டெல்லி: ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் ஊழியர்களின் சம்பளம் மற்றும் நிதிச் சிக்கல்களை தீர்க்க வங்கிகள் உதவ முன்வரவேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் திவாலானால் லோக்சபா தேர்தலில் பாஜகவின் வெற்றியை பாதிக்கும் என்பதால் பிரதமர் மோடி நேரடியாக இப்பிரச்சனையில் தலையிட்டு தீர்வு காண முற்பட்டுள்ளார். தன்வசமுள்ள ஜெட் ஏர்வேஸ் பங்குகளை எஸ்பிஐ வங்கிக்கு விற்பனை செய்ய இதிஹாட் ஏர்வேஸ் நிறுவனம் முன்வந்துள்ளது.
ஜெட்ஏர்வேஸ் நிறுவனமானது கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. கடன் நெருக்கடியால் விமானிகள், பொறியாளர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கு 3 மாதம் வரை ஊதியம் வழங்கப்படவில்லை. விமானிகளுக்கும் ஊதியத்தை வழங்காததால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நிதி நெருக்கடியை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை இந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு ரூ. 8,200 கோடி கடன் சுமை உள்ளது. இதில் ரூ. 1,700 கோடி தொகையை மார்ச் மாத இறுதிக்குள் இந்நிறுவனம் செலுத்தியாக வேண்டும்.
வங்கிக்கடனையும் திருப்பி செலுத்த முடியாமல் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் திண்டாடி வருகிறது. தினமும் ஏதாவது ஒரு விமானம் தரையிறக்கப்படுகிறது. இந்நிறுவனம் குத்தகை பாக்கிக்காக 41 விமானங்களை தரையிறக்கியுள்ளது.
8200 கோடி கடன் சுமை
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் கடன் பத்திரங்களுக்கு செவ்வாய்க் கிழமை வட்டி அளிக்க வேண்டும். ஆனால், அதற்கு போதிய நிதி இல்லை என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. கடன் பத்திரத்துக்கு வட்டி செலுத்த முடியாத நிலை உருவாவது இந்நிறுவனத்துக்கு இது இரண்டாவது முறையாகும். மார்ச் 19ஆம் தேதி கடன் பத்திரங்களுக்கு வட்டி அளிக்க வேண்டிய கெடு தேதியாகும். நிதி நெருக்கடி காரணமாக வட்டி அளிக்க முடியவில்லை என்று பங்குச் சந்தைக்கு அனுப்பிய கடிதத்தில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கெடு விதித்த ஊழியர்கள்
நிலுவை ஊதியத்தை மார்ச் 31ம் தேதிக்குள் வழங்க வேண்டும் என்று ஜெட் ஏர்வேஸ் விமானிகள் கெடு விதித்து உள்ளனர். ஊதியம் தராவிட்டால் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் விமானங்களை இயக்கப்போவது இல்லை என்று ஜெட் ஏர்வேஸ் விமானிகள் அறிவித்துள்ளனர். இதற்கிடையே பயணிகளின் குறைகளை உடனடியாக களையுமாறு ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை, விமானப் போக்குவரத்து இயக்குநரகம் கேட்டு கொண்டுள்ளது.
விமான சேவைகள் ரத்து
விஸ்வரூபம் எடுத்துள்ள ஊதிய விவகாரத்தால் விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. ஜெட் ஏர்வேஸ் 78 விமானங்களை தரையிறக்கி நிறுத்தி உள்ளதால் 1,000 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. 603 உள்நாட்டு சேவைகளையும் 382 வெளிநாட்டு சேவைகளையும் ஜெட் ஏர்வேஸ் ரத்து செய்து இருக்கிறது.
அபுதாபி விமான சேவை ரத்து
கடன் சுமையால் அந்நிறுவனம் வங்கிகள், சப்ளையர்கள், விமானிகள் மற்றும் பலருக்கு சம்பள பாக்கியை வைத்துள்ளது. இதனால் கிட்டத்தக்க 41 விமானங்களை இயக்காமல் வைத்துள்ளது ஜெட் ஏர்வேஸ். அபுதாபிக்கு இயக்குவதற்கு போதுமான விமானங்கள் இல்லாத காரணத்தால், அபுதாபிக்கு மறு அறிவிப்பு வரும் வரை இயக்கப்படாது என்றும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மத்திய அரசு பேச்சு
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு கடன் கொடுத்திருக்கும் பொதுத் துறை வங்கிகளிடம் அரசு, இந்த விவகாரம் குறித்து பேசியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நிதி சிக்கலைத் தீர்த்து, மீண்டும் சிறப்பான விமான சேவை வழங்க வேண்டும் என்பதற்காக அதன் நிறுவனர் நரேஷ் கோயல் பல்வேறு வகையில் போராடி வருகிறார்.
