானியின் எதிர்பாராத மறைவிற்கு பின்னர் ஏற்பட்ட சொத்துப் பிரச்சனையில் அண்ணன் முகேஷ் அம்பானியும் தம்பி அனில் அம்பானியும் தந்தை விட்டுச் சென்ற சொத்துக்களையும் தொழில்களையும் மனஸ்தாபத்துடன் பிரித்துக் கொண்டு ஆளுக்கு ஒரு திசையில் நின்றுகொண்டு வேறு வேறு தொழில்களை நடத்தி வருகின்றனர்.
கழுத்தை நெறிக்கும் கடன்
அண்ணன் முகேஷ் தொட்டதெல்லாம் துலங்க மேலே மேலே சென்று கொண்டிருக்கிறார். தம்பி அனில் தொட்டதெல்லாம் வில்லங்கமாக கடன் பிரச்சனையில் சிக்கி வெளியில் வர முடியாமல் முழிபிதுங்கி நிற்கிறார். கடன் கொடுத்தவர்கள் எல்லாம் கடனைக் கேட்டு கழுத்தை நெறிக்க, வேறு வழி இல்லாமல் தன்னுடைய சொத்துக்களை விற்று கடனை அடைக்க முயற்சி எடுத்து வருகிறார்.
ரூ.550 கோடி
அனில் அம்பானியின் ஆர்.காம் நிறுவனத்தின் முக்கிய கடன்தாரரான எரிக்சன் நிறுவனம் தனக்கு வரவேண்டிய ரூ.550 கோடி கடனைக் கேட்டும் தரமுடியாத அனில் அம்பானியை நெருக்க, அவரும் கடனை திருப்பி செலுத்த கால அவகாசம் கேட்கிறார். வேறு வழி இல்லாத எரிக்சன் நிறுவனம் சுப்ரீம் கோர்ட் கதவை தட்ட, சுப்ரீம் கோர்ட்டும் மார்ச் 19ஆம் தேதிதான் இறுதிக் கெடு. அதற்குள் ரு.550 கோடியை செலுத்த வேண்டும் என்றும் இல்லாவிட்டால் 3 மாதம் சிறை தண்டனை நிச்சயம் என்று இறுதிக் கெடு விதித்தது.
பிஎஸ்என்எல் முரண்டு
மற்றொரு பக்கம் ஆர்.காம் நிறுவனத்திற்கு கடன் கொடுத்தவர்களில் பிஸ்என்எல், நிறுவனமும் எஸ்பிஐ வங்கியும் எரிக்சன் நிறுவனத்தின் கடனை அடைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தங்களுக்கு முதலில் கடனை செலுத்திவிட்டு பின்னர்தான் எரிக்சன் நிறுவனத்தின் கடனுக்க முக்கியத்துவம் தரவேண்டும் என்று நிபந்தனை விதித்தன.
திடீர் திருப்பம்
இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக முக்கிய திருப்பமாக ஆர்.காம் நிறுவனம் எரிக்சன் நிறுவனத்திற்கு தரவேண்டிய ரு.550 கோடியை ரூ.21 கோடி வட்டியுடன் மார்ச் 18ஆம் தேதி செலுத்திவிட்டார் என்று எரிக்சன் நிறுவன செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.
செட்டில் பண்ணியாச்சு
ஆர்.காம் செய்தித் தொடர்பாளரும் இது குறித்து தெரிவிக்கையில், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி எங்கள் ஆர்.காம் நிறுவனம் எரிக்சன் நிறுவனத்திற்கு தரவேண்டிய பாக்கியை உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி செலுத்தி விட்டோம் என்று கூறினார்.
அண்ணனுக்கு ஜெ
இது பற்றி கருத்து கூறிய அனில் அம்பானி, "என்னுடைய அண்ணன் முகேஷ் மற்றும் அண்ணியார் நிடாவுக்கும் என்னுடைய இதயப்பூர்வமான நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த இக்கட்டான சூழ்நிலையில் சரியான நேரத்தில் எனக்கு பக்கபலமாக நின்று தோள்கொடுத்து உதவிய இருவருக்கும் நானும் என்னுடைய குடும்பத்தினரும் என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம்" என்று மன நெகிழ்ச்சியுடன் கூறினார்.
காப்பாற்றி அண்ணன்
முகேஷ் அம்பானி, அனில் அம்பானியை கடன் பிரச்சனையில் இருந்து காப்பாற்றுவது இது 2வது முறையாகும். ஏற்கனவே கடந்த ஆண்டு முகேஷ் அம்பானியின் ஆர்.ஜியோ நிறுவனம் ஆர்.காமின் வயர்லெஸ் கருவிகளை ரூ.3000 கோடிக்கு வாங்கி கடன் பிரச்சனையில் இருந்து காப்பாற்றியது குறிப்பிடத்தக்கது.