மத்திய அரசு அறிக்கை
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் பிரச்னை அதிகரித்துள்ள நிலையில், அந்த நிறுவனத்திடம் இன்று அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து இந்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, ட்விட்டர் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். தற்போது நிலவி வரும் பிரச்னை குறித்து டி.ஜி.சி.ஏ அமைப்பு விரிவான அறிக்கை கொடுக்க வேண்டும் என்று அமைச்சர் சுரேஷ் பிரபு உத்தரவிட்டுள்ளார்.
வேலையில் பாதிப்பு
ஜே.இ.எம்.இ.டப்ள்யூ.ஏ விமானப் பொறியாளர் அமைப்பு, அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில், எங்களுக்கென்று தனிப்பட்ட முறையிலான நிதிச் சுமை உள்ளது. எங்களுக்கு சரியாக சம்பளம் கொடுக்கப்படாததால், நாங்கள் செய்யும் வேலையிலும் அது பிரதிபலிக்கும். இதனால் பல விமானங்களில் சரியான பாதுகாப்பு வசதி இல்லை என்பதை சொல்லிக் கொள்கிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நரேஷ் கோயல் கடிதம்
நிறுவனத்தின் தலைவர் நரேஷ் கோயல், விமானிகளுக்கு எழுதிய கடிதத்தில், நிறுவனத்தின் நிதிச் சிக்கலை சமாளிக்க கொஞ்ச கால அவகாசம் தேவைப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் நிலவி வரும் நிதிச் சிக்கலை சமாளிக்க, எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனத்திடம் பேசி வருவதாக கோயல் தெரிவித்துள்ளார். நிதிச் சிக்கல் தீர்ந்தவுடன் முதல் பணி, ஊழியர்களுக்கு சம்பள பாக்கி கொடுப்பதுதான் என்று கூறியுள்ளார்.
பங்குச்சந்தையில் பங்குகள் சரிவு
ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தொடர்பாக நிலவி வரும் பிரச்னை இன்னும் ஒரு வாரத்திற்குள் தீர்க்கப்படும் என்று எஸ்பிஐ அதிகாரி கூறியுள்ளார். மும்பை பங்குச்சந்தையில் ஜெட் ஏர்வேஸின் பங்கு மளமளவென சரிந்து வருகிறது. இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்து அந்த நிறுவனத்தின் பங்கு 19 சதவிகிதம் சரிவடைந்துள்ளது.
எதிஹாட் ஏர்வேஸ் பங்குகள்
இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான எஸ்பிஐ ஜெட் ஏர்வெஸ் நிறுவனத்துக்கும் கோடிக் கணக்கில் கடன் கொடுத்திருக்கிறது. இப்போதைக்கு ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் 51 சதவிகித பங்குகளை நிறுவனர் மற்றும் தலைவர் நரேஷ் கோயல் வைத்திருக்கிறார். அடுத்த 24 சதவிகித பங்குகளை இதிஹாட் ஏர்வேஸ் நிறுவனம் வைத்திருக்கிறார்கள். ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் 24 சதவிகித பங்குகளை எஸ்பிஐக்கு விற்க இதிஹாட் ஏர்வேஸ் முடிவு செய்துள்ளது.
24 சதவிகித பங்குகளை விற்க முடிவு
தன் வசமுள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் 24 சதவிகித பங்குகளை 400 கோடி ரூபாய்க்கு விற்க இதிஹாட் ஏர்வேஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகயுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக இதிஹாட் ஏர்வேஸ் சிஇஓ டோனி டக்ளரும் எஸ்பிஐ வங்கியின் தலைவர் ரஜ்னீஷ் குமாரும் திங்கட்கிழமையன்று மும்பையில் பேசி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.